லறீனா அப்துல் ஹக்

மொரட்டுவ பல்கலைக்கழக முஸ்லிம் மாணவியின் நிகாப் தொடர்பான பிரச்சினை பல தளங்களிலும் பேசப்பட்டு வருகின்றது. சில சகோதர சகோதரிகள் அதுகுறித்து என்னுடைய கருத்தையும் கேட்டனர். நிகாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயமாக்கப்படவில்லை என்ற அளவில், தனிப்பட்ட முறையில் நான் நிகாபுக்கு ஆதரவாளர் அல்ல. ஆனால், அதை யாரேனும் தனிப்பட்ட முறையில் தமது தெரிவாக விரும்பி அணிவார்கள் எனில், அதில் அவர்களுக்கு இருக்கும் உரிமையை நான் மதிக்கின்றேன்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவிக்கு, அவர் இந்த நாட்டுப் பிரஜை என்ற வகையில், தான் விரும்பும் ஆடையை அணியும் சுதந்திரம் உண்டு. அது அவரது தனிப்பட்ட உரிமை.

இங்கு எழுந்துள்ள பிரச்சினையை வெறுமனே இஸ்லாம் மார்க்கம் சார்ந்த பிரச்சினை என்று காட்டி, அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தைச் சீண்டி, அந்த நெருப்பில் குளிர்காய முனையும் சக்திகளின் பிடியில் நாம் சிக்கிவிடக்கூடாது. காரணம், குறித்த முஸ்லிம் மாணவியே சொல்வதுபோல், அது அவரது தனிப்பட்ட உரிமை தொடர்பான விவகாரமே. எனினும், இந்தப் பிரச்சினையில் நமது அணுகுமுறை எப்படி இருக்கலாம் என சிந்திப்பது பொருத்தமானதே. இதில், நாம் இரண்டு விதமாக நாம் செயல்பட முடியும் என நினைக்கிறேன்.

1) இப்பிரச்சினை தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க, “தாம் விரும்பியவாறு உடை அணிவதற்கு முஸ்லிம் மாணவிகளுக்கு எந்தத் தடையும் இல்லை; மொரட்டுவ பல்கலைக்கழக நிகாப் தடை குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது” என்று தெரிவித்துள்ளார் என அறிகிறோம், (பார்க்க: http://kalmunaibrilliantnews.blogspot.com/2013/12/blog-post_10.html).

அப்படியெனில், இவரிடமும் இவர்போன்ற ஆளும்தரப்பு மற்றும் எதிர்தரப்பு அமைச்சர்களிடமும் இவ்விடயத்தைத் தெளிவுபடுத்தி, “இது தொடர்பில் உங்கள் உறுதியான நிலைப்பாடு என்ன?” என்று மிக நேரடியாக (லிவீஸ்மீ ஜிக்ஷி ஜீக்ஷீஷீரீக்ஷீணீனீனீமீ எனில், மிகச் சிறப்பாக இருக்கும்; அல்லது யூ ட்யூபில் பதிவேற்றலாம்) கருத்தைப் பெற்று ஒலி/ஒளிபரப்பலாம். இதனை, மனித உரிமைக்காகக் குரல்கொடுக்கும் எந்தத் தனியார் வானொலி/தொலைக்காட்சி ஊடாகவோ, அனைத்துச் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தனிப்பட்ட ஆர்வலர் குழுவோ முன்னெடுக்க முடியும்.

2) மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ் stuபீமீஸீts’ uஸீவீஷீஸீ) ஊடாக, பல்கலைக்கழக சகமாணவியின் உரிமையை வலியுறுத்திப் போராடலாம். அப்போதுதான், இது தனித்து முஸ்லிம் மாணவியின் பிரச்சினை என்று ஓரங்கட்டப்படாமல், ஒரு பல்கலைக்கழக மாணவியின் உரிமைப்போராட்டம் என்ற நிலையை அடைய வாய்ப்பாகும்.

இங்கு, ஏலவே இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் பொதுப் பிரச்சினைகளின்போது, முஸ்லிம் மாணவர்களும் மாணவிகளும் இணைந்து அப்போராட்டங்களில் பங்கு கொண்டிருக்கும் பட்சத்திலேயே, இதுபோன்ற ஒரு போராட்டத்தில் அவர்களின் -மாணவர் ஒன்றியத்தின்- ஒத்துழைப்பை நாம் பெறக்கூடியதாக இருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆக, பல்கலைக்கழக மாணவர்களின் பொதுப் பிரச்சினைகளுக்கான போராட்டங்களின்போது அவற்றில் பங்குபெறாமல், முஸ்லிம் பெண்களாகிய நாம், நமது ஹிஜாபை/நிகாபை காரணம் காட்டி ஒதுங்கிச் செல்லாமல் இருந்தால் மட்டுமே, இதுபோன்ற ஒரு தருணத்தில் நாம் மாணவர் ஒன்றியத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியும் என்பது ஆழ்ந்து கவனிக்கத் தக்கது.

மேற்கண்ட இரண்டு அணுகுமுறைகளின் மூலமும் இது தனிப்பட்ட ஒரு சமூகத்தின் பிரச்சினை என்ற நிலையில் இப்பிரச்சினை புறமொதுக்கப்படாமல், பொதுத் தளத்தில் தீர்வுகாண வழியமைக்கலாம் என்று நம்புகின்றேன். இவை என் சிற்றறிவுக்கு எட்டிய அணுகுமுறைகளே தவிர முடிந்த முடிபுகள் அல்ல என்பதையும் தயைகூர்ந்து கவனத்தில் கொள்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *