“முரண்பாடுகள்” சிறுகதைத் தொகுப்பு

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா(இலங்கை)

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 111வது வெளியீடாக அழகிய அட்டைப்படத்துடன் பத்துச்சதம், ஜெயா, நம்பிக்கை, செய்வினை, முரண்பாடுகள், கனகலிங்கம், தபால், தர்மபுரம், மரங்கொத்தி, வெள்ளைச்சி, விஷகடி வைத்தியம், தியாகம், வைரவி ஆச்சி, மைதானம், விதைப்பு என்ற பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கி அச்சாகியிருக்கிறது முரண்பாடுகள் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு.

யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பிரிவு, மட்டுவில் கிழக்கு மானாவளைக் கிராமத்தை பிறப்பிடமாகக்கொண்டவர் திரு. இதயராசன் அவர்கள். அவருடைய முரண்பாடுகள் என்ற சிறுகதைத்தொகுதி அண்மையில் வெளிவந்திருக்கிறது.

2008ம் ஆண்டு மீறல்கள் என்ற கவிதைத் தொகுதியின் மூலம் தன்னை ஓர் கவிஞராக நிலைப்படுத்தியவர், முரண்பாடுகள் என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் நானொரு சிறுகதை எழுத்தாளனுமாவேன் என இலக்கிய உலகத்துக்கு புரிய வைத்திருக்கிறார்.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 111வது வெளியீடாக அழகிய அட்டைப்படத்துடன் பத்துச்சதம், ஜெயா, நம்பிக்கை, செய்வினை, முரண்பாடுகள், கனகலிங்கம், தபால், தர்மபுரம், மரங்கொத்தி, வெள்ளைச்சி, விஷகடி வைத்தியம், தியாகம், வைரவி ஆச்சி, மைதானம், விதைப்பு என்ற பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கி அச்சாகியிருக்கிறது முரண்பாடுகள் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு.

இவரது சிறுகதைகள் தான் சந்தித்தவற்றின் மீட்டலாகவே காணப்படுகிறது. அவர் பிரயோகித்திருக்கும் மொழிநடை வாசகர்களை திக்குமுக்காடச் செய்யவில்லை. அதை பேராசிரியர் சிவசேகரம் அவர்கள் தனது உரையில்

இதயராசனின் மொழிநடை பேச்சுமொழியோடியைந்தது. அதிலே ஆர்ப்பாட்டமான தன்மையையோ சொல் அலங்கார அடுக்குகளையோ வாசகரை பிரம்மிக்கச் செய்யும் வர்ணனைகளோ இல்லை. அவர் அருகிலிருந்து பேசுவது போலவே அவருடைய கதைகள் அமைந்துள்ளன… என்று குறிப்பிடுகிறார்.

அது மாத்திரமின்றி சில சொற்கள் இலங்கை நாட்டின் நாலாபுறத்திலும் வசிக்கும் மக்களின் பேச்சுமொழியிலிருந்து சற்று மாறுபட்டு யாழ்ப்பாணத் தமிழின் சுவையை உணரக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றது.

சிறுகதை எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னை அலட்டிககொள்ளாமல் தான் சார்ந்த சூழலில் இடம்பெற்ற, தன் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்து போன சில கருக்களுக்கு உயிர்கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் இதயராசன் அவர்கள்.

அவரே அதைப் பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

எனது ஆழ்மனதில் உறங்கிக் கிடந்தவற்றுக்கே உயிர்கொடுக்க முற்பட்டேன். அவை எனது சின்ன வயசு அனுபவங்களாகவே இருந்தன. அத்தோடு வன்னிப் பிரதேசத்தினை தளமாகக்கொண்டு எழுபதுகளிலிருந்து அண்மைய நந்திக்கடல் வரையான சம்பவங்களைப் பதிவாக்கியுள்ளேன்.

இத்தொகுப்பிலிருக்கும் பத்துச்சதம் என்ற முதல் சிறுகதையானது சிறுவன் ஒருவனின் பார்வையில் நகர்த்தப்பட்டிருக்கிறது. யாரையும் மதிக்காத, ஒருவருடனும் சிரித்தும் பேசாத குணமுடைய ஒரு சிறுவன், தன் தந்தை மற்றவர்களுடன் நட்புறவாடும் போது எரிச்சலடைகிறான். அப்படியிருக்க ஒரு தினத்தில் அவன் வைத்தியசாலைக்கு செல்லும் சூழ்நிலை உருவாகிறது.

அத்தருணத்தில் எதிர்பாராத ஒரு சம்பவம் இடம்பெறுகிறது. அதாவது கவுண்டரிலிருந்து துண்டுபெற்ற பின்னரே வைத்தியசாலையினுள்ளே செல்ல முடியும் என்று அவன் அறிகிறான். ஆனால் கையில் காசில்லாத சந்தர்ப்பமது. கடும் காய்ச்சலாயிருக்கும் நேரத்தில் அருகே தன் தந்தையின் சிநேகிதர் அவனை பார்த்து, நிலைமை அறிந்து உதவ முன்வந்த போது சிறுவன் தனக்குள்ளே வெட்கப்பட்டுப்போகிறான். எல்லோருடனும் நட்பாக பழகினால் ஆபத்தில் கைகொடுக்கும் என்ற படிப்பினையை தருகிறது பத்துச்சதம் என்ற இந்த சிறுகதை.

அடுத்ததாக ஜெயா எனும் சிறுகதை இன ஒருமைப்பாட்டை எடுத்தியம்புகிறதாய் பின்னப்பட்டிருக்கிறது. கொழும்பில் கலவரம் நிகழ்கிற அந்த பயங்கரமானதொரு சூழ்நிலையில் சகோதர இனத்தைச்சேர்ந்த ஜெயாவை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயம் வாசகர்களுக்கும் உண்டாகிறது. இறுதியில் இரவோடிரவாக காட்டுவழியால் உடையார்கட்டி எனும் இடத்துக்கு ஜெயா பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகிறார். அந்த அந்நியோன்னியத்தை, பாசத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளும் இத்தகைய மனநிலை எல்லோருக்கும் இருப்பது ஐயமே.

நம்பிக்கை என்ற கதை பானுமதி என்ற பெண்ணின் கதையதாக இருக்கிறது. பாண்டியன்குளம் எனும் ஊரில் மிகக் கோரமாக யுத்த நிகழ்வுகள் இடம்பெறுகிறது. இதுவரை சுத்தமான காற்றையே சுவாசித்தவர்கள் இனி மூச்செடுக்கவும் பயந்து போனதொரு இக்கட்டான நிலைமை உருவாகிறது. அப்போது பரியாரி கணபதியாரின் வாரிசான பானுமதி உட்பட பலரும் இடம்பெயர்ந்து செல்கிறார்கள். அந்த கஷ்டமான நிலைமையினை

பாலும் தேனும் ஓடிய ஊரில் வாழ்ந்தவர்கள் பாண் துண்டும் இல்லாமல் புழுத்துச் சக்குப்பிடித்த வெள்ளை அரிசியைத் தண்ணீரில் கழுவி வேகவைத்து அதன் கஞ்சியை அமுதமெனப்பருகினர். சிலர் அதுவும் கிடைக்காமல் காட்டில் உள்ள காய்களை பறித்துத் தின்று, சருகு ஊறிய சாயநிறமான தண்ணீரைக் குடித்தனர்.

எனும் வரிகளால் வாசக நெஞ்சங்களில் துன்ப வெள்ளத்தைத் தேக்கிவிடுகிறார்.

அது மாத்திரமல்ல. இந்தக்கதையின் உச்சகட்ட வேதனையாக இந்த வரிகள் அமைந்து கதையின் சிறப்புக்கு மெருகூட்டுகின்றன.

… கண்களைத் திறந்து பார்க்கிறாள். வெள்ளைக் கோட் போட்ட வைத்தியரின் கனிவான பார்வை அவளுக்கு ஒத்தடம் கொடுக்கிறது. கால்களை அசைக்கிறாள். அசைகிறது. அடுத்து கரங்களினை அசைக்கிறாள். முழங்கைக்கு கீழ் அசையவில்லை. அங்கே கரம் இருந்தால் தானே அசைக்க முடியும். நிலைமையினைப் புரிந்து கொண்ட பானுமதியின் கண்களிலிருந்து ஆறென கண்ணீர் பெருக்கெடுக்கின்றது…

பானுமதியின் கண்களில் மாத்திரமின்றி இக்கதை முழுவதையும் வாசிக்கும் நமது கண்களிலும் கண்ணீர் வருமளவுக்கு இக்கதையை உயிரோட்டமுள்ளதாக, அருகிலிருந்து பார்ப்பது போன்ற உணர்வை தரக்கூடியவாறு எழுதியிருப்பதை பாராட்டத்தான் வேண்டும்.

அடுத்ததாக செய்வினை என்ற கதை உளவியல் பிரச்சனையோடு சம்பந்தப்படுத்தி சுவாரஷ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது. கதையின் நாயகனான ஆறுமுகத்தின் மாமா வீட்டில் திடீரென்று நெருப்பு பிடிக்கிறது. அதைப் பார்த்த அனைவரும் பேயறைந்தது மாதிரி இருக்க, அவ்வீட்டில் மூன்று மாதங்களுக்கு முன் வந்த கோமளா எனும் பெண் மாத்திரம் சிரித்தபடி இருப்பதுவும் வாசகனை பிரம்மிக்க வைக்கிறது.

இதே கதையில் இன்னொரு உளவியல் ரீதியான பிரச்சனையொன்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதாவது இளம் தம்பதியர் வசிக்கும் வீட்டில் பெண்ணின் தங்கையும் வந்து சேருகிறாள். அன்றிலிருந்து அவ்வப்போது சமைத்த கறியில் கல் இருப்பதாகவும், வீட்டிற்கு மேல் கற்கள் வந்து விழுவதாகவும பல அதிசயங்கள் நடக்கின்றன. அதற்கான காரணத்தை கண்டறிந்த போது ஏற்பட்ட பிரச்சனை என்ன என்பதை

திருமண வயதான போதிலும் திருமணமாகாமல் ஆசைகளை அடக்கி வைத்திருந்ததும், அவளுக்கு இரண்டு வயது மூத்த தமக்கை தனது கணவருடனும் பிள்ளையுடனும் சந்தோஷமாக வாழ்வதும் ஏக்கத்தினையும் பொறாமையையும் ஏற்படுத்திவிட்டது. அதன்பேறாக உளப்பிளவு (Schizophrenia) எனும் மனநோய்க்கு உள்ளாகியிருந்தது தெரிய வந்தது என குறிப்பிட்டுக் காட்டுவதுடன் கோமளாவின் காதல் சுக்குநூறாக உடைந்து போன பின்பே அவளுக்குள் இவ்வாறானதொரு மாற்றம் ஏற்பட்டது என சின்னத்தம்பியாரின் கூற்றாக உண்மையான காதலின் ஆழத்தை விளங்க வைக்கிறார்.

கனகலிங்கம் என்ற கதை பாடசாலை தளத்தை அடிப்படையாகக்கொண்டது. இதயராசன் அவர்கள் கல்வியமைச்சில் கடமையாற்றுவதனால் இவை போன்ற அனுபவங்களை கதையாக்குவதில் வல்லமை பெற்றிருக்கலாம்.

அதாவது யாருக்கும் பயமில்லாமல் முரட்டுத்தனத்துடன் படிப்பே ஏறாதவனாக இருப்பவன் தான் கனகலிங்கம். தடியன் என்ற அடைமொழியினால் சக ஆசிரியர்களால் அழைக்கப்படும் கனகலிங்கத்தை பேர் சொல்லி அழைத்ததும் மிகவும் பவ்வியமான தோற்றத்துடன் ஆசிரியர் முன் நிற்கின்றான். வறுமைப்பட்ட குடும்பத்திலிருந்து வரும் அவனுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பது தான் கதையின் கரு. அதை பாடசாலை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தண்டனை என்பது தவறைத் திருத்திக்கொள்வதற்கே தவிர பழி தீர்த்துக்கொள்வதற்கல்ல என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் செயற்படுவார்களேயானால் எப்பேர்ப்பட்ட மாணவர்களையும் வல்லவர்களாக்க முடியும் என்று உணர்த்தியிருக்கிறார் இதயராசன் அவர்கள்.

அது போல முரண்பாடுகள் என்ற சிறுகதை போர் கொடுமையையும், தபால் என்ற சிறுகதையில் குறிப்பிடதொரு ஊரில் நடக்கும் தபால் சேவையின் அசமந்தப்போக்கையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். மற்றும் வெள்ளைச்சி என்ற கதை விலங்குகளிடத்தில் அன்பு பாராட்டுவோம் என்ற அடிப்படைக் கருத்தைக்கொண்டு அமையப்பெற்றிருக்கிறது.

மைதானம் என்ற சிறுகதையும் விநோதமாக எழுதப்பட்டிருக்கின்றது. அதாவது மைதானம் அமைக்க வேண்டும் என்ற ஆவலில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கு புதர்களினிடையே தகர்ந்த நிலையில் காணப்படுகிற மலசலகூடம் தடையாய் இருக்கிறது. அதனை தரைமட்டமாக்குவதில் அதிபர் உட்பட மூத்த ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம் முறைப்படி அனுமதி பெறாமல் மலசலகூடம் உடைக்கப்படுமாயின் அதிபரே பல சவால்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்பதே.

மாணவர்கள் தான் முதலில் மலசலகூடமிருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார்கள். அவர்களே அதை உடைத்தால் பிரச்சனைகள் ஏற்படாது என்று அறிந்த இளம் ஆசிரியர் மாணவர்கள் உடைக்கட்டும் என்ற உள்நோக்கத்தை மனதில் இருத்தி,; மாணவர்களைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்.

கண்டு பிடித்தது தான் நீங்கள் செய்த குற்றம். அதற்கு பிராயச்சித்தமும் நீங்களே தேடிக்கொள்ளுங்கள்

அவர் சொன்னதன் நோக்கத்தை புரிந்து கொண்ட மாணவர்கள் அவரின் கூற்றை வேதவாக்காக ஏற்று மாணவர்கள் மலசல கூடத்தை தரைமட்டமாக்கி விட்டு ஏதுமறியாதவர்கள் போல் இருப்பது ஆசிரியருக்கு சிரிப்பை வரவழைத்தாலும் அதிபருக்கு தனது போலி அதிர்ச்சியை காட்டிக்கொள்கிறார். இந்தக்கதையின் இறுதிக்கட்டத்தில் மைதானம் அமைக்கப்பட்டு விளையாட்டுப் போட்டியும் இடம்பெறுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *