Marriage Cops -தேவா, கால்ஸ்ரூக,

29.5.2025

ஜேர்மனியில் Bayern என்ற மாநிலத்தில் வருடத்துக்கு ஒரு தடவை பலநாடுகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல கலைச்சினிமாப்படங்கள் அங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்தியஇயக்குனர்Shashwati Talukar வினால் உருவாக்கப்பட்ட படைப்பான,,Marriage Cops,,தலைப்போடு விவரணசினிமாப்பட வரிசையில் அங்கு திரையிடப்பட்டது.   வடஇந்தியாவில் இயங்கும் பொது-ஆனால் காவல்துறையை உள்ளடக்கிய ஒரு பிரிவு பற்றிய விபரங்களை இவ்விவரணசினிமா முன் கொணர்ந்திருக்கிறது. இயக்குனர்Shashwati Talukar

சமூகத்தில் ஊறிக்கிடக்கும் தீவிரமான விடயங்களை படமாக்குவதில் தேர்ந்தவர்.நிஜமான இந்தியாவை பேசுபொருளாக்கியவர்.இவரின் படைப்புக்கள் யாவும் தரம்சிறந்தவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

வடஇந்தியாவின் நகரமொன்றில் Marriage Cops,, இயங்குகிறது. இந்தகுழு திருமணங்களை நடாத்தி வைப்பவர்களோ அல்லது திருமணபந்தங்களை சேர்த்து வைப்பவர்களோ அல்ல.கணவனின் குடும்பத்தினதும்-கணவனினதும் வன்முறைக்குள்ளாகிய பெண்கள் தாம்  கொடுமையிலிருப்பது பற்றி இத்துறையிடம் வந்து முறையிடக்கூடியவாறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஒரு சேவை. முறையிடுவது மட்டுமல்லாமல் ஒரு தீர்வை தேடி அலையும் பெண்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறது. கூடுதல் பெண்களாலேயே நிர்வகிக்கப்படும் இப்பிரிவு, இலவசமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குடும்பநலசேவை என்கிற வாசகத்தோடு ஜேர்மனியிலும் நீதித்துறை-காவல்துறை சாராத பொதுநிறுவனங்கள் பல நகரங்களிலும் இயங்குகின்றன. பல ஐரோப்பிய நாடுகளிலும் இவ்வாறான பொது நிலையங்கள் இருக்கலாம். ஜேர்மனியில் இயங்குபவை சட்டஒழுங்குகளை இறுக்கமாக கடைப்பிடிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்லாமல், சிறுவர்களுக்கும் இடை-தங்குநிலையங்கள் உள்ளன.இவைகள் மிகுந்த கண்காணிப்போடு சேவை அலுவலர்களால் நடாத்தப்படுகின்றன.மனிதஉரிமை சுதந்திரம் சட்டத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Marriage Cops,,காவல்துறையிடம் முறையிட முன்வரும் அல்லது முறையிட்டபின் பெண்களுக்கு சமூகபிண்ணனியில் முளைக்கக்கூடிய விளவுகள் இருக்கலாம். ஆபத்துக்கள் வரலாம். அப்போது  அவர்கள் எந்நேரத்திலும் இம்மாதிரி கட்டத்தில் இருக்கும்போது காவலரை அழைக்கலாம். நிலையத்தில் ஒருநாளைக்கு ஏறக்குறைய 50கோவைகளாவது விசாரணைக்கு வருகின்றன.காவல்அதிகாரிகள், மனநலவைத்தியர், வழக்கறிஞர் சூழவுள்ள ஒரு அமர்வில் மனைவியும்,கணவனும்(கணவனும் அங்கு கட்டாயம் சமூகஅளிக்க வேண்டும்) தம் முறைப்பாடுகளை செய்யலாம்.  மாறி மாறி ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி முடிந்ததும், மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழ விரும்புகிறார்களா என கேள்வி வைக்கப்படுகிறது. 100சதவீத பெண்கள் பிரிந்துபோகவே விரும்புகிறார்கள். காரணம் கணவன் மனைவியை தாக்குவது. மிக முக்கியமாக 99% மனைவிகள் இந்த வன்முறையை கணவனுக்கு முன்னாலேயே முறையிடுகின்றனர். கணவன் சொல்கிறான்: ,,இவள் ரொம்ப வாயடிக்கிறாள். தாங்க முடியவில்லை. ,,மனைவிக்கு மேல் இனி நீ கைவைக்க கூடாது,, என அறிவுரை கூறப்பட்டு தொடர்ந்த சில வாரங்களின் பின் மீண்டும் அங்கு வரவேண்டும் என்ற உத்தரவு விடுக்கப்படுகிறது.   பொருளாதாரபிண்னனி, குழந்தை போன்ற சிக்கல்  இருப்பதால் ஒரு தீர்வுக்கு வர காலஅவகாசம் அவசியமாகிறது.

காவல்அதிகாரிகள் கூடியளவு பெண்களாயிருப்பதால் பாதிப்புக்குள்ளானோர் தயக்கமற்று எல்லா துன்பங்களையும் அவர்கள் முன்வைக்கின்றனர். அழுகின்றனர். கணவனோடு சேர்ந்து வாழ முடியாதென்பதை தீர்க்கமாக கூறுகின்றனர்.

ஜேர்மனியில் வாழும் பாதிப்புள்ளாக்கப்பட்ட தமிழ்ப்பெண்கள் விசேடமாக புலம்பெயர்ந்திருக்கும் பெண்கள் பலரும் இவ்வாறான சேவைநிலையங்களுக்கு வந்து (தனியாக)முறையிடுவர். ஆனால் தெளிவாக பதில் கூறாமலும், வெளிப்படையாக உண்மைகளை சொல்லக்கூடிய சாத்தியம் இருந்தும் 80சதவீத பெண்கள் மூடுமந்திரம்செய்கிறார்கள். ,,மற்றவருக்கு நம் வீட்டுவிடயம் தெரியக்கூடாது,, என்பதில் கவனமாக இருக்கிறார்கள். மீண்டும் சேர்ந்துவாழ முற்படுகின்றனர். சேர்ந்துவாழ்தல் என்பது அவரவரின் சொந்த விடயம். வேறு தலையீடுகள் தேவையில்லைதான். ஆனால் வன்முறையை பொறுத்துக்கொள்வது, வன்முறையை மேலும் வளர்க்கவும், ,,ஆண் பெண்ணை அடிப்பது நியாயமானதே.ஏனெனில் அவளை அடிக்க எனக்கு உரிமை உண்டு,அவளுக்குஅறிவுஇல்லை(கல்வி,தொழில்பெற்றிருக்கும் பெண்ளும்கூட) ,,ஆகிய கருத்துக்கள் ஊக்கம் கொடுக்கின்றன.இவைகள் இந்திய மற்றும்,தமிழ்சமூகத்தில் ஆழப்புதைந்திருக்கின்றன.   ஆண்  செய்வதே சரியானது என்ற மேலாதிக்க போக்குக்கு வழிசமைத்து கொடுக்கிறது. ஆயினும் புலர்பெயர் தமிழ்சமூகத்தில் ஒரு சில அரிய சிந்தனை-செயலாக்கப்புரட்சிகளும் ஆங்காங்கே உண்டு.

Marriage Cops காவல்அதிகாரிகளின் இயல்பான போக்கை எதுவித கற்பனைகாட்சியுமின்றி , அங்கு நிகழும் நடவடிக்கைகளை அப்படியே படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தியஅரசுஅதிகாரத்தொனியும், அவர்கள் பிரச்சனைகள அணுகும் விதமும் , மக்களை விளிக்கும் விதமும் ஐரோப்பாவுக்கு ஒரு நெருடலாக தெரியலாம். ஒரு சமூகத்தின் அணுகுமுறையை இன்னொரு  சமூகத்தின்  அணுகுமுறைக்குள் புகுத்தமுடியாது. அவை சரியற்றவை,அவை மாறவேண்டும் என்று சொல்வதும் ஒருவகை காலனித்துவமனப்போக்கே. 

ஒரு பெண்ணிடமிருந்துவரும் முறையீடு:

எனக்கு என் கணவன்,குழந்தையோடு தனியாக வாழணும்.என்கணவன் அம்மா பேச்சை மட்டுமே கேட்கிறார்.  மாமியும் எங்கள் குடும்ப விவகாரங்களில் தலையிடுகிறார். நான் அவர் பேச்சை அவமதித்தால்,அவர் தன் மகனுக்கு வேறு பெண்ணை மணமுடித்து வைப்பேன் என்கிறார்.

இப்பெண்ணின் பேச்சில் குறுக்கீடு செய்தபடி மாமியார் இருக்கிறார். அவரை விசாரிப்பு அறையிலிருந்து வெளியே போகும்படி காவல்அதிகாரி விரட்டுகிறார். மாமியார் அங்கிருந்து வெளியேறும்போது ,, மகன் என்னோடுதான் வாழவேண்டும். பிரிந்துபோனால் நான் நஞ்சு குடித்து சாவேன்,,என்கிறார். இதிலே கவனிக்கவேண்டிய விடயம் எனில் ஆணுக்கும் குடும்பத்தால் தரப்படும் அழுத்தம்.

கூட்டுக்குடும்பம் ஆணையும் பெண்ணையும் ஒரு நிரந்தர சிக்கலுக்குள் மூழ்கவைக்கிறது. என்பதற்கு இப்படி பல உதாரணங்கள்.பெரும்பாலான  நிச்சயிக்கப்பட்ட(பெரியோர்களால் முடித்துவைக்கப்பட்ட) திருமணங்கள் வழக்காடப்படுகின்றன. காதல்திருமணங்களும்கூட தோல்வியில் முடிகின்றன.   காவல்நிலையஅதிகாரிகள் இருதரப்புகளிடேயும் ஒரு சமரசம் செய்ய முயல்கின்றனர். முடியாதுபோனால் நீதிமன்றத்தில் வழக்கு போடும் வழிமுறைகளை செய்ய உதவுகிறார்கள். இப்படியும்,இன்னும் பல வன்முறை சார்ந்த அங்கு வழக்குகள் குவிந்தபடி.இங்கு சிந்திக்கவேண்டிய விடயம் என்னவெனில் காவலர்கள் பிரச்சனைகளை அணுகும்விதம். அவர்கள் மலைபோல் வளரும் கோவைகளை எண்ணிப்பார்த்து அலுப்பு கொள்வதில்லை. மனஅழுத்தம் கொள்வதில்லை. 

இந்திய மண்ணுக்கே உரிய அதட்டல்களும் அங்கு உண்டு.பரிவுகளும் உண்டு. இயல்பான வழக்கங்களோடு இந்த இலவச உதவும் கரங்கள் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு சிறிய அளவிலாவது நலம் பெறுகின்றனர். இது ஒரு சிறிய தீர்வு மட்டுமே.பெண்ணுக்கான தேர்வு பலஆண்டுகள் அல்லது தசாப்தங்கள் கடக்கவேண்டும் போல. சட்டங்கள் நிரந்தரமான சாத்தியமா?   சமூகத்தில்-ஒவ்வொரு ஆண்-பெண்ணின் தலைக்குள் அப்பிக்கிடக்கும் ஆணாதிக்க வேர்களை வெட்டியெறிதலே முழுமையாக பெண்ணுக்கு கிடைக்கும் விடுதலை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *