” ஈழத்துப் பெண்” கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு

லறீனா அப்துல் ஹக் பீ.ஏ. (சிறப்பு)
எண்பதுகளின ஆரம்பத்தில் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் நிலை, அவர்களின் பல்வேறு பிரச்சினைகள், பெண்விடுதலை, பெண்நிலைவாதம் முதலான அம்சங்கள் கூர்மையாக முனைப்புப் பெறத் தொடங்கின. இதனை ஈழத்துப் பெண்களின் கலை இலக்கிய முயற்சிகளினூடே நாம் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது.
 எண்பதுகளின ஆரம்பத்தில் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் நிலை, அவர்களின் பல்வேறு பிரச்சினைகள், பெண்விடுதலை, பெண்நிலைவாதம் முதலான அம்சங்கள் கூர்மையாக முனைப்புப் பெறத் தொடங்கின.இதனை ஈழத்துப் பெண்களின் கலை இலக்கிய முயற்சிகளினூடே நாம் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது.அன்று தொடக்கம் இன்றுவரை பெண்களின் பங்களிப்புக்கள், ஈழத்து கலை இலக்கியத் துறைகளில் பல பரிணாமங்களைப் பெற்று வளர்ந்துள்ளன எனலாம். இப் பெண்களில் பலர் கவிதையினைத் தமக்கான வெளிப்பாட்டு ஊடகமாகக் கொண்டுள்ளமை கவனிக்கத்தக்கது. ஈழத்துப் பெண் கவிஞர்களில் சொல்லாத சேதிகளைத் தந்த செல்வி, சிவரமணி, ஊர்வசி, ஒளவை, சங்கரி, சன்மார்க்கா, மைத்ரேயி, கொற்றவை, கண்ணகி, ஆழியாள், ஆகர்ஷியா, கலா, தில்லை, மலரா, பாரதி, கஸ்தூரி, வானதி, கற்பகம் யசோதரா, ரேகுப்தி நிவேதிதா, வாணி சைமன், நாகபூஷணி கருப்பையா, ஜெயந்தி ஜெய்சங்கர், ஜெ. மதிவதனி, ராணி ஸ்ரீதரன், நெலோமி, ஈழவாணி, நவஜோதி ஜோகரட்ணம் ஆகியோரும், முஸ்லிம் பெண் கவிஞர்களில் சுல்பிகா, மரீனா இல்யாஸ், நிலாவெளி ஷர்மிளா றஹீம், பெண்ணியா, மசூறா ஏ. மஜீத், அனார், பஹீமா ஜஹான், லறீனா ஏ. ஹக், லுணுகலை றஸீனா புஹார், கலைமகள் ஹிதாயா, சித்தி றபீக்கா, ஃபாயிஸா அலி, ஜெஸீமா ஹமீட், நூருல் ஐன், பாலையூற்று அஷ்ரஃபா நூர்தீன், ரிஸ்கா ரிஸ்வி, புத்தளம் ஜமீலா, சில்மியா ஹாதி, ஷமீலா யூசுஃப் அலி, ஷாமிலா ஷரீஃப், கெக்கிறாவை சுலைஹா, ஷிபானா சனூன், ரிம்ஸா, எம்.எப்.எப். பாரிஹா போன்றோரும் குறிப்பிடத்தக்கவர்கள் எனலாம்.
 
  
கலை இலக்கியப் பிரவேசமானது பல வகையிலும் தமிழ்க் கலை இலக்கியப் பரப்புக்குப் பன்முகத்தன்மையை வழங்கிற்று என்றால் அது மிகையன்று. பொதுவாகப் பெண்கள், அவர்கள் சார்ந்த விடயங்கள் எனும் போது சீதனப் பிரச்சினை, கல்வியில் பின்னடைவு முதலானவையே பெரிதும் மையப்படுத்தப்பட்ட நிலைமைக்கு அப்பால் பெண்களின் பரந்துபட்ட பிரச்சினைகள் மிக ஆழமான விமர்சனத்துக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்ட நிலைமை மெல்ல மெல்ல உருவாகலாயிற்று. அந்த வகையில், பெண்களின் சமூகநிலைமை, அவர்களின் இருப்பு, ஆண்-பெண் அசமத்துவ உறவின் பல்வேறு பரிணாமங்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகள், ஆணாதிக்க ஒடுக்குமுறைகள், பெண்களின் அகவய உணர்வுவெளிப்பாடுகள் எனப் பல்வேறு தளங்களிலும் பெண்கள் தமது கவனத்தைக் குவிக்கத் தொடங்கினர். அவற்றைத் தமது கலை இலக்கியப் படைப்புக்களின் வழியே வெளிக் கொணரலாயினர். அவற்றைக் கேள்விக்குட்படுத்தினர், தமது எதிர்ப்பையும் மறுப்பையும் வெளிக்காட்டினர். தமது பிரச்சினைகளுக்காக மட்டுமின்றி சமூக, தேசிய, உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பான தமது விமர்சனங்களை முன்வைத்ததோடு, அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரான தமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தனர். சமுதாய மறுசீரமைப்பில் தமது காத்திரமான பங்களிப்பு குறித்த ஆழமான தமது புரிதலையும் செயற்திறனையும் பதிவுசெய்தனர். காலங்காலமாக நான்கு சுவர்களுக்குள் முடக்கப்பட்டிருந்த அவர்களின் ஆற்றலும் உணர்வுகளும் அகன்றதொரு தளத்தில் தமக்கான சிறகுகளைத் தாமே கட்டமைத்துக்கொள்ளும் முயற்சிகளில் தன்முனைப்புப் பெற்றன. அந்த வகையில், ஈழத்துப் பெண் கவிஞர்கள் தமது படைப்புக்களில் தம்மையும், தாம் சார்ந்த அனைத்தையும் எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் என்பதை காய்தல் உவத்தல் இன்றி ஆராய்வதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
  
பெண்களும் காதலும்
 
காதல் என்ற மெல்லுணர்வு மனித உயிரி என்ற வகையில் பெண்ணுக்கும் உரியதுதான் என்றாலும் அதனைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதில் ‘பெண்’ காலங்காலமாகப் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்தே வந்துள்ளாள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் காதல் கவிதைகளைப் பொறுத்தவரையில், அவை பெரும்பாலும் ஆண்களால் பாடப்படுபவை, ஆண்கள் தம்மைப் பெண்களாகப் பாவனை செய்து பாடியவை என்ற இரு போக்குகளைப் பிரதிபலிக்கின்றன. தமது அகவயப்பட்ட காதலுணர்வைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவது பெண்களின் இயல்புக்கு மாற்றமானது என்ற கருத்துநிலையே அக்காலத்தில் மேலோங்கி இருந்தது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பெண்களுக்குரியன என்பன போன்ற கருத்தியல்கள் சமூகத்தில் வேரூன்றியிருந்தன. அந்த வகையில், ஆங்காங்கே பெண்களின் காதல் பற்றிய ஒரு சில வெளிப்பாடுகள் இருப்பினும் அவற்றுக்குக்கூட வெவ்வேறு முலாம்களும் முகமூடிகளும் போடப்படும் நிலையே வழக்கில் இருந்தது எனலாம் (உதாரணம்: ‘ஒளவைப்பாட்டி’ என்ற விம்பம்). அல்லது அவை முதன்மைப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டன அல்லது ஓரங்கட்டப்பட்டன. சங்க காலப் புலவர்களில் அகநானூறு, குறுந்தொகை ஆகிய தொகைநூல்களில் சுமார் 26 காதல் பாடல்களைப் பாடியுள்ள ஒளவையார், நன்னாகையார், வெள்ளிவீதியார், பல்லவர் காலத்தில் நாச்சியார் திருமொழி, திருப்பாவை போன்றவற்றைத் தந்த ஆண்டாள் போன்றோர் காதல் உணர்வை வெளிப்படுத்திப் பாடிய தமிழ்ப் பெண்களில் முக்கியமானவர்கள்.எனின், காலப்போக்கில் நவீன பெண்கள் தமது காதலுணர்வை, அதன் பல்வேறுபட்ட அனுபவங்களைச் சுதந்திரமாகத் தமது படைப்புக்களில் வெளிக்கொணரத் தொடங்கினர். இத்தகைய காதல் கவிதைகளைப் பொறுத்தவரையில் அவை ஆண்களின் காதல் கவிதைகளில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றன எனலாம். பெண்மீதான ஆணின் காதல் உணர்வு வெளிப்பாட்டிலிருந்து பெரிதும் வித்தியாசப்பட்டு பெண்ணின் காதல் உணர்வு தனித்தன்மையோடு வெளிப்படுத்தப்படுகின்றது. பெண்களின் சுய இருப்பு, போலித்தன்மை அற்ற மெய்யுணர்வு, சுயாதீனம், ஏற்றத்தாழ்வற்ற சமத்துவமான காதல் முதலான தனியடையாளங்களைப் பிரதிபலிப்பனவாய் இக்காதல் கவிதைகள் அமைந்துள்ளன. பிரிவுத்துயரை வெளிப்படுத்தும் கவிதைகளில்கூட பெண்ணின் தவிப்பும் இரங்கலுணர்வும் மிக நுணுக்கமாக வெளிப்படுத்தப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. உதாரணத்துக்கு சில கவிதைப் பகுதிகளை நோக்குவோம்.
 
“அழிந்தும் அழியாத காதலுடன்
அவளின் ஆன்மா
கிழித்தெறிந்த கந்தலாடைகள் போல
காற்றில் சடசடத்து
சிரிப்பொலிகளின் பின்னால்
மெதுமெதுவாய் ஊர்கிறது”
(‘காற்றில் ஈரலிக்கும் காதல்’ – இது நதியின் நாள்) என்னும் பெண்ணியாவின் வரிகளிலும்,
 
“ஆழிப் பிரளயத்தில்
அல்லலுறும் சிறுதுரும்பாய்…
பெருமழைப் போதிலொரு
பொந்திழந்த சிற்றெறும்பாய்…
வலியாய்… கண்ணீராய்…
வாழ்வின் பெருந்துயராய்…
…….
எல்லாமாய் அந்தரத்தில்
நான் கிடந்து தவிக்கின்றேன்.
எனக்கே அந்நியமாய்…
எனக்கே நான் புதிரானேன்!”
(‘தவித்துழல்தல்’) என்ற லறீனாவின் வரிகளிலும்,
“காற்றென்னைக் கடந்துபோகையிலும்
நிழலென்னைத் தொடர்ந்து வருகையிலும்
அதன் காலடியோசை
உன்னுடையதோவென
திடுக்கிட்டுத் திரும்புகிறேன்”
(நிழலின் காலடியோசைகள்’- என்தேசத்தில் நான்)
 
என்ற ஜெஸீமாவின் வரிகளிலும் மன உறவின் நெருக்கம், தூய அன்புக்கான மனவேட்கை, பிரிவினால் விளைந்த தவிப்பு, ஏக்கம் என்பன முதன்மைப்படுத்தப்படுகின்றனவே தவிர உடல்வேட்கை சார்ந்த உணர்வுநிலைப்பாடு முன்னிலைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நவீன பெண் கவிஞர்களின் காதல் வெளிப்பாட்டைப் பொறுத்தவரை அவை சமத்துவமான காதலை வேண்டிநிற்கின்றன. ‘கற்புநிலை என்று சொல்லவந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ என்ற பாரதியின் பிரகடனத்தை ஒத்து இங்கு காதலைப் பொதுவில்வைத்து, தானும் சமநிலையில் வைத்து நேசிக்கப்படல் வேண்டும் என்ற பெண்ணுணர்வின் விழிப்புநிலையைப் பிரதிபலிப்பதாய் அனேகப் பெண்களின் கவிதைகள் அமைந்திருக்கக் காணலாம். அவற்றை அப்பெண்கள் மிகத் துணிவாகவும் வெளிப்படையாகவும் கூறுகிறார்கள். வகைமாதிரிக்கு சிலவற்றை நோக்குவோமாயின்,
 
“நீயும் நானும்
வரையறைகளைக் கடக்கவேண்டும் – நான்
உன் விவேகத்தோடும்
நீ என் வீரியத்தோடும்
கடக்கவேண்டும்.
எனினும்
என் கருவறையை
நிறைப்பது உன் குறியல்ல
என்ற புரிதலோடு
வா!
ஒன்றாய்க் கடப்போம்
நீ என் விவேகத்தோடும்
நான் உன் வீரியத்தோடும்”
(‘தடைதாண்டி’- உரத்துப்பேச) என்ற ஆழியாளின் வரிகளிலாகட்டும்,
“உனது அதிகாரங்களையும்
எனது அண்டிவாழ்தலையும்
கீழிறக்கிவைத்துவிடுவது
சாத்தியமெனில் ஒன்று சேர்வோம்”
(‘நீ அவனைக் காதலித்தாயா?’- ஒரு கடல் நீரூற்றி) என்ற பஹீமாவின் வரிகளிலாகட்டும்,
அக்காதலை
முத்தமிட்டும்
நெற்றியை வருடியும்
உன்னிரு கைகளை
இறுகப் பற்றியும்
உணர்த்தவே விரும்பினேன்
எனது காதல்
சுதந்திரமானது
எந்தச் சிறு நிர்ப்பந்தமும்
அற்றது
…………….
பறவைகள் போலவும்
பூக்கள் போலவும்
இயல்பாய்
மனிதர்
இருக்கும் நாளில்
நானும் உனது அருகில் நெருங்குவேன்
…………….
என்ன செய்வது?
நான்
விடுதலை அடைந்தவள்
உன்னால்
அந்த உச்சிக்கு
வரமுடியாதே!”
(‘இடைவெளி’ – சொல்லாத சேதிகள்) என்ற சங்கரியின் கூர்மையான வரிகளினூடாகட்டும்
“வாசமுள்ள மலர்மாலையாய்
ஒரு வாலிபனின் தோளில் தொங்க
எனக்கும் ஆசையிருக்கிறது – ஆனால்
அந்தத் தோளுக்குரிய தோழனிடத்தில்
தூய்மையை எதிர்பார்க்கிறேன்..!
கறைபடிந்த கரங்களுக்கு
இரையாகிப்போக எனக்கு இஷ்டமில்லை”
 
என்ற மரீனா இல்யாஸின் கவிதை அடிகளிலாகட்டும் ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவமான, தூய காதலை வேண்டிநிற்கும் போக்கையே காணக்கூடியதாய் உள்ளது. அவ்வாறே, போலித்தனங்களைத் தகர்த்துக்கொண்டு உள்ளது உள்ளபடி பாடும் கூர்மை அவர்களுக்குக் கைவசப்பட்டிருக்கிறது.
 
“நீ திருப்பித்தரலாம்
மணிக்கூட்டை
கைவிளக்கை, கத்திரிக்கோலை
…..
என்று தொடங்கும் ஆழியாளின் கவிதை,
 
“உன் முகட்டில் சுவடாய்ப்
பதித்த
என் காட்டுரோஜா உணர்வுகளையும்,
அள்ளியள்ளித் தெளித்து
பூப்பூவாய்ப் பரவிய
திவலைக் குளிர்ச்சியையும்
எப்படி மறுதலிப்பாய்?
எந்த உருவில் திருப்பி அனுப்புவாய்?
கடிதத்திலா
காகிதப் பொட்டலத்திலா?
இதில் நான்
உனக்கிட்ட உதட்டு முத்தங்களையோ
நீ எனக்குள் செலுத்திய
ஆயிரத்தெட்டுக் கோடி விந்தணுக்களையோ
நான் கணக்கில் எடுத்துச்
சேர்க்கவில்லை என்பது மட்டும்
நமக்குள்
ஒருபுறமாகவே இருக்கட்டும்.”
 
(‘நிலுவை’ – உரத்துப் பேச) என்று முடிவுறும்போது ஏற்படுத்தும் தாக்கம் மிகக் கனதியானது.
 
 
மேற்படி போக்கிலிருந்து வேறுபட்டு காதலையும் அது சார்ந்த உணர்வுகளையும் இன்னொரு கோணத்தில் அணுக முனையும் சில ஈழத்துப் பெண் கவிஞர்களும் நம்மிடையே உள்ளனர். கலா, கற்பகம் யசோதரா, மைதிலி போன்றோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். பெரும் சர்ச்சையைக் கிளப்பிய கலாவின் ‘கோணேஸ்வரிகள்’ கவிதை, சிங்கள-தமிழ் முரணிலையைப் பகைப்புலமாகக் கொண்டு எழுதப்பட்டதாகக் கருதப்பட்ட போதிலும், அதனை ஆண்-பெண் முரணிலையை அடியொட்டியும் வாசிப்புக்கு உட்படுத்தலாம் என்ற கருத்து நிலவுகின்றது. கலா தன்னுடைய கவிதையில் ‘யோனி’ என்ற குறியீட்டை படைப்பின் அதி உச்ச சாத்தியப்பாட்டைப் புலப்படுத்தும் வகையில் கட்டமைத்துள்ளார் என “ஈழத்து நவீன கவிதையில் பெண் புனைவு” எனும் கட்டுரையில் சி. ரமேஷ் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
காதலைக் கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கும் வகையில் எழுதும் மற்றொருவராக மைதிலி அடையாளம் காணப்படுகிறார்.
 
“குறும்பும் சிரிப்பும் கொண்டவளாய்
கனத்த மார்புகளுடையவளாய்
நேசிக்கப்படுகிறேன், நான்” என்று குமுறும் அவர்,
“யோனி முலைகளற்ற
பெண்ணை
யாரும் காதல் கொள்வாரா?” என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறார்.இதிலிருந்து ஒருபடி மேலே போய் ஆண் உலகின் வன்முறை மீது அளவற்ற வெறுப்பைக் கொண்டவராய்த் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் கற்பகம் யசோதரா தற்பாலின்பம், லெஸ்பியன் சார்ந்து மாற்றுப்பாலின்பம் குறித்தும் எழுதியிருக்கின்றார்.
 
“தெருவோரம் நின்று
சிறிதளவு அன்பிற்காய்
மண்டியிட்டிருந்தவள் நான்.
இன்றோ-
நான் யார் யாரோ
நினைப்பிற்கும் “ஆட”ப் பிறக்காத
தாடகைச் சிறாம்பி!
கடவுளின் ஒரு பகுதி
அல்லது நானே கடவுள்.
இத் தற்பிரேமங்கள் குறித்து
எதுவும் பேசாதே-
என்றைக்கோ
எனக்கான முத்தங்களைக்
காற்று விழுங்கிவிட்டது.
என்னை என்னால்(க்) கை
விட முடியவில்லை”
 
என்கிறார், கற்பகம் யசோதரா.
இவ்வாறாக, ஈழத்துத் தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகளில் காதல், அது சார்ந்த நிலைப்பாடுகள் பன்முகத்தன்மை கொண்டவையாக வெளிப்படுத்தப்படுகின்ற போக்கை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இக் கவிதாயினிகளில் சிலர் பெண்ணின் முலை, யோனி, கருப்பை முதலான அவயவங்களைத் தம்முடைய கருத்துநிலையை மிகக் கூர்மையாகத் தெளிவுறுத்தும் குறியீடுகளாகத் தமது கவிதைகளில் கையாண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்தப் போக்கு பல சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டுள்ளதையும் நாமறிவோம். இந்நிலையில், இதனை அதாவது, இந்தப் போக்கைச் சற்றுப் பின்நோக்கிப் பார்க்க விழைகின்றேன். பெண்ணின் மேற்படி அவயவங்களை முன்னிலைப்படுத்துவதென்பது தம் கருத்துநிலையை தாக்குதிறன் கூடியதாக வெளிப்படுத்தக்கூடிய மிகச் சிறந்த உத்தி (strategy) ஆகும் என்ற நிலையை அல்லது போக்கை (trend) முதன்முதலாக உருவாக்கியவர்கள் யார் என்ற கேள்வி இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கலாநிதி செல்வி திருச்சந்திரன் அவர்களின் “தமிழ்வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலைநோக்கு” என்ற ஆய்வு நூலை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, உண்மையில், அப்படியான போக்கை உருவாக்கியவர்கள் ஆண்களே, அதிலும் நம் அனைவருடைய மரியாதைக்குமுரிய சமயப்பெரியார்களே என்ற முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கின்றது.
 
“கெட்ட நாற்றமுள்ள யோனிக் கேணியில் வீழ்ந்தார்
கெடுவர் என்றே துணிந்து ஆடு பாம்பே” என்ற பாம்பாட்டிச் சித்தரின் பாடலிலும்,
“பெண்ணாகி வந்தொரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங்குழியிடைத் தள்ளி…”
 
என்று தொடரும் பட்டினத்தடிகளின் பாடலிலும் இன்னும் பல சித்தர் பாடல்களிலும் தீவிரப் பெண்வெறுப்புக்கான உத்தியாக இத்தகைய மொழிக்கையாட்சி இடம்பெற்றுள்ளமை கண்கூடு. நவீன பெண்களில் சிலர் இதையே ஆணாதிக்கத்துக்கும் பெண்ணடக்குமுறைக்கும் எதிரான தம்முடைய நிலைப்பாட்டைப் பொட்டில் அறைவது போலத் தாக்குதிறன் கூடியதாக வெளிப்படுத்தும் உத்தியாகக் கைக்கொள்ள முனைந்துள்ளனரோ என்று தான் எண்ணத் தோன்றுகின்றது. எது எவ்வாறு இருப்பினும், தாம் கொண்ட கருத்துநிலையை இக்கவிதாயினிகள் ஒவ்வொருவரும் தமது விருப்பத்துக்கும் இயல்புக்கும் ஏற்பத் தனித் தனிப் பாணியில் வெவ்வேறு உத்திகளைக் கையாண்டு தமக்கேயுரிய “பெண்மொழி”யில் வெளிப்படுத்தியுள்ளனர் என்றே நாம் இதனை அணுகவேண்டியுள்ளது.பெண்களும் வன்முறையும்பெண்களுக்கெதிரான வன்முறைகளைப் பலவகைப்படுத்தலாம். அடித்தல், உதைத்தல், இம்சித்தல், வசைபாடுதல், இரண்டாம் பிரஜையாகவும் தாழ்த்தப்பட்ட பாலினமாகவும் நடத்தப்படுதல், பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் சேட்டைகள், பாலியல் வல்லுறவு என்று அவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றை வீட்டினுள் நடக்கின்ற குடும்ப வன்முறைகள், வெளியில் நடக்கின்ற வன்முறைகள் என இரண்டு வகையாக நோக்கலாம்.
 
ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகள் இவற்றைத் துணிந்து விமர்சிப்பதை, எதிர்த்து நிற்பதை நாம் அவதானிக்கலாம். பெண்களுக்கெதிரான இந்த வன்முறைகள் பல்வேறு கோணங்களில் அணுகப்பட்டுள்ளன என்ற வகையில் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
“அது போர்க்களம்
வசதியான பரிசோதனைக் கூடம்
வற்றாத களஞ்சியம்
நிரந்தர சிறைச்சாலை
அது பலிபீடம்
அது பெண் உடல்
உள்ளக் குமுறல்
உயிர்த் துடிப்பு
இருபாலாருக்கும் ஒரே விதமானது
எனினும்
பெண்ணுடையது என்பதனாலேயே
எந்த மரியாதையும் இருப்பதில்லை அதற்கு.
என் முன்தான் நிகழ்கின்றது
என் மீதான கொலை”
 
(‘பெண்பலி’- எனக்குக் கவிதை முகம்) என்ற அனாரின் ஆதங்கத்தில் மட்டுமல்ல,
 
“உனக்குப் பொழுது போக்காகவும்
எனக்குப் போராட்டமாகவும்
போய்விட்டது
(என்) வாழ்க்கை
நீ கனவு காண்பதற்காக
என் கண்களைப் பறித்தாய்
நீ உலாவி மகிழ்வதற்காக
என் கால்களைத் தடுத்தாய்
தாழ்மையை
பற்றுதலை
உன் திமிர் பிடித்த அதிகாரங்கள்
தாட்சண்யமின்றி
தண்டித்தன”
(‘சூரியனைப் பற்ற வைக்க’ – ஓவியம் வரையாத தூரிகை) என்ற அவரின் மனக்குமுறலிலும்,
“இயந்திரப்பேய்கள் வாழுகின்ற
எல்லா வீட்டின்
சமையலறைச் சுவர்களிலும்
படுக்கையறைச் சுவர்களிலும்
இந்தச் சரித்திரங்கள் எழுதப்படுகின்றன.
………
படுக்கை விரிப்பை சரிசெய்வதையும்
புதிய சமையலை கண்டுபிடிப்பதையும் விட
இந்த உலகம் விரிவதே இல்லை”
 
(‘கயல்விழி விரிந்த தோல்’ -இது நதியின் நாள்) என்று பெண்ணியா காட்டும் ஒரு சாராசரிப் பெண்ணின் சித்திரத்தில் இருந்தும்,
 
“உன்னுடன் வாழ்வு
பிணைக்கப்பட்ட போதே – என்
பெயரை… சுயத்தை…
தொலைத்துவிட்டேன்.”
என்று தொடங்கும் கவிதையில்…
“…..
எந்தன்-
உணர்வுகள்
கிளர்ந்தெழும் பொழுதுகளில்
நீ-
மரமானாய்;
எனது நிசிக்களில்
நிலா சூரியனானான்;
என்னுடைய விடியல்களில்
பூச்செடிகள்தோறும்
முட்களே மலர்ந்தன…
நான்-
வர்ணனைகளுக்கு அப்பால்
முகமிழந்து ‘வெறும்’ மனுஷியாய்…!”
 
(‘வர்ணனைகளுக்கு அப்பால்’ – வீசுக புயலே! ) என்ற லறீனாவின் வரிகளிலும்,நான்கு சுவர்களுக்குள் மௌனமாகக் குமுறும் ‘பெண்’ணின் அழுகையும் ஆணாதிக்க அடக்குமுறையும் தெளிவாகப் பதிவுசெய்யப்படுகின்றன. நான்கு சுவர்களுக்குள் நடப்பதைப் பெண்கள் வெளியில் சொல்வது கூடாது, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்றெல்லாம் காலங்காலமாக நிலவிவந்த சம்பிரதாய வேலிகளைத் தாண்டி, தமக்கெதிரான அடக்குமுறைகளை அழுத்தமாகப் பதிவுசெய்வதோடு மட்டுமன்றி அவற்றைக் கேள்விக்குட்படுத்தவும், காரசாரமாக விமர்சனத்துக்குட்படுத்தவும் பெண்கள் துணிந்துவிட்டார்கள் என்பதைப் பல கவிதாயினிகளின் படைப்புக்கள் நமக்குத் தெளிவுறுத்துகின்றன. வகைமாதிரிக்குச் சில எடுத்துக்காட்டுக்கள் இதோ:
 
“….உனக்கு உள்ளது போல
உரிமைகள் எனக்கும் உண்டு
ஏனெனில்
நான்
மானிடப் பெண்ணாகப்
பிறந்திருக்கிறேன்
எனக்கும் உனக்குமிடையிலுள்ளது
ஓர் ஒப்பந்தம் மட்டுமே!”
 
(‘உயில்களல்ல உயிர்கள்’ – உரத்துப் பேசும் உள்மனம்) என்று, ‘திருமணம்’ என்பது பரஸ்பரப் புரிந்துணர்வுடன்கூடிய ஓர் ஒப்பந்தம் மட்டுமே என்பதை உணர்த்துகின்றார், சுல்பிகா.
 
“அற்பப் புழுதான் – நீயெனினும்
வலுத்த குரலுடனும்
ஓங்கிய கரங்களுடனும்
எப்பொழுதும் அவளை விரட்டினாய்
ஆதித்திமிரின் அடங்காத ஆங்காரத்துடன்
எளியவளின் தேவைகளை
எட்டி உதைத்தாய்
நீ கொடுத்த சுமைகளையும்
அந்த உடலையும்
உன்னிடமே எறிந்துவிட்டாள்
இனி எக்காலத்திலும்
உன்னெதிரே வரப்போவதில்லை
நீ துன்புறுத்திய அவள் ஆத்மா”
 
(‘தற்கொலை’ – ஆதித்துயர்) என்று குமுறியெழும் ஃபஹீமாவின் கவிதைகளில் காலங்காலமாகத் தொடரும் பெண்ணின் இடையறாத துயரங்கள் மிக ஆழமாகவும் வலுவாகவும் பதிவுசெய்யப்பட்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக, ஃபஹீமாவின் கவிதைகளில் கையாளப்படும் ‘ஆதித்துயர்’, ‘ஆதித் திமிர்’ முதலான மொழிப் பிரயோகங்கள் மிகுந்த கவனிப்புக்குரியவை. ஆதியிலிருந்து தொடர்ந்துவரும் பெண்ணின் துயரினைக் கவனமாகத் தெரிந்தெடுத்த சொற்களைக் கையாண்டு தன் கவிதைகளில் வடிப்பதில் ஃபஹீமா கைதேர்ந்தவராகத் திகழ்கின்றார் எனத் துணிந்துகூறலாம்.
“….
உன் வசைப்பாடல் தனில்
நாய் பன்றி தாண்டி
உடல் விற்கும்
வேசியையும்
உவமானத்திற்கு இழுக்கிறாய்.”
 
(‘வெளிப்படுத்துதல்’ – இது நதியின் நாள்) என்ற வரிகள் மூலம் கணவன் என்ற உரிமையைப் பயன்படுத்தி மனைவியை வதைக்கின்ற இழிசெயலைத் தோலுரித்துக் காட்டுகிறார், பெண்ணியா. இதே விடயத்தை,
“நான்…
மூர்க்கமானவள்
‘வினை’ பிடித்தவள்
அஃறிணைப் பிறப்பு…
எப்படியெனினும்
உன் வரட்டுப் பிடிவாதத்திற்கும்
ஆழ்மனத் தாக்கங்களுக்கும்
உன் காயங்களுக்கும்
உத்தியோகத்திற்கும்
கௌரவத்துக்கும்
எதிர்பார்ப்புகளுக்கும்
என்னைத்தானே
இரை கொள்கிறாய்!”
 
(‘அது தானே நான்’ – உயிர்வெளி) என்று யாழ். ஆதிரையும் பதிவுசெய்கின்றார். அதேநேரம்,
 
“சுயத்தையெல்லாம்
ஒப்படைத்து விட்டு
வைக்கோல் பொம்மையாகி
உன் இழுப்புக்கு
ஆட வேண்டுமென்றே
நீ நினைக்கிறாய்
நீ சொல்வது தான் வேதம்
நீ காட்டுவது தான் உலகமெனில்
எனக்கென்று
இதயமும் கண்களும் எதற்கு?”
 
(‘வன்மப்படுதல்’ – ஓவியம் வரையாத தூரிகை) என்று நறுக்கென்று எதிர்க்கேள்வி எழுப்புகிறார், அனார். அதுமட்டுமல்ல,
 
“எம் உயிரில்
உரைத்துச் சொன்னாலும்
உம் உதிரத்தில் உறைக்காதா?
ஆளுமை கண்டால் ஆட்டக்காவடி என்பீர்
அஞ்சி ஒடுங்கிவிட்டால்
அசல் குத்துவிளக்கு என்பீர் – அந்த
வெள்ளிடிதான் உம்வாயில்
விரைந்தோடி வீழாதோ?”
 
(‘நிஜம்’ – உரத்துப் பேச) என்று ஆவேசமாகச் சாடுகிறார், ஆழியாள்.
 
இவ்வாறாக, பெண்களுக்கெதிரான வன்முறைகளையும், அதற்கான தமது எதிர்வினைகளையும் பல பெண்கள் பதிவுசெய்துள்ளனர். சுல்பிகாவின் ‘யோனியாகிப் போன பெண்கள்’, ‘இருப்பின் மறுப்பு’, ஆழியாளின் ‘மன்னம்பேரிகள்’, ‘பதில்’, (உரத்துப் பேச) அனாரின் ‘துஷ்பிரயோகம்’, ‘ம(ர)ணப் பந்தல்’, ‘ பெண்ணியாவின் ‘வதைபடலம்'(என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!), ஃபஹீமாவின் ‘காட்டுமிராண்டியிடம் சிக்குண்டவள்’ , ‘பேய்களால் தின்னப்படுபவள்’, ‘ஆதித்துயர்’ ‘தற்கொலை’, ‘கடைசிச் சொல்’, சிவரமணியின், ‘முனைப்பு’, லறீனாவின் ‘கவிதையும் அவனும்’, ‘நான்கு சுவர்களுக்குள்’, ‘சிறகுகளை வருடும் ஒருவனுக்கு’, ‘இருத்தலுக்கான கனவுகள்’ றஸீனா புஹாரின் ‘வாழ்தலை நேசிக்கின்றோம்’, ‘காமாட்சி ஏன் செத்தாள்?’ என்பவை அத்தகைய கவிதைகளில் சிலவாகும்.
இவை தவிர குடும்பத்திலும் சமூகத்திலும் நிலவும் பெண்ணுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் என்பவற்றையும் நம் பெண்களின் கவிதைகள் பல்வேறு கோணங்களில் பேசுகின்றன.
“…
அரபு நாட்டு அசிங்கங்களைக் கழுவி
நீ அனுப்பும் ரியாலும் தினாரும்
வேண்டாம்….
அக்காவின் கணவரின்
அந்த ரகசியத்தொடுகைகள்…
அடுத்த வீட்டுக் கிழட்டு மாமாவின்
அர்த்தமுள்ள பார்வைகள்…
இளவட்டங்களின் சின்னச் சின்ன
கண் சிமிட்டல்கள்
எதற்குமே அலட்டிக் கொள்ளாத
என் குடிகார அப்பாவோடு
நானும், இளையதுகளும்.
நீ வரத்தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
எனக்கு ‘அக்கினிப் பரீட்சை’ தான்.”
 
(‘அம்மா வந்து விடேன்!’ – மண்ணிழந்த வேர்கள்) என்ற றஸீனா புஹாரின் கவிதை ‘பெண்’ என்பதால் அவள் அனுபவிக்கும் அன்றாட இடர்ப்பாடுகளை அடையாளப்படுத்துகின்றது. அவ்வாறே, பெண்ணின் இருப்பும் அவளின் சுயமும் மறுதலிக்கப்படும் நிலையை,
“…….
உன்னுடை உணர்வு
உனக்கெனக் கனவு
விருப்பு, வெறுப்பு
உனக்கொரு உள்ளம
இருப்பதை இங்கே
மதித்தவர் யாரோ?
நகர்ந்திடல் கடந்திடல் சாத்தியமின்றி
எத்தனை தளைகள்
உன்னைப் பிணித்தன?
தெரிவுச் சுதந்திரம்
எதுவுமே இன்றி
தருவதை மட்டுமே
நுகர்ந்து நீ வாழ்ந்தாய்…”
 
(“பூனையும் பெண்களும்’ ) என்ற லறீனாவின் வரிகள் பதிவுசெய்கின்றன.இவையெல்லாவற்றையும் விட,
 
“என் மகளுக்கு
எப்படிக் காட்டுவேன்
இந்த உலகை…
மூன்று வயதிலும்
பால்முலையருந்தும் பவளவாய்க் குருத்துகள்
கொஞ்சிக்குலவி
நிலாக் காட்டச் சிரிக்கும்
சின்ன வயதிலும்
ஆண் குறிகளால் துளைக்கப்படுவதை
எப்படிக் காட்டுவேன்?
அள்ளி அணைக்கின்ற அப்பாவோ
ஆசையுடன் கொஞ்சுகின்ற மாமாவோ ஆயினும்
அடிவயிற்றில் துளையிடும்
ஆண்குறியர்களாகிப் போய்விடக் கூடிய
இந்த உலகை
எப்படிக் காட்டுவேன்?
சூழவுள்ள உலகம் முழுவதும்
விறைத்துப் போன ஆண்குறிகளாய்
அச்சம் தருவதை
எப்படித் தவிர்ப்பேன்?”
 
(‘என்னுடைய சிறிய மலர்’ – எல்லை கடத்தல்) என்று பெண்ணுக்கு இந்தச் சமூகத்தில் உள்ள அச்சுறுத்தலான நிலையை மிகக் கனதியாகப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ஒளவையின் கவிதை மிக முக்கியமானது. அதிர்வை ஏற்படுத்துவது. அவ்வாறே, பழிவாங்குதல், பகைதீர்த்தல் என்று வரும்போது பெண்கள் கடித்துக் குதறப்படும் நிலையை,
 
“போரிலும் பகையிலும் முதல் பொருளாய்
அவளையே சூறையாடினாய்
அவளுக்கே துயரிழைத்தாய்
உன்னால் அனாதைகளாக்கப்பட்ட
குழந்தைகளையெல்லாம்
அவளிடமே ஒப்படைத்தாய்
தலைவனாகவும் தேவனாகவும் நீ
தலைநிமிர்ந்து நடந்தாய்”
 
( ‘பேறுகள் உனக்கு மட்டுமல்ல’- ஆதித்துயர்) என்ற ஃபஹீமாவின் வரிகள் மிக அழகாக எடுத்துக்காட்டுகின்றன. அதுமட்டுமல்ல,
 
பெண்ணின் பாலியல்
விற்பனைப் பண்டம்
விளம்பர யுக்தி
கைலஞ்சக் கற்பகம்
களியாட்ட விருந்து
அரசியல் ஆயுதம் – ஏன்
அடக்குமுறையின் அடித்தளமும்தான்…”
 
(‘உனக்காக அல்ல’ –உயிர்த்தெழல்) என்ற சுல்பிகாவின் வரிகள் இன்றைய பெண்ணின் அவல நிலையைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. கலியாணச் சந்தையில் பெண் படும் பாட்டைப் பல பெண்கள் பல்வேறு விதமாகத் தமது கவிதைகளில் பதிவுசெய்துள்ள போதிலும், எள்ளலும் ஆவேசமும் கொண்ட ஒளவையின் கவிதைத்தொனி கவனிப்புக்குரியது:
 
“ஊரில் மீசையுடன் எவருமில்லை
அந்நிய நாட்டில் அகதிகளாக
தாடியும் மீசையுமாய்
தடியர்கள் உள்ளனராம்
ஆம்பிளைத் தானாம்!
குமர்களை முற்ற விடாமல்
கன்னி கழிக்க
சீதனம் மட்டும்
சிறப்பாய் வேணுமாம். இன்னும்
வெள்ளையாய் சதைப் பிடிப்பாய்….
பேரம் பேசலும் தொடரும்.”
 
(‘கலியாணம்’ – எல்லை கடத்தல்). இதே கருத்தை நையாண்டியுடன்,
 
“ஆசையுள்ள ஆண்களெல்லாம் – அம்மாவையைய
அசலாக சாட்டித்தான் பணம் கறப்பர்
மீசையுள்ள ஆண்மகனாய் நீயிருந்தால்
விலைகூறி உன்னையே நீ விற்கவேண்டாம்.”
 
(‘நொண்டிச் சாட்டு’ – மண்ணிழந்த வேர்கள்) என்கிறார், லுணுகலை றஸீனா புஹார்.
இவைதவிர, போர்ச் சூழலில் இலங்கைத் தமிழ்ப் பெண்கள் அனுபவித்த சொல்லொணாக் கொடுமைகள் பல பெண் கவிஞர்களால் மிக ஆழமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.பெண்’ எனும் பெருமித உணர்வும் பெண்ணின் பிரகடனமும்ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகளில் காணக்கூடிய மற்றொரு தனித்துவமான பரிமாணமாக நாம் இதனை அடையாளப்படுத்தலாம். பெண்ணாய்ப் பிறந்துவிட்டோமே என்று வருந்தியழும் கவிதைகளும், சாதி, சமயம், சம்பிரதாயம், குடும்ப- சமூக- அரசியல் சூழல் போன்ற இன்னோரன்ன காரணங்களால் எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் இடையறாது முகம்கொடுக்க நேர்ந்ததால் ஏற்பட்ட விரக்தியால் சலிப்புற்ற கவிதைகளும் நம் பெண்களிடம் இருக்கவே செய்கின்றன. ‘சிவரமணியின் வாழ்வும் கவிதையும்- ஒரு அறிமுகம்’ என்ற கட்டுரையில் கலாநிதி சித்திரலேகா மேற்கோள் காட்டியுள்ளது போன்று,
 
“… நாங்கள் எழுந்தோம்
உலகை மாற்ற அல்ல
இன்னொரு இரவு நோக்கி”
“என்னிடம்
ஒரு துண்டுப் பிரசுரத்தைப் போல
நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க
வார்த்தைகள் இல்லை”
 
என்பதான கவிதை வரிகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கவிதாயினிகளிடமிருந்து காணக்கூடியதாக இருப்பினும், அவற்றுக்கு முற்றிலும் மாறுபட்டதான பெண்மையின் எழுச்சிக் குரலையும் நாம் பரவலாக அவதானிக்கக்கூடியதாய் உள்ளது என்பதைக் குறிப்பிட்டுக் கூறவேண்டும்.
 
“என் இனிய தோழிகளே
இன்னுமா தலைவார
கண்ணாடி தேடுகிறீர்?
சேலைகளைச் சரிப்படுத்தியே
வேலைகள் வீணாகின்றன
வேண்டாம் தோழிகளே
வேண்டாம்.
…..
ஆடையின் மடிப்புகள்
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணீர் விட்ட நாட்களை மறப்போம்
வெட்கம் கெட்ட
அந்த நாட்களை
மறந்தேவிடுவோம்
…………
புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழியரே”
 
(‘வையகத்தை வெற்றிகொள்ள’ சிவரமணி கவிதைகள்) என்ற சிவரமணியின் குரல் வையகத்தை வென்றெடுக்கப் பிறந்த, விடுதலைபெற்ற பெண்ணின் குரலை நமக்கு அடையாளப்படுத்துகின்றது. அதுமட்டுமல்ல,
“உங்களுடைய வரையறைகளின்
 
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ளமுடியாது.
இதுவரை காலமும்
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்துவரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்.
………
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரத்தைப் போன்று
எனது இருத்தல் உறுதி பெற்றது.
நிராகரிக்கப்பட முடியாதவள் நான்
இனியும் என்ன
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான் பிரசன்னமாயுள்ளேன்”
 
(‘அவமானப்படுத்தப்பட்டவள்’ சிவரமணி கவிதைகள்) என்ற சிவரமணியின் பிரகடனம் மிக முக்கியமானது. கலாநிதி சித்திரலேகா சொல்வது போல கல், நட்சத்திரம், கேள்வி முதலான உவமைப் பயன்பாட்டினூடே ஒரு பெண் தன்னைத்தானே உணர்தலின் ஆழம், பெருமிதம், உறுதி என்பன இங்கே மிக அழுத்தமாகப் புலப்படுத்தப்படுகின்றன.
 
நீ நினைத்தபடி
சேர்க்கவும் கழிக்கவும்
செப்பனிடவும்
களிமண் பொம்மையல்ல நான்
மூக்கும் முழியும்
மூளையும் உள்ள பெண்.
நீ வைத்திருக்கும்
அளவுப் பாத்திரத்தில்
என்னை ஊற்றி வார்த்துவிட
இனியும் எண்ணாதே
மன்னிக்க
உனது பணிப்பின் பேரில்
நான் பிறக்கவில்லை”
 
(‘கோரிக்கை’- ஓவியம் வரையாத தூரிகை) என்ற அனாரின் குரல் கோரிக்கையாக அன்றி எச்சரிக்கையாகவே ஒலிப்பதைக் காண்கின்றோம்.
 
“இறந்தவர் அல்லர் நாம்
இதயம் துடிக்கும் ஏழைப் பெண்கள்
மண்ணின் குழந்தைகள்
மானிடப் பெண்கள் நாம்
இனியும் சகியோம்
இருளின் ஆட்சியை
எதற்கும் அஞ்சோம்
துன்பம் ஏற்றிட்டோம்
துயர்மிகக் கொள்ளோம்
வென்று இவ்வுலகில் நிலைத்திட வந்தோம்
இன்று பிறந்தோம்
இன்று பிறந்தோம்
வென்று வாழ்ந்திட
இன்று பிறந்தோம்”
 
(‘திரைகளின் பின்னால்’ – விலங்கிடப்பட்ட மானுடம்)
என்ற சுல்பிகாவின் இவ்வரிகள் பெண்களின் எழுச்சிக் குரலாகவே ஒலிக்கின்றன. அவ்வாறே, (‘நான் பெண்ணாக’ – உரத்துப்பேசும் உள்மனம்) என்ற கவிதையினூடே அவர் பெண்மையின் பூரிப்பை வெளிப்படுத்துகிறார்.
சுல்பிகாவின் ‘எனது குரலும் உருவும்’, ‘நாங்கள்’, ‘விதியே வழிவிடுக’, ‘புறுபுறுத்தது போதும்’, ‘புதியபாதை’, (உயிர்த்தெழல்) முதலான பல கவிதைகள் வீறுகொண்டு எழுந்த பெண்ணின் குரலை அழுத்தமாகப் பதிவுசெய்திருப்பதைக் காணலாம்.
 
“இவ்வுலகில் தீயனவெல்லாம்
செயலிழக்கச் செய்வேன்
தோல்வி என்னைத்
தோற்கடிக்க முடியாது
தேவைகள் எதுவரினும்
தேறிநான் செல்வேன்
இவ்வாழ்வை வெல்வேன்”
 
(‘இன்பம் நிலைக்க இளமை வேண்டும்’ – விலங்கிடப்பட்ட மானுடம்)
என்ற அவரின் பிரகடனம் பெண்குலத்தின் பிரகடனமாக மட்டுமன்றி முழு மனித குலத்தின் பிரகடனமாகவும் அமைவதைக் காண்கின்றோம்.
 
“என் பயணம் ஆரம்பித்தாயிற்று
முடிவுகளற்ற இலக்கை நோக்கி
தனித்தாயினும் பயணிப்பதே இயன்றவரை.
என் சிறகுகளின் மீது நீளும்
எல்லாக் கைகளுக்கெதிராகவும்
என் கனவுகளின் மீது
கொடூரங்களை வரைய நீளும்
எல்லாத் தூரிகைகளுக்கெதிராகவும்…”
 
(‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!’) என்ற பெண்ணியாவின் பிரகடனமும் வீறுகொண்டு எழும் பெண்ணின் குரலைக் கவித்துவ வீச்சுடன் ஓங்கி ஒலிக்கச் செய்துள்ளது எனலாம். அவரது ‘புத்துயிர்த்தல்’ என்ற கவிதையும்,
 
“எனையழுத்தும் இவ்
இறுகிய பார்வைகளினூடிருந்து
வீறு கொண்டதொரு புல்லாய் நிமிர்வேன்
கூவத்தான் முடியாதாயினும்
ஈனஸ்வரத்திலேனும் என் பாடல்களை முனகியபடி
யார் முன்னும் பணிதலன்றி
எனது உணர்வுகளோடும் அவாக்களோடும்
எவ்வகை வாழ்வெனப் புரியாத இது
குழப்பமிகு வாழ்வேதானாயினும்
வாழ்வேன்
வாழ்வேன்
வாழ்வேன் நான்”
 
என்று உலகை, அதன் அடக்குமுறைகளை எதிர்கொள்ளத் துணிந்து நிற்கும் பெண்ணின் குரலை மிக அழுத்தமாகப் பதிவுசெய்கின்றது.
 
 
“எழுவேன் பேரலையாய்!
வெடித்துக் கிளம்பும்
பூகம்ப அதிர்வெழுப்புவேன்!
சுற்றி சுழன்று
ஆங்காரமாய் ஒரு புயலாவேன்.
சமூகச் சாக்கடையை
அடித்துக் கொண்டோடும்
ஊழிப் பிரளயமாவேன்
அழிப்பதற்கன்று – எம் மாந்தர்
விழிப்பதற்காய்!
வாழ்வேன் துணிவாய் – நெருங்கிவரும்
மரணத்தின்
கடைசிநிழல் எனைத்
தொட்டுவிடும் வரை
வாழ்வேன் வாழ்வைத்
துய்ப்பேன் நான்.
காற்றாய்ப் பறப்பேன்
சிகரங்கள் தொடுவேன்
எனக்காய் வாழ்வேன்
இறுதிவரை!”
 
(எழுக பெண்மை) என்ற லறீனாவின் கவிதையும் இதையே பிரதிபலிக்கிறது.
இவ்வாறாக, நம்முடைய ஈழத்துப் பெண் கவிதாயினிகளில் பலர் விழிப்புணர்வும் விடுதலை வேட்கையும் கொண்ட பெண்ணின் எழுச்சிக் குரலைக் கவித்துவ வீச்சுடன் வெளிக்கொணர்ந்திருப்பதைக் காண்கின்றோம்.
  
முடிவுரை
 
ஈழத்தின் நவீன பெண் கவிஞர்கள் தத்தமக்கெனத் தாமே வகுத்துக்கொண்ட தனித்துவமான பாணியில், மொழிநடையில் பெண்கள் தொடர்பான அனைத்தையும் பன்முகத்தன்மையோடு பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தியுள்ளனர் எனத் துணிந்து கூறலாம். எனின், பெண்கள் தமது விருப்புவெறுப்பு, சுயாதீனம், விடுதலை என்பன பற்றிப் பேசினாலோ எழுதினாலோ அவள் ஒழுக்கங்கெட்டவள் என்றோ அடக்கமற்றவள்என்றோ முத்திரைகுத்தப்படும் போக்கு முற்றாக நீங்கிவிட்டது என்று சொல்வதற்கில்லை.அதேநேரம், பெண்ணின் உரிமை, சுதந்திரம் என்பது முழுமொத்த ஆண் இனத்தையும் மறுதலித்தல் அல்லது தீவிரமான ஆண்வெறுப்பு என்பதான பிழையான புரிதலும் சமூகத்தில் நிலவிவருகின்றது. இத்தகைய கருத்தை உடையவர்கள், பெண் ஆண்மீதான காதலைப் பாடுவதையும், அவனுடன் சமத்துவமாய் வாழநினைப்பதையும் எள்ளிநகையாடி, ஆணைக் கடுமையாகத் திட்டித் தீர்ப்பதுதான் பெண்விடுதலைக்கான குரல் என்பதான விம்பத்தைத் தோற்றுவிக்க முயல்வதையும் காணக்கூடியதாக உள்ளது. இவர்கள் காதல் என்பது பெண்ணுக்கும் பொதுவானது, அன்றாட வாழ்வின் வெவ்வேறு அனுபவங்களும் சூழ்நிலையும் அவ்வப்போது வித்தியாசமான உணர்வு வெளிப்பாடுகளாக அமைகின்றன என்னும் மனித இயற்கையைக் கருத்திற்கொள்ள மறுத்துவிடுகின்றனர். ஆணோ பெண்ணோ பல்வேறு வித்தியாசமான உணர்வுநிலைகளை வெளிப்படுத்தக்கூடிய மனித உயிரியே தவிர, எப்போதும் ஒரே ஓர் ஒழுங்கில் மாத்திரம் செயற்படக்கூடியவாறு நிகழ்ச்சிநிரல் துல்லியமாகப் பதிவுசெய்யப்பட்ட கணினி இயந்திரமல்ல என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர்.
 
ஆணின் பெண் மீதான அடக்குமுறையைத் தனது கவிதையில் கடுமையாக விமர்சிக்கும் ஒருபெண், ஆணின் காதலுக்காக ஏங்கும் ஒரு கவிதையைப் படைத்தால் ‘இதோ இவள் தன்னுடைய வன்முறையாளனோடு வெட்கமின்றி சமரசம் செய்யமுனைகிறாள்’ என்பதான விமர்சனத்தை எதிர்கொள்ள நேர்வதுண்டு. அல்லது, திருமணம் முடித்தபின்னர் ஆளுமையும் அறிவுத்திறனும் கொண்ட பெண்கள் முடங்கிப் போகாமல் தொடர்வதற்கு அவர்களின் குடும்பத்தினரும் குறிப்பாகக் கணவன்மாரும் ஒத்துழைக்கவேண்டும் என்பது பற்றிப் பேசினால் உடனே, ‘அடடா! பெண்ணிலைவாதி ஆணிலைவாதியாகிவிட்டாரே!’ என்று கிண்டலுக்கு ஆளாகவேண்டியும் இருக்கிறது. உண்மையில், பெண்ணுக்கெதிரான அடக்குமுறைகளை, அநீதிகளை நடைமுறைப்படுத்துவது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாய் இருந்தாலும் சரி அல்லது அரச யந்திரமாகவே இருந்தாலும் சரி அதனை எதிர்த்துக்குரல் கொடுப்பதும், அதனை மாற்றியமைக்கப் போராடுவதுமே மனிதநேயத்தையும் நீதியையும் சமத்துவத்தையும் ஆசிக்கும் அனைவரதும் கடமை. ஆணாதிக்கத்தையும் பெண் ஒடுக்குமுறையையும் எதிர்ப்பதை விழிப்புணர்வுகொண்ட பெண்கள் மட்டுமல்ல நியாயமாகச் சிந்திக்கக்கூடிய ஆண்களும் கைக்கொண்டு வருகின்றனர் என்பதை நாம் புறக்கணித்துவிட முடியாது.
 
அதேபோல, பெண்கள் இப்படியெல்லாம் கவிதைகள் எழுதுகிறார்கள், இது தவறு என்றெல்லாம் காரசாரமாக விமர்சிக்கப்படுவதுமுண்டு. அவர்கள் தாம் சொல்ல நினைப்பதை தாம் விரும்பும் பாணியில் வெளிப்படுத்துவதற்கு முழு சுதந்திரம் உடையவர்கள் என்பதையும், இப்படித்தான் கட்டாயம் எழுதவேண்டும் என்ற வரையறைகளையோ சட்டகங்களையோ (frames) அமைத்து அவர்கள்மீது வலுக்கட்டாயமாகத் திணிக்க முனைவது சிறுபிள்ளைத்தனமானது என்பதையும் நம்முடைய பெண் கவிதாயினிகள் மிகத் தெளிவாகப் புரிந்துள்ளார்கள், புரியவைத்துள்ளார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.
குறிப்பு: குறுகிய காலகட்டமொன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது எனக்குக் கிடைத்த கவிதைத் தொகுதிகள், கவிதைகள் என்பவற்றை மட்டும் அடிப்படையாக வைத்தே இக்கட்டுரையை நான் வடிவமைத்துள்ளேன். அனேக பல கவிதைத் தொகுதிகள் எனக்குக் கிடைக்காது போயிருக்க வாய்ப்புண்டு. அவை பற்றிய தகவல்களை யாரேனும் தந்துதவுவார்களாயின் எதிர்காலத்தில் அவற்றையும் உள்ளடக்கக்கூடியதாக இருக்கும்.( lareenahaq@gmail.com)
  
  
உசாத்துணைகள்:
செல்வி (1986) “சொல்லாத சேதிகள்” , யாழ்ப்பாணம்: பெண்கள் ஆய்வு வட்டம்.
சித்திரலேகா மௌனகுரு (1993) “பெண் நிலைச் சிந்தனைகள்”, கொழும்பு-05 : பெண்கள் கல்வி ஆய்வு நிலையம்.
சித்திரலேகா மௌனகுரு (பதிப்பாசிரியர்) (1993) “சிவரமணி கவிதைகள்”, மட்டக்களப்பு : சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம் (Women’s study circle)
சுல்பிகா (1995) “விலங்கிடப்பட்ட மானுடம்”, சென்னை : தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ்.
செல்வி திருச்சந்திரன் (1997) “தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்நிலை நோக்கு”, கொழும்பு – சென்னை : குமரன் பதிப்பகம்.
செல்வி திருச்சந்திரன் (பதிப்பாசிரியர்), (1998) “வர்க்க சாதி பெண் நிலை பண்பாடு பெரியாரின் சிந்தனைகள் பற்றிய ஒரு சமூக நோக்கு”, கொழும்பு : பெண்கள் கல்வி ஆய்வு நிலையம்.
—– (1999) “பெண்”,தொகுதி -04 இல-01 மட்டக்களப்பு : சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்..
சித்திரலேகா மௌனகுரு (1999) “உயிர்வெளி”, மட்டக்களப்பு : சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்.
—– (2000) “பெண்”, தொகுதி -05 : இல -03 மட்டக்களப்பு : சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்.
அனஸ், எம். எஸ். எம்., (பதிப்பாசிரியர்) (2000) “ஷிக்வா”, பேராதனை, இலங்கை தென் கிழக்கு ஆய்வமைய மதியுரைக்குழு.
ஆழியாள் (2000) “உரத்துப் பேச”, சென்னை : மறு.
ஒளவை (2000) “எல்லை கடத்தல்”, கொழும்பு : மூன்றாவது மனிதன்.
சுல்பிகா (2001) “உயிர்த்தெழல்”, கொழும்பு : முஸ்லிம் ஆராய்ச்சி செயல் முன்னணி.
றஸீனா புஹார் (2003) “மண்ணிழந்த வேர்கள்”, கண்டி : மலையக வெளியீட்டகம்.
லறீனா ஏ. ஹக் (2003) “வீசுக புயலே”, கெலிஓய : வர்தா பதிப்பகம்.
சுல்பிகா (2003) “உரத்துப் பேசும் உள்மனம்”, கொழும்பு : யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட); லிமிடட்.
ஈழவாணி (2004) “சிதறல்”, கொழும்பு : ஈ.குவாலிற்றி கிறபிக்ஸ்.
பாரிஹா, எம்.எப்.எப்., (2004) “ஒளிக்கதிர்”, பேருவலை : சிடி பிரின்ட்.
அனார் (2004) “ஓவியம் வரையாத தூரிகை”, கொழும்பு: மூன்றாவது மனிதன்.
மதிவதனி, ஜெ., (2004) “எண்ண ஊர்வலம்”, திருகோணமலை : ஈழத்து இலக்கியச் சோலை.
சுதர்சன், செ. (தொகுப்பு) (2004) “என் தேசத்தில் நான்”, பேராதனைப்பழ்கலைக்கழக மாணவ மாணவியரின் கவிதைத் தொகுதி, கொழும்பு: மல்லிகைப் பந்தல்.
லறீனா ஏ. ஹக், (2005) “செ. கணேசலிங்கின் நாவல்களில் பெண் பாத்திரங்கள் : ஒரு பெண்ணிலை நோக்கு”, சென்னை : குமரன் புத்தக இல்லம்.
……………… (2005) “வடம்”,காவத்தை : ‘குயில்தோப்பு’ கலை இலக்கிய ஒன்றியம்.
நெலோமி (2005) “ஆத்மாவின் இராகங்கள்”, வவுனியா : ஸ்ரீனா வெளியீடு.
பெண்ணியா (2006) “என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!”, ஊடறு” சுவிஸ்
அனார் (2007) “எனக்கு கவிதை முகம்”, நாகர் கோயில்: காலச்சுவடு பதிப்பகம்.
ஃபஹீமா ஜஹான் (2007) “ஒரு கடல் நீரூற்றி”, சென்னை : பனிக்குடம் பதிப்பகம்.
—– (2007) “சரிநிகர்”, கொழும்பு : சரிநிகர்
பெண்ணியா (2008) “இது நதியின் நாள்”, கொழும்பு : சிறகுநுனி.
ஃபஹீமா ஜஹான் (2009) “அபராதி”, சென்னை : வடலி.
அனார் (2009) “உடல் பச்சை வானம்”, நாகர் கோயில் : காலச்சுவடு பதிப்பகம்.
ஃபஹீமா ஜஹான் (2010) “ஆதித் துயர்”, நாகர் கோவில் : காலச்சுவடு.
—– (2010) “எதுவரை?”, சென்னை.
நவஜோதி ஜோகரட்ணம் ( ஆ. தெ. ) “எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்”, கொழும்பு : ஈ.குவாலிற்றி கிரபிக்ஸ் (பிறைவெட்) லிமிடட்.
 

 

நிலாப்பெண்ணிலிருந்து

 
 
 

 

 
 
 
 

 

1 Comment on “” ஈழத்துப் பெண்” கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு”

  1. அருமையான ,ஆழமான கட்டுரை. .
    இதுபோன்ற பல பதிவுகளை ஊடறுவிடம் எதிர்பார்க்கிறேன்.
    சகோதரிக்கு அன்பான வாழ்த்துக்கள்.
    எஸ்.பாயிஸா அலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *