Thanks Maatram
மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் இறுதிப் போரின்போது படுகொலைசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஆயிரக்கணக்கான உறவுகள் நேற்று முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினர்.
போர் நிறைவடைந்து, 16 வருடங்களானதை முன்னிட்டு கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, சரணடைந்த தங்களுடைய உறவுகளை நினைவுகூர்ந்து நேற்று ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினார்கள். கொல்லப்பட்ட தங்களுடைய அன்புக்குரியவர்களின் படங்களை வைத்து, மலர்களால் அலங்கரித்து, அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளை படைத்து உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தார்கள்.
நினைவுகூரலுக்கு அப்பால் கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, சரணடைந்த, காயமடைந்த அன்புக்குரியவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற ஒரே கோரிக்கையே அங்கு திரண்டிருந்த உறவுகளிடம் இருந்தது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏற்பாடு செய்திருந்த ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு’, “முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின எழுச்சியின் அடையாளம். தமிழ் இன அழிப்பை முள்ளிவாய்க்கால் திடலில் நினைவு கூர்வது மீண்டும் எம்மினத்தின் எழுச்சியை சுட்டி நிற்கின்றது. ஈழத்தமிழ் இனமாக சிங்கள அரசு அடக்குமுறைக்கெதிராகவும், சிங்கள ஒற்றையாட்சி அரசியல் அலகை தனது புவிசார் நலன்களுக்காக தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்பின் அடக்குமுறைக்கெதிராகவும், போராட அணிதிரள்வதை தவிர வேறு எவ்வித தெரிவும் எமக்கு முன் வைக்கப்படவில்லை” என தனது முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2025’ இல் குறிப்பிட்டுள்ளது.

