ஒன்பதாவது குரல்

தாட்சாயணி  

பெரியதேக்கிலையைக் கூம்பாக்கி அதற்குள் செவ்வரத்தை,நித்யகல்யாணிப் பூக்களை இட்டிருந்தாள்.அந்தக்கூம்பை இடக் கைக்கு மாற்றிக்கொண்டுசேலைத்தலைப்பை சுற்றி எடுத்து அதன்முனையில் கற்பூரத்தையும்,தீப்பெட்டியையும் வைத்து முடிந்தாள்.பின்னர்,சேலைத்தலைப்பால் தலையைப் போர்த்தி, நுனியில்முடிந்த பகுதியை வலக்கையால் இறுகப்பொத்திக்கொண்டாள்.

 வீட்டிலிருந்துவெளிக்கிட்டபோது மழை வருவதற்கான அசுமாத்தம்கொஞ்சமும் இல்லை.ஒழுங்கைக்குள்  இறங்கிஅவள் நடக்கத் தொடங்கும்போதே மேகமும்கொஞ்சம்,கொஞ்சமாய்க் கறுக்கத் தொடங்கிவிட்டது. கறுப்பு கொஞ்ச நேரத்தில் ஊரையும்மூடுகிற அளவுக்கு வளர்ந்தது.எப்படி மேகம் கறுத்தாலும்,கோவிலுக்குப் போகிறவரைக்கும் துளி விழாமலிருக்க வேண்டுமே,என மனதுக்குள் பிரார்த்தித்தபடிதான்எட்டி நடந்தாள் பாக்கியலட்சுமி.மழை அவளுக்குக் காத்திராமல்’சில்’லென்று அவள்மேல் விழுந்துதெறித்தது.
        முதல்மழைத்துளிகள் கனமாகவிருந்தன.

 பெரியதேக்கிலையைக் கூம்பாக்கி அதற்குள் செவ்வரத்தை,நித்யகல்யாணிப் பூக்களை இட்டிருந்தாள்.அந்தக்கூம்பை இடக் கைக்கு மாற்றிக்கொண்டுசேலைத்தலைப்பை சுற்றி எடுத்து அதன்முனையில் கற்பூரத்தையும்,தீப்பெட்டியையும் வைத்து முடிந்தாள்.பின்னர்,சேலைத்தலைப்பால் தலையைப் போர்த்தி, நுனியில்முடிந்த பகுதியை வலக்கையால் இறுகப்பொத்திக்கொண்டாள்.
         தலைசின்ன நடுக்கத்தோடிருந்தது.
         மழைத்துளிஈரத்தில் குளிர்ந்து,காற்றும் வீச,தலையின் ஆட்டம்இன்னும் கொஞ்சம் அதிகரித்தது.
         தேக்கிலைக்கூம்பினுள் மழைத்துளிகள் விழுந்து பூக்கள் சிலிர்த்தன.
        “பூவுக்குத்தீர்த்தம் மாதிரி மழை விழுந்தாநல்லதுதான்…கற்பூரமும்,தீப்பெட்டியும் நனையக்கூடா…”
        வலதுகரம்மறுபடியும் சேலைத்தலைப்பை இறுக்கிக் கொண்டது      உள்ளேஈரலித்திருக்கவில்லை என்பதை உள்ளங்கை உணர்ந்துகொண்டது.
      “என்னபாக்கியக்கா..இந்த மழையுக்கை…” சைக்கிளில்வேகமாய்ப் போய்க் கொண்டிருந்த உருத்திரன்,போகிற போக்கில் கேட்டபடி,அவளது பதிலுக்குக் காத்திராமல்விரைந்தான்.
      “மழையென்ன…வெயிலென்ன…உதெல்லாம் பாத்துக் கொண்டிருந்தாக் காரியம் ஏலுமே…” அவள்தனக்குள் முணுமுணுத்தபடி நடந்தாள்.வேலிக்கரையில் ஒதுங்கி நடந்தும்,முகத்திலும்,கைகளிலும் நீர் பரவிவிட எட்டிநடந்து,தில்லையம்பலத்தாரின் சங்கடப்படலையில் ஒதுங்கி நின்றுகொண்டாள்.உடம்புவெடவெடத்தது.
       குளிர்உடம்புக்குள் நுழைந்துவிட வழிதேடியது.
       கையிலிருந்துவழிந்த நீர் உள்ளங்கைக்குள் வழிந்து,சேலைத் தலைப்பினூடு கசிந்து,கற்பூரத்தை நனைத்து விடும்போல் தோன்றக்கையை இறுக்கியபடியே உதறிக் கொண்டாள்.
       குடிசைஒழுகியிருக்கும்.
       பிள்ளைகள்மூவரும்,பள்ளிக்கூடம் வெளிக்கிடும் அவசரத்தில் அந்தரித்துப் போயிருப்பார்கள் என்பது மனதில் ஒருசலனத்தை ஏற்படுத்தியது.
       நேற்றைக்குப்பக்கத்துவளவு மங்கை தோட்டத்தில் பிடுங்கியதாய்க்கொடுத்த மரவள்ளிக் கிழங்கினைத் துண்டுகளாக்கி அவித்து வைத்துவிட்டு வந்திருந்தாள்.
       நின்றிருந்தால்,நிரூபன் தேங்காய்ச் சம்பல்வேண்டுமென்று,அடம்பிடித்திருப்பான்.இப்போது கூட அக்காக்களிடம்ஏதாவது முணுமுணுத்து,முணுமுணுத்துத்தான் சாப்பிட்டிருப்பான்.ஆனால்,மழைக்கு அவித்தமரவள்ளிக்கிழங்கு சுதியாகவிருக்கும்.
       இந்தமட்டிலாவதுகிடைத்ததே என்று பெட்டைகள் இரண்டும்திருப்திப்பட்டுக் கொள்ளும்.இதுகாலவரைக்கும் பட்ட கஷ்டங்கள் அவர்களை,அந்த அளவிற்குப் பக்குவப்படுத்தியிருந்ததென்றால்,அவர்களிருவருக்கும் இருபதோ,இருபத்திரெண்டோ  வயதல்ல.பதினாலு,பதினைந்து வயதுதான்.இருந்தாலும் அவ்வளவு பக்குவம்.      இவளுக்கும்மரவள்ளிக்கிழங்கு  ஆசையாகத்தான் இருந்தது.ஆனால்,அவள் இப்போதெல்லாம்,காலையில் சாப்பிடுவதில்லை.அதென்னவோ,சாப்பிடக் கையிலேடுத்தாலே,இளங்கோவின் ஞாபகம் வந்து விடுகிறது.அவனது குரல் எங்கிருந்தோ’அம்மா’வென்று இவளை விழித்துஅழைப்பது போலிருக்கும்.மூன்று வருடங்கள் ஆகிற்றுஅவள் காலையில் சாப்பிடுவதை விடுத்து.அது என்னவோ ஒருவிரதம் போல…அவன் வந்தபிறகுதான் இனிமேல் காலைச் சாப்பாடுஎன்பதுபோலவும்…
      மழைகொஞ்சம்போல் ஒடுங்கிக் கொண்டு வந்தது.
      இனியும்நின்றால் நேரம் போய்விடும் என்பதுபோல,அவள் மறுபடியும் தெருவுக்குவந்தாள்.கொஞ்ச நேரமென்றாலும் பெய்தமழையால் சிற்சில பகுதிகளில் நீர்சுழித்து சிறிய ஓடைகளாய் ஓடியது.
      ஆட்கள்அதிகமில்லை.
      மழைவரும் என்று தெரியாமல் வெளிக்கிட்டசிலர் இவளைப்போல் எங்கேனும் ஒதுங்கியிருந்தனர்.மற்றவர்கள் வீட்டை விட்டு வெளிக்கிடவில்லை.
      இரண்டுநிமிடத்துள் கோவிலை அடைந்துவிட்டாள்.
      கோவிலென்றால்,கோபுரத்தோடு நிமிர்ந்து நிற்கும் கட்டட அடுக்குகளல்ல.
      ஒருஆலமரம்.அதற்குக் கீழ் வட்டவடிவ சீமேந்துப்பீடம்.அதில் நிறுத்தப்பட்ட சிலசூலங்கள்.அவ்வளவே.
      வழக்கமாயெனில்பக்கத்துக் கிணற்றில் நீர் மொண்டு அந்தஇடத்தைக் கழுவுவாள் பாக்கியலட்சுமி.

இன்றைக்கு அவ்வளவு தேவையில்லை.மழைஎல்லாவற்றையும் கழுவியிருக்கிறது.     தேக்கிலைக்குள்பொதிந்து வைத்திருந்த பூக்களைக் கிள்ளி சூலங்களின் முன்வைத்தாள்.
சேலைத்தலைப்பைப் பிரித்தபோது கற்பூரவில்லைகள்  ஈரலித்துப் பொருமியிருந்தன.எங்காவது ஈரம் படாத பகுதிஇருக்கிறதா எனப் பார்த்தாள்.எங்குமில்லை.ஆலமர அடியினுள் குடைவாய்க், காய்ந்திருந்த பொந்தினுள்,கற்பூரத்தையும்,தீப்பெட்டியையும் வைத்து விட்டு,சேலையைஉதறி,முகத்திலும்,இரு கைகளிலும் உள்ளஈரத்தைத் துடைத்துக் கொண்டாள்.
    

இப்போதுகாற்று மழையற்று உலர்வாக இருந்தது.
     கற்பூரவில்லைகளைஎடுத்துவைத்து தீப்பெட்டியினுள் குச்சினைஎடுத்துத் தட்டினாள்.
     ஈரலித்தகுச்சிகளின் மருந்து உதிர்ந்து விழுந்தது.
     தொண்டைக்குள்ஏக்கம் எட்டிப்பார்த்தது.
     இரண்டுகுச்சிகள் வீணாகிப் போயின.
     கைகளைமறுபடியும் துடைத்துக் கொண்டாள்.

தீப்பெட்டியின் மருந்து தடவிய பக்கங்களை  மணிக்கட்டில் வைத்துத் தேய்த்தாள்.கையில் கொஞ்சம் சூடேறினாற்போலிருந்தது.மறுபடியும் தீக்குச்சியொன்றை எடுத்து தீப்பெட்டியின் விளிம்புகளில்தேய்த்தாள்.
 கொஞ்சம்தயங்கிவிட்டுப் பற்றிக் கொண்டது நெருப்பு.’பக்’கென்று கற்பூரத்தில்குச்சியை வைத்துத் தீயை இடம் மாற்றினாள்.காற்றோ,இலைகளிலிருந்து வடியும்நீர்த்துளிகளோ கற்பூரத்தை அணைத்துவிடாதிருக்க,தீபத்தை இரு கைகளாலும்வளைத்துப் பிடித்தாள்.பிறகு,இரு கரங்களாலும்தீபத்தை ஒற்றிக் கண்களில் தொட்டுக்கொண்டாள்.மழைக்குளிரில் விறைத்திருந்த கரங்களுக்குள்,கற்பூரத்தின் வாசனையும்,வெப்பமும் புகுந்து உள்ளங்கைகளுக்குள் ஒரு வெதுவெதுப்பைத் தொற்றவைத்தது.அந்த ஆறுதலான வெதுவெதுப்பு,மனதுக்குள்ளும் ஏறிப் படர்ந்தது.
    

கற்பூரத்தைஒற்றிக் கொண்டபின் மூன்று தடவைகள் வைரவரைச்சுற்றி வந்தாள்.   “அவனைக்கெதீலை விடப்பண்ணப்பு.அவனுக்கு எந்தக் கஷ்டமும் வரக்கூடா…” என மனம் திரும்பத் திரும்பபிரார்த்தித்துக் கொண்டது.பிரார்த்திக்கும் ஒவ்வொருகணமும் இளங்கோவின் முகம் அவள் முன்நீண்டு மறைந்தது.
     “ரெண்டுபிள்ளைகளையும் பறிச்சுப் போட்டாய்.இனி மற்றதையும் பறிச்சுப்போடாதையப்பன்…” என மனம் தொடர்ந்தது.
     “மற்றதுகள்எல்லாம் எங்கையிருந்தாலும்,கூட ஆரெண்டாலும் இருக்கினம்.அவன் மட்டும் தான்தனிச்சுப் போட்டான்…” மீண்டும் மன்றாட்டம்.
     “உன்னட்டைஎடுத்ததுகளைக்கவனமாப் பாத்துக் கொள்ளப்பு.திரும்பியும் பிறக்கிறதெண்டா என்ரை வம்சத்துக்குள்ளையே வரட்டும்…”
     திரும்பிநடந்தபோது மீண்டும் அவனது ஞாபகம் வந்தது.இறுதியாய் அவனைக் கடவுளிடம் ஒப்புக்கொடுக்கவேண்டும் போலிருந்தது.
     “இளங்கோவைக்கெதீலை கொண்டு வந்திடப்பு.அவன்தாங்கமாட்டான் ஒண்டையும் …”என மனதுக்குள் கோரிக்கைவிட்டபடி திரும்பினாள்
    

 இப்போதுமழை முற்றாகவே நின்றுவிட்டது.
     வெயில்லேசாக மின்னியது.
     நடப்பதுலேசாகவிருந்தது
     போகிறவழியில் நிரூபனும்.நித்யாவும்,புவனாவும் பாடசாலைப் பைகளோடு வந்துகொண்டிருந்தனர்.
     “சாப்பிட்டியேகுஞ்சு …” என்றால் நிரூபனைப் பார்த்து.
     “சுப்பர்மரவள்ளிக்கிழங்கு…” என்று துள்ளினான் நிரூபன்.
     அவிக்கும்போதே நல்ல மாவாய்க் கரைந்திருந்தது.அதுதான் அவனுக்குப் பிடித்ததுபோல.
     “சாப்பிடீங்களேயெடி…” எனறாள் பாக்கியலட்சுமி பெண்களைப் பார்த்து. “எங்கைசாப்பிடுறது…விட்டாலெல்லோ…கொஞ்சம்,கொஞ்சமெண்டு கேட்டு,எங்கடயையும் சேர்த்து அவன் தான் திண்டது…” எனறாள் நித்யா
 சலிப்பாக.
     சலித்துக்கொண்டாலும் அவன் மேல் அவர்களுக்குச்செல்லம் கூட.அவர்களாகவே கொடுத்திருப்பார்கள்.
     “பள்ளிக்கூடம்பெல் அடிக்கப் போகுது…” என்று சொல்லிக் கொண்டேஓடினான் நிரூபன்.நித்யாவும்,புவனாவும்பின்னால் ஓடினார்கள்.
     நல்லவேளை.அவர்கள் கிளம்பி வருவதற்கிடையில்மழை விட்டது என நினைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தாள்.
    

முன்புறச்செத்தையில் கொடியில் கிடந்த உடுப்புக்கள் இறைந்துகிடந்தன.
      நித்யாதான்  அள்ளிப் போட்டிருப்பாள்.
      இவள்அவற்றை அள்ளி உள்புறக் கொடியில்போட்டாள்.
      இளங்கோவும்,நிரூபனைப் போல் தான் இருந்தான்.அவனும் அப்போது நல்லசெல்லமாய்த் தான் இருந்தான்.
     

வசந்தாவும்,பவிதாவும் சாப்பாட்டில் அவனுக்கென்று விசேடமாய் எடுத்துக் கொடுப்பார்கள்.அது மீனாயிருந்தாலென்ன…? பொரியலாயிருந்தாலென்ன…?தங்களுடையதில் அவனுக்கும் பங்கு கொடுப்பார்கள்.அவன்தான் நிரூபனைத் தூக்கி வளர்த்தான்.நிரூபனென்றால்போதும் அவனுக்கு.நிரூபனுக்கு ஒரு வயதாய் இருந்தபோதுஇளங்கோவுக்குப் பதினாலு வயது தான்.நாளும்,பொழுதும் தூக்கிக்கொண்டு தான்  திரிவான். வேடிக்கை காட்டுவான்.நிரூபனும் இளங்கோ போன கொஞ்சநாளில் ஏங்கிப் போய்த்தானிருந்தான்.இப்போதுகொஞ்ச நாட்களாகத் தான் அந்த ஏக்கத்திலிருந்துவிடுபட்டான்.
     

அவளுடையவாழ்க்கையிலும் எத்தனை ஏக்கங்கள்…?முதலில்நிரூபன் பிறந்த கையோடு அவளதுகணவன் அவளைக் கை விட்டுப்போனான்.எட்டுப் பிள்ளைகளோடும் அவள்தனித்துப் போனாள்.
     

யாழ்ப்பாணத்தில்இருந்திருந்தாலாவது சமாளித்திருக்கலாம்.ஐந்து பிள்ளைகளோடு யாழ்ப்பாணத்திலிருந்தஅவளைக் காடு,கழனியெல்லாம்  காட்டி,வன்னிக்கு அவள் கணவன் கூட்டிச்சென்றதால்தான் அவள் முள்ளிவாய்க்கால் வரைமுட்டுப்பட நேர்ந்தது.அதுவும் எட்டுப் பிள்ளைகளோடு.
     எட்டுப்பிள்ளைகள்.நினைக்கவே அயர்ச்சியாக இருக்கிறது அவளுக்கு.எப்படித்தான் பெற்றாளோ…?எப்படியோ அதற்குக் காரணமானவன் அவளைக் கைவிட்டுப் போய்விட்டான்.அதற்குப் பிறகு அவனைப் பற்றிநினைத்தென்ன பலன்…?யாருடன் சேர்ந்துவசிக்கிரானோ…?அல்லது இந்தச் சண்டைக்குள்செத்துத் தான் தொலைந்தானோ…?எதுவும்தெரியாமலே குங்குமத்தோடு வளைய வருகிறாள்.
    அடுத்தஏக்கம் கண்ணனின் வடிவில் வந்தது.
    கண்ணனைஅவள் பெரிதும் நம்பியிருந்தாள்.
    ஐந்தாவதுபிள்ளை அவன்.படிப்பில் கெட்டிக்காரன்.அவளது கஷ்டத்தையும் உணர்ந்துகொண்டவன்.
    அவனை யாழ்ப்பாணத்தில் தன் அக்கா வீட்டில்அனுப்பிப் படிக்க வைத்தாள் பாக்கியலட்சுமி.எப்படியும் அவன் படித்து முன்னுக்குவந்துவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தது.முதல் தடவை பாதைதிறந்திருந்தபோது அவன் யாழ்ப்பாணத்திற்குப் படிக்கவந்தான்.ஏ.எல் படித்துமூன்று ‘ஏ’யும் எடுத்துவிட்டான்.பல்கலைக்கழகம் போவதற்கு முன் குடும்பத்திற்கு உதவிசெய்ய வேண்டுமென்று அவன் அவளிடம் திரும்பிவந்தான்.அவன் வராமலே இருந்திருக்கலாம்.வந்துவிட்டான்.
   

அவனுக்குஇயல்பிலேயே மிருகங்களின் குரலை நடித்துக் காட்டும்திறமை இருந்தது.நாயைப் போல,கிளியைப்போல,யானையைப் போலெல்லாம் சத்தம் போட்டுக் காட்டுவான்.அவனது திறமை அவனுக்குசிறியதொரு வேலையைப் பெற்றுக்.கொடுத்தது.இயக்கத்தினுடைய.வானொலியிலும்,தொலைக்காட்சியிலும் இப்படி ஏதாவது ஆடு போல,மாடு போல,நாய்போல சத்தமெழுப்ப வேண்டிய நேரங்களில் அவனைக்கூப்பிடுவார்கள்.அவன் போய் அப்படியேநடித்துக் கொடுத்து விட்டு,கொஞ்சம் பணத்தோடுதிரும்புவான்.ஏதோ கைச் செலவுக்குஎன்பது போல மிகக் குறைவானபணம்.கடைசியில் அவன் இரணைப்பாலையில் வந்தஷெல்லில் துடிதுடித்துக் கீழே விழுந்துவிட்டான்.கொஞ்சத்தூரத்த்ற்கு அவனைச் சாக்கில் போட்டுஇழுத்துக் கொண்டு போனார்கள்.பிறகு,ஷெல் விழும் வேகத்திற்குஈடு கொடுக்கமுடியாமல் ஓரிடத்தில் கிடங்கு தோண்டிப் புதைத்துவிட்டுப் போனார்கள்.இப்போது கூட எங்கேயாவதுகுட்டிநாய் குரைத்தால்,கிளி கீச்சிட்டால் அவனதுஞாபகம் கண்களை நனைத்து விடுகிறது.
      

கண்ணனைப்புதைக்கவாவது அவகாசம் இருந்தது.கோகுலனைப்புதைக்கக் கூடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.முள்ளிவாய்க்காலில்,கடைசியாய்,இனி,எந்த எல்லையும்இல்லை என்றிருந்த கணத்தில், அவன் யாருடைய துப்பாக்கிச்சூட்டுக்கு இறந்தான் என்று தெரியாமலே,குண்டுபட்டுச் செத்தான்.அவனைப் பார்த்துக் கொண்டுநின்றால்,மிஞ்சி நின்ற  நான்கையும்காப்பாற்ற முடியாதென்றுதான், அவனைக் கைவிட்டு,விட்டுவந்தாள்.இளங்கோவும்,நிரூபனும்,நித்யாவும்,புவனாவும் தான் இவளோடு முள்ளிவாய்க்காலைக்கடைசியாய்க் கடந்தார்கள். அதற்கப்பால்,இளங்கோவை இவள் கத்திக் கதறப்பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள்.இவள்மற்ற மூன்று சிறிசுகளையும்,கைக்குள்பொத்திக் கொண்டு செட்டிகுளம் முகாமில்ஒரு வருடத்திற்கு அல்லாடினாள்.அதற்குப் பிறகு அவர்களின் ‘குற்றமற்றதன்மை’ நிரூபிக்கப்பட்டபின்பு,பட்டதெல்லாம் போதுமென்று யாழ்ப்பாணத்திற்கு வந்தார்கள்.மூன்று பிள்ளைகளுக்கும்,யாழ்ப்பாணம்புதிசு தான்.யாழ்ப்பாணத்தில் பிறந்தஐந்தும் யாழ்ப்பாணத்தை விட்டு நெடுந்தூரம் விலகிவிட்டன.
      

வசந்தாவைமுன்னமே கட்டிக் கொடுத்தாயிற்று.வவுனியாவில்மூன்று குழந்தைகளோடு இருக்கிறாள் அவள்.
 ச
ந்திரன்முன்னமே ‘அவங்களோடு’ போய்ச் சேர்ந்து விட்டான்.அங்கேயே ஒரு ‘இயக்கப்’ பெட்டையைக் கல்யாணமும் கட்டிக் கொண்டான்.பிறகு,சந்தர்ப்பம் கிடைத்த ஒரு பொழுதில்அவன்,அவளோடும்,ஒரு வயதுக் குழந்தையோடும்கடல் தாண்டிப் போய் விட்டான் .இப்போதுஇந்தியாவில் இருப்பதாகக் கேள்வி.பவிதா கிளிநொச்சியில்கணவனோடு வசிக்கிறாள்.அவள் கணவனுக்கு அங்கேகாணி,பூமி இருக்கிறது.அதை,விட்டுவிட்டு வர அவளுக்கு விருப்பமில்லை.இவர்களிருந்த முகாமின் இன்னொரு மூலையில் தான்அவர்களும் இருந்தார்கள்.விடுவிக்கப்பட்டபோது,இவர்கள் யாழ்ப்பாணம் வரவிரும்புவதாய்ப் பதிய,அவர்கள் கிளிநொச்சிபோக விரும்புவதாய்ப் பதிந்து கொண்டார்கள்.   பெய்தமழையைப் பற்றிக் கொஞ்சமும்  பொருட்படுத்தாமல்வெயில் தன்பாட்டில் எட்டிப் பார்த்தது.இவள்கொஞ்சம்தேநீரைப் போட்டுக் குடித்தாள்.வெளிக்கிட்டால் தான் எங்கேனும் கூலிவேலை கிடைக்கும் எனக் கிளம்பியபோது கிராமஅலுவலர் வந்தார்.
      “வெளிநாட்டுநிறுவனகாரர் வரீனை.கேக்கிற விசயத்தைச்சொல்லணை…” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
      “உவங்களுக்குஉதுவே வேலையாப் போச்சுது.இண்டையக் கூலி துலைஞ்சுது…” எனமுணுமுணுத்தபடி அவள் குந்தில் சாய்ந்தாள்.
      இரண்டுபெண்களும்,ஒரு பையனும் வந்திருந்தனர்.
      இவளதுகுடும்ப விபரத்தைக் கேட்டுப் பதிந்தனர்.
      “எத்தினைபிள்ளையள் அம்மாக்கு…?”
      “எட்டு”
      “குடும்பக்காட்டிலை மூண்டு தானை கிடக்கு…”
      “ஒவ்வொருபிள்ளையும் ஒவ்வொரு இடத்தை…இஞ்சைஉள்ளதைத்தானை விதானை ஐயா பதிவார்…”
      “எங்கைஎங்கை  இருக்கினம்…ஒண்டொண்டாய்ச் சொல்லுங்கோ…”
      “ஏன்ஏதும் தரப் போறியளே…”
      “இல்லையம்மாஇடம்பெயர்ந்த ஆக்களிண்டை விபரம் திரட்டத்தான்…”
      “திருப்பித்திருப்பி உதைத்தான் செய்யுங்கோ…” சலித்தாள் பாக்கியலட்சுமி.
      “நாங்கள்இப்பதானம்மா வாறம்…” என்றால் வந்தவர்களில் ஒருத்தி.
      “சரி,சரி சொல்லுறன் …”என்றபாக்கியலட்சுமி தொடர்ந்தாள்.
      “என்ரைமூத்தவன் இந்தியாவிலை…அடுத்தது வவுனியாவிலை…இன்னொண்டு கிளிநொச்சியிலை…”
      “என்னம்மாதனியத்தனிய இருக்கினமே…”
      “இல்லை,கட்டிக் குடும்பமா இருக்கீனை…”
      “ம்…அடுத்தாள்…”
      “அடுத்தவன்முள்ளிவாய்க்காலிலை  மோசம் போட்டான்…” கேவினாள்.
அவர்கள் பேசாமல் இருந்தனர்.
      “அவனின்டைஉடம்பைக்கூட எடுக்கேலாமல் போச்சு…என்ன பாவம் செய்தனோ…?”
யாரும்,எதுவும் பேசவில்லை.
    “இன்னொருத்தன்,அவன் மூண்டு ‘ஏ’ எடுத்தவன்.இரணைப்பாலையிலை அவனைச் சாகக் குடுத்தன்.என்ன கெட்டிக்காரப் பெடியன்.என்னட்டை வரவேணும் எண்டு வந்து கடைசீலைதன்ரை உயிரைக் குடுத்திட்டான்…அறுவாங்கள்..என்ரை குஞ்சுகளைக் கொண்டுபோட்டாங்கள்….”
    அவளது உலர்ந்த கண்களில் வடிந்தஈரம் மறைந்ததும் வந்திருந்த பையன் கேட்டான்.
    “வேறை…”
    “ஒருத்தன்தடுப்பிலை…உம்மைப்போலை தான் மெல்லிய பெடியன்…இப்ப என்ன பாடுபடுறானோதெரியா…”
    வந்திருந்தபெண்கள் அவனைப் பார்த்து தங்களுக்குள்கண் காட்டிச் சிரித்தார்கள்.அவர்களின் கேலியிலிருந்து தப்ப அவன் மீண்டும்
    “மற்றாக்கள்…” என்றான்.
    “இஞ்சைஎன்னோடை மூண்டு பிள்ளையள் படிக்குதுகள்…”
    “எத்தினைபிள்ளையளம்மா…உங்களுக்கு…” குறுக்கிட்டாள் ஒருத்தி.
    “ஏன்,இவ்வளவு நேரம் என்னசொன்னவ…?” என்றான் அந்த இளைஞன்.
    “எண்ணிப்பாரும்,ஒன்பது வரூது…”
    “எத்தினைபிள்ளையளம்மா…சரியாச் சொல்லுங்கோ…”
    “ஒன்பது…”
    அவளுக்கென்னமனக் குழப்பமோ? எனத் தோன்றியது அவர்களுக்கு.
    “என்னம்மா,அடிக்கடி மாத்தி மாத்திச் சொல்லுறியள்…”
    “நீங்கள்ஏதோ தரப் போறியள் எண்டேநான் மாத்திச் சொல்லுறன்…எனக்குப் பிள்ளையள் ஒன்பது தான்…”
    “அப்பஎட்டெண்டியள்…”
    “நான் பெத்தது எட்டுத்தான்…பெத்தாமட்டுமே பிள்ளை.வளத்தாப் பிள்ளையில்லையே…”
     அவர்கள்அவளைத் திகைத்துப் போய்ப் பார்த்தார்கள். “என்ரைமனிசன் என்னை விட்டிடுப் போனவுடனை,நான் ‘அவங்கடை’சமையல்அறையிலை கொஞ்ச நாள் சமையல்வேலைக்குப் போனனான்.அப்ப அங்கைஅவன் நிண்டான்,கிழிஞ்ச சாறத்தோடை….
     பாவம்பெடியன்,ஏதோ பசிலை களவெடுத்துப்போட்டான் எண்டு பணிஷ்மென்டாம்…
     தாய்,தேப்பன் இல்லாத பொடிவேறை என்ன செய்யும்…?
     என்னோடைவாறியோ எண்டன்.வந்திட்டான்.
     அதுக்குப்பிறகு அவனும் என்ரை பிள்ளைதான்…
     திண்டாலும்,குடிச்சாலும் அவனுக்கும் குடுத்துத் தான்…
     எட்டுப்பிள்ளையளிண்டை குரல் எனக்கு எப்பிடிக்கேட்டுதோ அப்பிடித்தான் அவனின்டை குரலும் எனக்கு ஒன்பதாவதாக்கேட்டுது…
     அவன்என்ரை பிள்ளை தான்…நான்அவனைப் பிரிச்சுப் பாக்கன்…”
     அவள்எழுந்து உள்ளே போனாள்.சிலநிமிடங்களில் கசங்கிப் போன இரு புகைப்படங்களோடுதிரும்பி வந்தாள்.
     படங்களைத்தொட்டு அவர்களுக்குக் காட்டினாள்.
     “இதுதான் கண்ணன்,மூண்டு ‘ஏ’ எடுத்தவன்.இரணைப்பாலையிலை செத்தவன்.நல்ல வடிவாக் குயில்மாதிரிக் கூவி,நாய் மாதிரிக்குரைப்பான்…”
     குரல்கம்ம மற்றப் படத்தைக் காட்டினாள்.
     “இதுகோகுலன்.முள்ளி வாய்க்காலிலை செத்தவன்.பக்கத்திலை நிக்கிறது இளங்கோ.அவன் தூக்கிவச்சிருக்கிறது என்ரை கடைக்குட்டி… இப்பபதினொரு வயசு…பள்ளிக்கூடம் போட்டான்.”
     அவளிடமிருந்து  வார்த்தைகள் ஒழுகிக் கொட்டின.
     “அந்தப்பிள்ளை தான் இரணைப் பாலையிலைசெத்ததோ…?”
     “எந்தப்பிள்ளை…”
     “அதுதான்நீங்கள் வளத்தது…”
     “இல்லைஅது என்ரை அஞ்சாவது…”
     “அப்பமுள்ளிவாய்க்காலிலையோ…”
     “சீச்சீ…அவன் இன்னும் உயிரோடை இருக்கிறான்…”
      “இந்தியாவிலையோ…?”
      “அதுஎன்ரை மூத்தவனெல்லோ…”
      “அப்பஅவனிப்ப எங்கை…”
      “அவன்தான் இளங்கோ…தடுப்புமுகாமிலை…” என்றாள் பாக்கியலட்சுமி.

             நன்றி- ஞானம்   2012 – ஆனி                                                                                                  

2 Comments on “ஒன்பதாவது குரல்”

  1. மனதை உருக்கும் அருமையான கதை.

    இன, மத, மொழி, பிரதேச எல்லைகளுக்கு அப்பாலும் தாய்மை மேம்பட்டு நிற்கும் என்பதை உணர்த்தும் உணர்ச்சிமயமான கதை.

    // ‘இளங்கோவைக்கெதீலை கொண்டு வந்திடப்பு.அவன்தாங்கமாட்டான் ஒண்டையும் …’என மனதுக்குள் கோரிக்கைவிட்டபடி திரும்பினாள்//

    என்ற வரிகளைக் கண்டபோது மனது நெகிழ்ந்துபோய்க் கண்கள் பனித்தன.

    எத்தனை முறைகள் வாசித்திருப்பேன் என்ற எண்ணிக்கை எனக்கே தெரியாது.

    போரின் அவலங்களைச் சொல்லிச் செல்லும் பொதுவான கருவாக இருப்பினும், ஒரு வித்தியாசமான கோணத்தில் போரின் துயரம் நோக்கப்பட்டிருப்பது அருமை.

    வாசித்து முடித்துப் பல நாட்களாகியும் மனதில் ஆழமாய்த் தங்கிவிட்ட கதைகளில் இதுவும் ஒன்று.

    தாட்சாயணிக்கு என் வாழ்த்துக்கள்! (இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் (2003/2005 காலகட்டத்தில்) பயின்ற அதே தாட்சாயணி தானா என அறிய ஆவல் 🙂 )

    அற்புதமான ஒரு படைப்பைப் பகிர்ந்துகொண்ட ஊடறுவுக்கு மனம் நிறைந்த நன்றி.

    மிக்க அன்புடன்,
    லறீனா அப்துல் ஹக்.

  2. கதையை பிரசுரித்த ஊடறுவுக்கும் விமர்சித்த லறீனா அப்துல் ஹக்கிற்கும் நன்றி…நான் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலேயே கற்றேன்.நீங்கள் குறிப்பிடும் தாட்சாயணி வேறு ஒருவராக இருக்கலாம்.
    அன்புடன்
    தாட்சாயணி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *