தவம் – -சுந்தரிமணியன், புதூர்

அந்திமாலையின் இளவெயிலை ரசித்துக் கொண்டிருந்த கண்மணிக்கு முதுவேனில் காலத்தின் இயற்கையின் அழகு விருப்பமான ஒன்று. அண்டை வீட்டில் பூத்திருந்த செம்பருத்திப்பூ என்னைப் பார்க்கமாட்டாயா? என்பது போல் தலையை நீட்டி எட்டிப்பார்த்தது. நல்ல பால்ரோஸ் கலரில் அதன் இதழ்கள் விரிந்திருந்தன. தவிட்டுக் குருவிகள் எல்லாம் கீச் கீச்சென்று கத்திக்கொண்டு இளம் மாலையைத் தாலாட்டிக் கொண்டிருந்தன. கண்மணிக்கு மனதில் இருந்த அழுத்தமெல்லாம் வடிய இந்த இயற்கைதான் வடிகாலாக இருந்தது.

வீட்டிலிருந்து வந்த கார்முகிலனின் முனகல் சத்தம் தன்னையும் அறியாமல் ஒரு அழுப்பை உண்டு செய்தது. எத்தனை காலம்தான் இந்த நிலை? இதிலிருந்து விடுபட்டு ஓடிப்போய்விடலாமா எனத் தோன்றியது. அதிகாலையில் எழுந்து சமைத்து கார்முகிலனுக்கு பிரஷ் செய்ய பேஸ்ட் எடுத்துக் கொடுத்து கொப்பளிக்கச் செய்து, பெட்பேன் வைத்து கழிவைக் கொட்டி சுத்தம் செய்து, சாப்பிட அமரும்போது சாப்பாடும் ஒருவித வெறுப்பை உண்டு செய்கிறது. இது ஆறுமாசம் ஒரு வருசம் என்றால் பரவாயில்லை, ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டது. இன்னும் இவருக்குச் சரியாவதுபோல் தெரியவில்லை.

டாக்டரிடம் கேட்டால் உடல்நிலை தேறிவிட்டது. ஆனால் காலில் வெரிகோஸ் பெயின் இருப்பதால் நடக்கமுடியாமல் வலி முடக்கிவிட்டது என்றார். மருந்து, மாத்திரை, மருத்துவமனை என்று அலைந்ததுதான் மிச்சம். வருடங்கள் ஓடியும் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. காலையில் இருந்து ஒரே மாதிரியான வேலை மனம் மகிழ்ச்சியில்லாமல் சோர்ந்து போனது.

தனக்கான சமையல், தனக்குப் பிடித்தமான சினிமா, கலை, இலக்கியம் என்ற ரசனைகள் எல்லாம் காணமால் போயின. உறவுகள் எல்லாம் தள்ளிப்போயின. எப்போதும் வருபவர்கள் கூட வந்து எட்டிப்பார்ப்பதில்லை. படுக்கையில் கிடக்கும் இவரின் நிலை இயல்பான வாழ்க்கையின் மகிழ்ச்சியை அழித்துவிட்டது. கண்மணிக்கு துறுதுறுவென்று இருந்த இளமைக்காலங்கள் மனதில் ஓடி அவ்வப்போது ஏக்கத்தைக் கொடுக்கும். ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் வீட்டில் சுகமாக இருக்கலாம் என்ற கனவு தகர்ந்தது. தன்னுடைய உடலும் சோர்வடைவதைக் கண்கூடாக உணர்ந்தாலும் அதைப் பற்றி பெரிதுபடுத்தவோ பேசவோ ஒருவருமில்லை.

மகன் கபிலனுக்கு படிப்பு, அவனது வேலை மட்டுமே சரியாக இருந்தது. அவன் மட்டுமே தனக்கான பிடிமானமாகக் கண்மணி எண்ணினாள். மகனிடம் பேசினால் மனதிலுள்ள கவலைகள் சற்றுக் குறையும். அதுவும் தனது கணவன் கார்முகிலனின் உடல்நிலை, மருத்துவம் பற்றிய பேச்சே மிகுதியாக இருந்தால் புளித்துப் போய்விடும். வீடு தாண்டிய விசயங்கள் பேச மனது அலைபாயும். நேரமில்லாததால் கபிலனும் “பிறகு பேசலாம்மா” என்பான். அத்தோடு ஊமையாகிப் போவாள் கண்மணி.

அன்றொருநாள் திடீரென்று காலையில் காப்பி போட்டு அவரை எழுப்பியும் கார்முகிலன் மூச்சுவிடத் தடுமாறி புஸ் புஸ் என்று துன்பப்பட்டதை உணர்ந்து கபிலனிடம் சொல்லி ஆம்புலன்சுக்கு போன் செய்து வரச்செய்தாள். கபிலனும் அவளும் டிரைவரும் சேர்ந்து கார்முகிலனை ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனையில் சேர்த்து ஐசியுவில் வைத்தார்கள். சாதரணமாகச் சரியாகிவிடுவார் என்று நினைத்த கண்மணிக்கு

“டாக்டர் பிழைப்பது சிரமம்” என்று சொன்னவுடன் திடுக்கிட்டுப் போனாள். தனக்குத் தெரிந்த நண்பர்களை வரச்செய்தாள். கபிலனும் அவளும் சேர்ந்து பேசினார்கள்.

“அம்மா அப்பா பிழைக்கிறாப்பல தெரியல. வீட்டுக்குக் கொண்டு போய்டலாமா?”

“இல்லைப்பா. வேண்டாம் இன்னும் கொண்டுபோய் என்ன செய்யப் போகிறோம். அவர்கூடப் பிறந்தவங்க சொல்லி விட்டும் ஒருத்தர்கூட வந்து எட்டிப்பாக்கல. நமக்கு உதவி செய்ய ஒருத்தரும் இல்ல. வீட்டிற்குக் கொண்டு போனால் சாஸ்திர சம்பிரதாயம் செய்யணும். எடுத்த பிறகு வீட்டைக் கழுவணும் சுத்தம் செய்யணும் வர்றவங்களுக்குச் சாப்பாடு ஏற்பாடு செய்யணும். நம்மால முடியாது. பேசாம மின்மயானத்துக்குக் கொண்டு போய் தகனம் பண்ணறதுதான் சரியா இருக்கும்” என்றாள்.

மறுநாள் காலையில் இறந்துபோன கார்முகிலனின் பிணத்தை மின்மயானம் கொண்டு சென்றார்கள். ஆறுஆண்டுகள் கூடவே இருந்த கணவன் இல்லாதது பெரும்துன்பத்தைத் தந்தாலும் இனிமேல் அரக்கப் பரக்க காலையில் எழவேண்டாம். இரவு அவர் எப்படி இருக்கிறார் என விழித்துப் பார்க்கத் தேவையில்லை. அவரது கழிவையும் சுத்தம் செய்யவேண்டாம். தனக்கான வாழ்க்கையை வாழலாம் என்பது ஒரு வித அமைதியைத் தந்தது.

மறுநாள் தனது தோழி ஆதிரை துக்கம் கேட்கவர,

“என்னப்பா சாரோட பிணத்தை வீட்டுக்கு ஏன் கொண்டுவரல”  என்றவளுக்கு,

“ஊரையே கூட்டி அழுவதால் என்ன ஆகப்போகிறது. இருக்கும்போது ஒருவரும் உதவி செய்யவில்லை. போனபிறகு வந்து என்ன பயன்? அதனால்தான் வீட்டிற்குக் கொண்டுவரவில்லை” என்றாள் தெளிவாக. சொந்தபந்தங்களின் ஆதரவின்மை அவளை இந்த முடிவுக்குக் கொண்டுவந்திருக்கவேண்டும் என்பதை உணர்ந்த ஆதிரை,

“நீ எடுத்தது சரியான முடிவுதான்” என்றாள்.

“இனிமேல் அவர் உயிரோடு இருந்தால் மிகவும் கஷ்டப்படுவார்” என்று கலங்கிய கண்மணியின் கைகளை ஆறுதலாகப் பற்றினாள் ஆதிரை.

ஆறுஆண்டுகளாகப் படுக்கையில் கிடந்த தன் கணவனை எட்டியும் பார்க்காத உறவுகளுக்காக ஏங்குவதை விட தன்னால் முடிந்த அளவு வருடக்கணக்கில் பார்த்து கணவனின் இறுதிப்பயணத்தை முடித்தாயிற்று என்ற நிறைவுதான் அவள் மனதில் நிலைத்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *