ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் – 14ஃபஹீமா ஜஹான் – நம் அன்னையரின் ஆதித்துயர்

குட்டி ரேவதி

Aathi Thuyar by Faheema பெண்ணிய’ அரசியலின் முக்கியமான கோட்பாடாக, பெண்மை மறுப்பை முன்வைத்தப் பெண்ணியம், தாய்மை என்பதையும் புறந்தள்ளியது. இன்று உலகெங்கிலும், நிறைய பெண்கள், தம் கருப்பையை புறந்தள்ளியிருக்கின்றனர்.

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற கட்டுரைத் தொடரைத் தொடரமுடியாத அளவிற்கு அன்றாடம் கால்களையும் கைகளையும் ஏன் மூளையின் நரம்புகளையெல்லாம் கூடப் பின்னிக்கொண்டிருந்தன. ஆனால், இத்தொடரை தொடர வேண்டிய, ‘அறப்பொறுப்பை’ நினைவூட்டிக் கொண்டே இருந்தார், தமிழ் ஸ்டூடியோ அருண். இயந்திர கதியில் முனைய விரும்பாததால், சிறிது காலத்திற்குப் பின் தொடர்கிறேன். மன்னிக்கவும். இக்கட்டுரைத் தொடரை நெருக்கமாகப் பின்பற்றிக் கொண்டிருந்த நண்பர்களும் எழுத்தாளர்களும் வாசகர்களும் மீண்டும் இக்கட்டுரையிலிருந்து என் முதுகில் ஏறிக்கொண்டால், சந்தோசமாய்ச் சுமப்பேன் எனக்கூறிக் கொள்கிறேன்!

 நம் அன்னையரைத் தெய்வமாகக் காணும் மரபைப் பெற்றிருக்கிறோம் நாம். நம் மொழியின் நினைவலைகள் அப்படியான பிம்பங்களாய்த் தாம் நம்முள் சேகரமாயிருக்கின்றன! நாடி நரம்புகளில் எல்லாம் அவளின் தொடுகையை உணரும் ஆவலில் குழந்தைப்பருவங்கள் மீது மோதி மோதிக் கவிழ்பவர்கள் நாம். என்றாலும், ஒரு பிம்பத்தை மட்டுமே நம்மால் உருவாக்கமுடிந்தது! அவள் தன் வலியையும் வேதனையையும் இம்மாதிரியான, ‘வழிபாட்டு’ பிம்பத்திற்கான நேர்ச்சையைப் போல அவள் கொடுக்கவேண்டியிருந்தது.

‘வலி’ உயிர்வாழ்வுக்கான மூச்சு. வலியை உணராமல் எந்த உயிர்வாழ்வும் இப்பூமியில் சாத்தியமில்லை தான். குழந்தை ஈனும் போதான பிரசவத்தின் வலியை, பெண் உயிர் தன் மகத்துவமாகவும் சிறப்பான பண்பாகவும் உடலின் வல்லமையாகவும் உயிர்த்தொடர்ச்சியாகவுமே எடுத்துக்கொள்கிறது. ஆனால், சமூகம் அதை ஆதாயமாக்கி, தன் அடக்குமுறைக்கான உயவுப்பொருளாக, ’தாய்மையையும்’, பலிபீடத்தில் ‘தாயையும்’ வைக்கும் போது அதை எதிர்க்கவேண்டிய கட்டாயமாக்கி இருக்கிறது.

சிந்துச் சமவெளியில் கிடைத்த முத்திரை வடிவம் ஒன்றும், குப்தர் காலச் சுடுமண் வடிவம் ஒன்றும் தாய் என்ற சமூக நிலையை உயர்த்திப்பார்த்ததற்கான சான்றுகளாக இருக்கின்றன. ஆனால், அது வேளாண் தொழில் பெண்களின் கண்டுபிடிப்பு. அதன் காரணமாகத் தான் பெண்கள் வழிபாட்டு நிலையைப் பெற்றிருக்கின்றனர்’ (தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, உலகாயதம்) என்று பொருள் புரிந்து கொள்கின்றனர். அந்த முத்திரையில், பெண் ஒருவரின் பிறப்புறுப்பிலிருந்து செடியொன்று முளைத்து வருவதாகப் பதிந்த சித்திரம் உள்ளது. சுடுமண் வடிவத்தில், பெண்ணின் கழுத்திலிருந்து தாமரை முளைத்து வருகிறது. இந்த இரண்டு ஆதாரங்களையுமே சரியான முறையில் புரிந்து கொள்வது மிக மிக அவசியம். பெண் ஆண் உயிர் தோன்றிய காலம் தொட்டே, பெண் உடல் தான் உயிரின் பிறப்பிடமாக இருந்திருக்கிறது, என்பதைச் சுட்டிக்கட்டுவதே இது.

அது மட்டுமன்றி, இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் ஆதிச்ச நல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட அகழாய்விலும் கிடைத்த தாய்த்தெய்வம் பொறிக்கப்பட்ட சுடுமண் பானைப்பகுதி கூடுதல் ஆதாரமாகும்.

’ஆண் குறி மையப் புனைவை எதிர்த்த, சிதைத்தப் பிரதிகளில்’ அன்னையரின் குரலை பெரும்பான்மையும் முதன்மைப்படுத்திய ஃபஹீமாவின் கவிதையைப் போல வேறு ஒரு குரல் இல்லை. ‘அடையாள அரசியல்’ ஒருவர் எங்கெங்கே தன் அடையாளத்தை வலுப்படுத்தவேண்டும், எங்கெங்கே மறுக்கவேண்டும் என்பதை ஆராயாமல் அறியாமையின் மெளனம் காக்கிறது. இதனால், உண்மையிலேயே, ‘அடையாளம்’ அரசியலாகாமல் அடையாளத்தின் சமன்பாடுகளை மட்டுமே மீண்டும் மீண்டும் சுமக்கவேண்டியதாயிருக்கிறது. அதுவே, ’பெண்’ எனும் அடையாளத்திலும் நிகழ்ந்தது.

‘பெண்ணிய’ அரசியலின் முக்கியமான கோட்பாடாக, பெண்மை மறுப்பை முன்வைத்தப் பெண்ணியம், தாய்மை என்பதையும் புறந்தள்ளியது. இன்று உலகெங்கிலும், நிறைய பெண்கள், தம் கருப்பையை புறந்தள்ளியிருக்கின்றனர். வெகு சன நுகர்ச்சிக்கான பெண்ணுடல் அழகு, தான் நம்பும் போலியான சுய வல்லமை, இயற்கையின் வழி நின்று சமூக நிறுவனத்தின் அடக்குமுறையை எதிர்க்கும் நம்பிக்கையின்மை, ஆணாதிக்கச் சமூகம் எதிர்பார்த்த ஆதிக்க மனோ நிலைக்கு மறைமுகமாகத் தன்னையும் இழந்த விழிப்புணர்வு இன்மை என இன்ன பிற காரணங்களால் பெண் தன்னை மீண்டும் மீண்டும் அடகு வைக்க உந்தும் சதி வெல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பெண் உடலின் வாயிலான யோனி மட்டும் ஆண் நுகர்வுக்கான வழியாகவும், இயற்கையின் உள்ளுணர்ச்சியைப் போற்றும் அங்கமாக இருக்கும் போது, கருப்பை எனும் இயற்கையுடனான ஒப்பந்தத்தை மட்டும் நிறைவேற்றாது வஞ்சித்தது ஏன்?

இலங்கையைச் சேர்ந்த கவிஞர் ஃபஹீமா ஜஹான், இவரது முதல் கவிதைத்தொகுப்பு, ‘ஒரு கடல் நீரூற்றி..’ பனிக்குடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ‘பனிக்குடம்’ இதழில் சில கவிதைகளைப் பெற்று அறிமுகமாகி, மெல்ல மெல்ல அவருக்குப் பழக்கமானேன். அவரது கவிதைகள் முழுக்க, தாயை நோக்கிய, தாயைப் பார்த்து அனுதாபமுறும் குரல் தொனித்துக் கொண்டே இருக்கிறது.

அது வெறுமனே அவரது தாயை மட்டும் நோக்கிய குரல் அன்று. அல்லது எல்லா தாய்மார்களையும் குறிப்பிட்டுக் காட்டி, அதைப் பிரச்சாரமாக்கும் எத்தனமும் அன்று. மாறாக, இயற்கை, தன் தேசம், நிலம், தன் அன்னை, பெண்டிரின் முதிர்ந்த உடல் என எல்லா நிலைகளிலும் நம்மைப் பேணிய உருவெடுத்தவரை நோக்கிப் பாடுகிறது.

அம்மையே உனைக் கொன்ற பழி சுமந்தவர்களாய்…

ஆண்களை மயக்கும் மாயவித்தைகளை
 நீ அறிந்திருக்கவில்லை
 ஓரவிழிப் பார்வைகளோ
 தலை குனியும் தந்திரங்களோ உன்னிடமிருக்கவில்லை
 தெளிவும் தீட்சணியமும் உன் பார்வையிலிருந்தது
 உறுதியும் தைரியமும் உன் நடையிலிருந்தது
 அலங்காரமும் ஒப்பனையும் உன்னிடமில்லாதிருந்தது
 எளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய்
 உன் வாழ்க்கையிருந்தது

 இளம்பெண்ணாக அப்பொழுது
 வயல்வெளிகளில் மந்தைகளோட்டிச் செல்வாய்
 அடர்ந்த காடுகளிலும்
 வெள்ளம் வழிந்தோடிய ஆற்றங்கரைகளிலும்
 விறகு வெட்டித் தலைமேல்
 சுமந்து திரும்புவாய்
 அப்போதந்தக் காடுகளில் வாழ்ந்த பேய்பிசாசுகள்
 தூர இருந்து கனைத்துப் பார்த்துப் பின்
 மறைந்துபோவதாய்க் கதைகள் சொல்வாய்
 வீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது

காலப் பெருஞ்சுழியில் – நீ
 திரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன
 பளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும்
 அசுத்தமாகிப் பின் தூர்ந்துபோயின
 கடந்தகாலம் பற்றிய உன் கதைகளிலெல்லாம்
 கசப்பான சோகம் படியலாயிற்று

 உன் பொழுதின் பெரும்பகுதி
 படுக்கையில் முடங்கிப் போனது
 ஓய்வற்றுத் திரிந்த உனது பாதங்கள்
 பயணிக்க முடியாத் திசைகள் பார்த்துப்
 பெருமூச்செறிந்தன
 வேலைகளை எண்ணி
 உனது கரங்கள் துடிக்கும் பொழுதுகளில்
 இயலாமைகள் கண்டு புலம்பத்தொடங்குவாய்

நோய் தீர்க்கவெனச்
 சந்தடிகள் நிரம்பிய நகருக்குக் கூட்டிவரப்பட்டாய்
 உன் காற்றும் நீரும் மண்ணும் ஆன்மாவுமிழந்து
 நகரடைந்தாய் நீ மட்டும்
 உணர்வுகள் அடங்கி ஓய்ந்த பின் ஒரு நாள்
 உறவுகள் கூடி உனைத் தூக்கிச் சென்றனர்
 உனக்கான மண்ணெடுத்த பூமி நோக்கி
 அம்மையே
 இப்போது நாம் வாழ்கிறோம்
 எல்லோர் கைகளிலும் பொம்மைகளாக

அந்தப் பெண்டிர், உடலால் சுதந்திரத்தை முழுதும் அனுபவித்தவராக இருந்திருக்கின்றனர். நாள்பட நாள்பட, விடுதலையின் காற்றை இழந்து, வீட்டின் குப்பையாக மண்டிப்போகும் அவளின் சுயத்தைப் பதிவு செய்வதன் மூலம் தன்னிருப்பையும் கேள்விக்குட்படுத்துகிறார். ‘வீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது / காலப் பெருஞ்சுழியில் – நீ / திரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன / பளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும் / அசுத்தமாகிப் பின் தூர்ந்து போயின’ போன்ற வரிகளில் தாயின் மாற்றத்தின் கணங்களை நூல் பிடிக்கும் இவர், அதன் விளைவாகத்தான் சொல்கிறார், கடைசி வரிகளில், ‘இப்போது நாம் வாழ்கிறோம் / எல்லோர் கைகளிலும் பொம்மையாக’. என.

‘விடுதலை’ உணர்வு மட்டும் தான் தனிமனிதரோடு தீர்ந்து போகாதது. தொடர்ந்து, ‘காட்டுத் தீயாய்’ பரவக்கூடியது. இதைத் தான், பாரதி கூட, ‘அக்கினிக் குஞ்சு’ என்று சொல்லியிருக்க வேண்டும். அது தன் உற்பத்தி ஆற்றலை அழித்துக் கொள்வதே இல்லை. உற்பத்தி செய்யமுடியாத குஞ்சாவது இல்லை. உற்பத்தியை முடித்துக் கொண்ட மூப்பும் இல்லை. உற்பத்தியைத் தன் மூலமாக்கிய பெண்ணுயிர், ‘விடுதலை’ உணர்ச்சியைத் தொடர்ச்சியாக்கி வைக்கிறாள். சக மனிதரோடும், சமூக உயிர்களோடும் அங்கங்களோடும் நிரந்தரப் பிணைப்பில் இருத்துகிறாள். ஒரு பெண் தாயின் தருணத்திற்கு அழைத்துச் செல்லும் போது, சமூகத்தில் இது நிகழ்வதற்கான போராட்டத்தையே தன்னுள் எடுக்கிறாள் என்று அர்த்தம்!

இருண்டு போகின்ற நாமும் ஒளி வழங்கும் அவளும்

அவரவர் வேலைகளில் வீடு மூழ்கியிருந்த
 மழைக்கால இரவொன்றில்
 நிசப்தத்தையும் இருளையும்
 உள்நிறுத்திப் போயிற்று மின்சாரம்

 வழமை போலவே அம்மாவின் அருட்கரங்களில்
 ஒளி காழும் உத்தியாக மின்சூள் அகப்பட்டிருந்தது

இரவுச்சாப்பாட்டில் ஒரு கவளம்
 மீதியாயிருந்தென் பீங்கானில்
 கையில் தேடியெடுத்திருந்த மெழுகுவர்த்திக்குத்
 தீச்சுடரொன்று தேவைப்பட்டிருந்தது இளையவளுக்கு
 எழுதிக்கொண்டிருந்த மூத்தவளுக்கோ
 இறுதிச் சொல்லில் ஓரெழுத்து எஞ்சியிருந்ததப்போது
 அவரவர் தேவை கூறி அம்மாவைக்
 கூப்பிட்ட கூச்சலில்
 இருண்ட இல்லம் ஒலியலைகளால் நிரம்பிற்று

 முதலில் எனது பீங்கானில் விழுந்து தெறித்த
 ஒளிக்கற்றைகளின் துணையுடன்
 இளையவளின் மெழுகுதிரி சுடர்விட்டெரிந்தது
 மூத்தவளின் கடைசி எழுத்துக்கும் அம்மா
 ஒளி காவி நடந்த பின்னர்
 சட்டென நுழைந்தது வீட்டினுள் மின்சாரம்

 மறுபடியும் இருளினுள் வீடமிழ்ந்தபொழுது
 சமையலறையினுள் சிக்கியிருந்த அம்மாவுக்கு
 ஒளிச்சுடரொன்றினை ஏந்தி யாருமே நடக்கவில்லை
 எவரின் உதவியும் இன்று
 இருளினுள்ளேயிருந்து
 எல்லோருக்குமான உணவைத் தயாரித்தாள் எனதன்னை

’தியாகம்’ பெண்களின் அற உணர்வை வெளிப்படுத்தும் ஒரு முறையாக இருந்திருக்கிறது. அது தாய் நிலையின் ஒரு செயல்பாட்டு நிலையாகவும். இருக்கிறது. ‘தியாகத்தை’ அறிவுறுத்தி அவள் வாழ்வதில்லை. மாறாக, அவள் தியாகத்தைச் செயல்படுத்துகிறாள். சமூக உற்பத்தியின் ஓர் அந்தரங்கப் பங்காகவும் பொறுப்பாகவுமே, தாயின் ‘தியாகம்’ வெளிப்படுகிறது. வேட்டைக்குச் சென்று உணவைக் கொணர்ந்த காலம் முதல், வேளாண்மையை ஒரு பண்பட்ட பண்பாடாக ஆக்கியது வரை பெண் உணவை, பகுத்துண்டு வழங்கியது வரை அவளின் எல்லா செயல்களிலும், ‘தியாகம்’ என்பது இன்றியமையாததாக இருக்கிறது.

‘சுய பலி’, ‘விரதம்’ ‘நேர்ச்சை’ போன்ற பண்பாட்டுக்கூறுகள் இனவரைவியலில் அடிப்படையாக, ‘தாய்த் தெய்வங்களாக’ நின்றவர்களுக்கு படைக்கப்பட்டவையே! ஏனெனில், தாய் அதைத்தான் தாயாக நின்று செய்கின்றாள். ஃபஹீமாவின், ‘இருண்டு போகின்ற நாமும் ஒளி வழங்கும் அவளும்’ என்ற கவிதை மிகவும் அழகான ஒழுக்க நடையில், அந்தத் தாயைச் சூழ்ந்திருக்கிற இருளையும் அவள் பிறருக்கு வழங்குகின்ற ஒளியையும் வரைகிறது. இவர் கவிதைகளில், எதன் பொருட்டும் ஒரு தொனியை வலிந்து கொண்டு வராது அதே சமயம் இயல்பான எழுச்சியினால் புதிய, அற்புதமான தொனிகளைக் கண்டடையும் பயணத்திலும் ஈடுபடுகிறார்.

இதை எழுதும் போதே அப்படியான அவரது இன்னும் சில வரிகள் நினைவுக்கு வரிகின்றன. ’அவசரப்பட்டு நீ / ஊரைக் காணும் ஆவலிலிங்கு வந்துவிடாதே / வதைத்து எரியூட்டப்பட்ட சோலைநிலத்தினூடு / அணிவகுத்துச் செல்லும் காதல் தேவதைகள் / அமைதியைப் பேணுகின்றன / அந்த ஏகாந்தம் குடியிருக்கும் / மயானத்தைக் காண உனக்கென்ன ஆவல்? / வந்துவிடாதே’ என்ற வரிகளில் தொனிக்கும், கனிவு, எதிர்ப்பு, யதார்த்தம் ஏக்கமே என பல மனநிலை ஒருங்கிணைந்த உணர்ச்சிகள் மண்டிக்கிடக்கும் படைப்பாக்கங்களைப் படைத்தளிக்கும் விளிம்பு நிலை, போராட்ட நிலை, ஒடுக்கப்பட்ட நிலையில் வாழும் படைப்பாளிகள் நமக்கு அளிக்கும் கொடையே இவை! இம்மாதிரியான வெள்ளத்தினூடே நீந்திச் செல்லும் நாமும் புதிய செவுள்களையும் சுவாசத்தினையும் புத்துணர்ச்சியையும் அனுபவத்தையும் பெறுகிறோம், இல்லையா?

ஆதித்துயர்

நிழல் மரங்களற்றுச்
 சூரியன் தவிதவித்திடும் நெடுஞ்சாலையோரம்
 வெயிலை உதறி எறிந்தவாறு
 நடக்கிறாள் மூதாட்டி

 குதிக்கால்களால்
 நெடுங்களைப்பை நசுக்கித் தேய்த்தவாறு
 காற்றைப்பின் தள்ளிக் கைகளை வீசுகிறாள்

 வெய்யில்
 மிகப்பெரும் தண்டனையை
 வழி நீளப்பரவ விட்டுள்ளது
 வேட்டை நாய் போல
 அவள் முன்னே
 ஓடிச் செல்கிறது நிழல்

 பதிந்தெழும் ஒவ்வொரு சுவட்டிலும்
 தேங்கித் துடிக்கிறது
 ஆதி முதல் அவளைத் தொடரும் துயர்

எனக்கு மிகவும் பிடித்த, ஃபஹீமாவினுடைய கவிதை! இதை விடத் துல்லியமாக, அன்னையின் ஆதித்துயரைச் சொல்லமுடியாது! என்றென்றைக்குமாக வெயிலின் நெடுஞ்சாலையில் நடந்து செல்லப் பணிக்கப்பட்ட மூதாதையின் துயர் எங்கெங்கும் நம் நினைவுகளில் எதிரொலித்த வண்ணம், நம்மால் உணரப் படுமென்றால், அதுவே நாம் ஒரு சமூகப் பொறுப்பாளராக மாறியிருக்கிறோம் என்பதற்கான ஒரு அடையாளம்!

அம்மா

 இருக்கும் இரு கரங்களும்
 போதாதெனப் புலம்பும் அம்மாவின் முதுகின்
 பின்னால்
 எப்பொழுதும் துரத்திக் கொண்டிருக்கும்
 இரக்கமற்றச் சொற்களும்
 இங்கிதமில்லாக் கட்டளைகளும்
 ஓய்ந்திருக்கும் இடந்தன்னைப் பறித்துக்
 கொண்டிருக்கும்
 ஓராயிரம் பணிவிடைகளும்

 மனமுடைந்து போன சொற்கள்
 முட்டி மோதுகின்ற வீட்டில்
 எப்பொழுதும் வெடித்துவிடத் தயாராக
 நடமாடித் திரிகிறது பொறுமை

 வலிய பாதங்களை அதிர வைத்து
 நடந்து போகிறது
 அனைத்தையும் மறுதலிக்கும்
 ஒரு புறக்கணிப்பு

 ஓங்கி வைக்கப்படும் பொருட்களிலிருந்தும்
 அறைந்து சாத்தப்படும் கதவுகளிலிருந்தும்
 புறப்பட்டு வருகிறது
 அடுத்தவர் மீதான ஆத்திரங்கள்

 கற்களை மாத்திரமே வைத்துக்
 கட்டப்பட்ட வீட்டின்
 விசாலமான கதவு, யன்னல்கள் வழியே புகுந்து
 திரைச்சீலைகளை வீசியெறிந்து
 முகஞ்சுழித்தவாறு வெளியேறிப் போகிறது
 அன்பில் தோயாத ஒரு வெப்பக் காற்று

 சிதறடிக்கப்பட்ட பிள்ளைகளின் வாழ்வையும்
 உடைத்து வீசப்பட்ட அன்பின் வரைபடங்களையும்
 வீடெங்கும் இறைந்து கிடக்கும்
 ஒருவனின் வக்கிரங்களையும்
 சேகரிப்பதிலேயே
 களைத்துப் போகிறாள்

 வருத்தம் கவிழ்ந்த உடலுடன்
 என்றாவது அவள் வீழ்ந்து தூங்கும்
 ஆழ்ந்த உறக்கத்தை அதிரவைத்துக் கலைக்கும்
 தண்ணீர்க் குவளையொன்றுக்காகவோ
 அற்பச் சொல்லொன்றுக்காகவோ
 கூச்சலிடும் ஒரு குரல்
 நடைப்பிணம் போல எழுந்து வரும்
 அவளது பாதங்களில் பின்னும்
 யுகங்களாகச் சிதைக்கப்பட்டுவரும் நிம்மதியொன்று

 என்றோ விதியாகித் தொடரும்
 நியதிகளில் நசுங்குண்டவாறு
 இரவு நெடுநேரம் வரைத்
 துயிலை விரட்டி விரட்டிக் காத்திருப்பாள்
 எல்லோரும் உண்டு முடித்து எஞ்சும்
 குளிர்ந்த உணவுக்காக

 கருங்கல் சிலையொன்று
 அதிகாரம் செய்தபடி அலைகின்ற வீட்டில்
 மோதி மோதியே செத்துவிட்டன
 அவள் வளர்த்த எல்லா மான்குட்டிகளும்

பெண்ணிய உரிமைகளை பட்டியல் படுத்துவதில், தாய்மை நிலையைக் கையாள்வது எப்படி என்று அதற்கான போராட்டத்தைத்தொடக்குவதில் பெண்களுக்கு கடந்த நூற்றாண்டில் பெரிய சிரமம் இருந்தது. பெண்ணின் பல்வேறு சமூக நிலைகளை இன்று நாம் ஓரளவிற்குக் கையாளக் கற்றுக் கொண்டாலும், ‘தாய்மை’ நிலை என்பது, போற்றுதல் நிலை மற்றும் அவல நிலை என்ற இருநிலைகளுக்குள்ளும் உள்ளாவதாலும், ’சமூக உற்பத்தியில்’ ஆணுடனான இயைபு நிலையையும் இணக்க நிலையையும் சார்பு மற்றும் உடைமை நிலையாக மாற்றிக்கொண்டதால் ஓரிடத்தில் ‘பெண்ணியம்’ இயற்கைக்கு எதிராகவே திரும்பிவிட்டனர். அதே சமயம், தாம் கோரிய உரிமைகளுக்கான சமூகக் கதாபாத்திரத்தை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்கவேண்டியிருந்ததும் ஒரு காரணமாகும். அதற்கான ஒரு கால இடைவெளியும் அவர்களுக்குத் தேவைப்பட்டது. ஒவ்வொரு உரிமையாகத்தான் போராடிப்பெற்றும், அதையே தன்னொத்த பெண்களுக்குக் கிடைப்பதற்காகவும் போராடுவதும் எனப் பலமுனைகளிலிருந்து தம் போராட்டங்களை நிகழ்த்தவேண்டியிருந்த சமயத்தில், பெண்களால் அத்தனை பெண் கதாபத்திரங்களையும் ஏற்கமுடியாமலிருந்தன. மகள், மனைவி, தாய், சகோதரி என்ற பல கதாபாத்திர நிலைகளிலும் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. இதில், தாய்மை என்பது ஒரு பெண்ணின் பருவத்தின் பிற்காலத்தில் ஏற்க வேண்டிய சமூகப்பொறுப்பு என்பதால் அவள் மனநிலை அதை மிகவும் தயங்கியபடியே, உதாசீனப்படுத்தியது.

அழிவின் பின்னர்

வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தின்
 அடிக்கட்டை மீது
 அமர்ந்துள்ளது பறவை

 இன்று அதனிடம்
 பறத்தலும் இல்லை
 ஒரு பாடலும் இல்லை

 அதன் விழிகளின் எதிரே
 வெயில் காயும்
 ஒரு பெருவெளி விரிந்துள்ளது

 அந்த மனிதர்களைச் சபிக்கிறதோ
 தனது கூட்டை எண்ணித் தவிக்கிறதோ

விடுதலையை இழந்த பறவையின் கையறு நிலையைச் சொல்லும் இக்கவிதையின் வழியாக, மானுடத்தின் பொதுத்தன்மை குறிக்கப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை அவரது எல்லா கவிதைகளையும் வாசித்தபின், நான் கண்டறிவது, ‘வெட்டி வீழ்த்தப்பட்ட மரம்’ என்பது, ’தாய்’ அன்றி வேறு யாருமில்லை!

ஃபஹீமாவின் கவிதைக்குரல், தாயின் துயரைப் பாடும், அதன் துயரங்களை அடையாளப்படுத்திக் காட்டும் தாயின் அளவிற்கே அக்கறையான குரல். பெண்ணின் உடலரசியலில் எப்படி பெண் உடல் உழைப்பு புறக்கணிக்கப்பட்டதோ அதே அளவு, ’தாய்மை’ எனும் பாலியல் ஆற்றலும், இயற்கையின் ஊக்கமும் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையை வெளிப்படையாக, பிரச்சாரமாக முன்வைக்காமல் கவிதையின் மொழியின் அத்தனை அழகுகளுடனும் வெளிப்படுத்துகிறது.

ஒரு போர் நிலத்திலிருந்து, ஒரு தாயின் குரலன்றி வேறெந்த குரலை முன் வைத்தாலும் அது முழுமையுறுவதில்லை. தன் வயிற்றில் ஈன்ற குழந்தை, தன் முன்னே இரத்தம் சிந்துவதையும், கொல்லப்படுவதையும், பசியுறுவதையும், கதறுவதையும் அதன் தாய் மட்டுமே காணப்பொறுக்க மாட்டாள். அந்நிலத்திலிருந்து கேவலுடன் வெளிப்படும் ஒரு தாயின் நிழலை தன் எழுத்தெங்கும் சுமந்து திரியும் ஃபஹீமாவின் கவிதைகள், பெண் உடல் மீதான வன்முறை மட்டுமன்றி, மனித உடல் மீதான வன்முறையையும் அதன் முனகல்களையும் கூட பதிவு செய்திருக்கின்றன.

இன விடுதலையைப் போராட்டத்தை, ‘பயங்கரவாதமாக’ நோக்கும் ஆணாதிக்கக் கருத்தியல்களைக் கொண்டு ஃபஹீமாவின் கவிதைகள் உள்நுகரப்பட்ட ஆபத்தும் நிகழ்ந்துள்ளது. இதை அவரது நூலுக்கு அளிக்கப்பட்ட முன்னுரையில் காணலாம். இந்திய தேசிய வாதத்தை முன்னிறுத்தும் சிந்தனையும் தத்துவமும் ஊறிக்கிடக்கும் கருத்தியல் மூளையைக் கொண்டு அணுகும் போது ஃபஹீமாவின் கவிதைகளை, பெண்களின் அடிப்படையான உரிமை நிலைப்பாடுகளிலிருந்து பிரித்துச் செல்லும் அபாயமும் நிகழலாம். ஆனால், உலகெங்கும் பெண் எழுத்துக்கு நிகழ்ந்த கொடுமை இது தான்! ‘ஆண்’கருத்தியல் வாதிகள் அல்லது ‘ஆணாதிக்கக் கருத்தியல்வாதிகள், பெண்களின் எழுத்தை நோக்கும் விதத்தில் போட்டுக் கொண்ட கண்ணாடிகள் நிறம், மனித இனத்திற்கே எதிரானது! ‘அறம்’ செய்ய விரும்பாமல், அதைப் பாடாமல் ஒரு பெண்ணின் எழுத்து வேறென்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்?

 

குறிப்பு: ஃபஹீமா ஜஹான்

இலங்கை மெல்சிரிபுரவைச் சேர்ந்தவர். கணித ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவர், ‘

ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

oru kadal neerootri

ஒரு கடல் நீரூற்றி (2007)

onlinecover

அபராதி (2009)

Aathi Thuyar by Faheema

ஆதித்துயர் (2010)

http://udaru.blogdrive.com/archive/231.html

 http://udaru.blogdrive.com/archive/672.html

http://udaru.blogdrive.com/archive/1082.html 

 

கூடு இணையத்தளத்தில் வெளியான விமர்சனம்

1 Comment on “ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் – 14ஃபஹீமா ஜஹான் – நம் அன்னையரின் ஆதித்துயர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *