
இம்மாதம்ஐப்பசி 13 ம் 14 ம் திகதிகளில் புலம் பெயர்ந்த தமிழ்ப் பெண்களின் 26 வது சந்திப்பு பாரிசில் நடைபெற்றது. இச்சந்திப்பு பாரிசில் நடந்த மூன்றாவது சந்திப்பாகும். முதல் இரண்டு சந்திப்புக்களையும் ஏற்பாடு செய்த விஜியே இச்சந்திப்பையும் முன்நின்று நடத்தினார். அவருடன் சேர்ந்து ஷீலா, பரிமளா போன்றோரின் உதவியுடன் இம்மாநாடு மிகவும் ஆக்கபூர்வமாக நடந்து முடிந்தது.
வழக்கம் போல பல முனைகளிலிருந்தும் பலவிதமான எதிர்ப்புக்கள், கண்டனங்கள், சேறடிப்புக்கள் தொடர்ந்தாலும் முதல்நாள் 40 பெண்களும், இரண்டாம் நாள் 30 பெண்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டு பல தரப்பட்ட சமூக, பெண்ணிய, கலாச்சார, அரசியல் கருத்துக்களையும் கட்டுரைகளையும் பரிமாறிக் கொண்டார்கள்.
அவுஸ்ரேலியாவில் இருந்து கவிஞை ஆழியாளும், இலங்கையிலிருந்து சாந்தி சச்சிதானந்தமும், இந்தியாவிலிருந்து புதியமாதவியும், லண்டனிலிருந்து எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும், பெண்ணியவாதியான நிர்மலா ராஜசிங்கமும், சுவிட்சலாந்தில் இருந்து ஊடறு ஆசிரியை ரஞ்சியும், பிரான்சிலிருந்து ஊடகவாதியான ஜெயா பத்மநாதனும், ஜேர்மனியிலிருந்து வந்த தேவா போன்றோர் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தார்கள்.
சுய அறிமுகத்துடன் ஆரம்பித்த சந்திப்பில் பாரிசிலிருந்து வருகை தந்திருந்த தமிழிச்சி அனுபவங்களை விபரித்தார். கூட்டத்தின் ஆரம்பத்தில் இதுவரை நடந்த பெண்கள் சந்திப்பு பற்றிய மீளாய்வு ஒன்றை ஊடறு இணையத்தள ஆசிரியர் றஞ்சி (சுவிஸ்) தொகுத்துப் பேசினார்.
புகலிடத்தில் நடைபெற்ற புத்திஜீவிகளின் சந்திப்புகளில் பெண்களும், பெண்களின் விடயங்கள் ஒதுக்கப்பட்டதால், பெண்களால் பெண்களுக்காக தொடங்கப்பட்டு பெண்களின் சமூக, பொருளாதார, அரசியல், இலக்கிய, வாழ்வியல் விடயங்களை பேசும் இந்தப் பெண்கள் சந்திப்பை 1990ல் தொடங்கி வைத்த ஜேர்மன் வாழ் இலங்கை பெண்களுக்கு நன்றி தெரிவிக்கப்ட்டது.
குடும்பத்தில் பெண்களுக்கு இளைக்கப்படும் வன்முறைகள் பற்றி சிறுகதையாசிரியரும், ஜேர்மனியில் மொழிபெயர்ப்பாளராக கடமை புரிபவருமான தேவாஹெரோல்ட் ஒரு கட்டுரையை சமர்ப்பித்தார். புலம் பெயர்ந்த தமிழ்ப் பெண்கள் மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத ஒரு துன்ப சூழ்நிலைக்குள் குடும்ப வாழ்க்கையில் அவதிப்படுவதாகக் கூறினார். இலங்கைத் தமிழர் மட்டுமல்லாமல் புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு இனமக்களிடையேயும் இவ்வன்முறை கூடிக்கொண்டு வருவதாகவும், தனிப்பட்ட வாழ்க்கைமுறை, சொந்தங்களின் உறவுகள் அற்றமை, பொருளாதாரச் சூழ்நிலை, ஆண் உயர்ந்தவன் என்ற கலாசாரக் கோட்பாடு போன்ற பல காரணிகள் குடும்ப வன்முறைக்கு உந்து கோல்களாக இருக்கின்றன என்ற கருத்து பரிமாறப்பட்டது. அத்துடன் குடும்பங்களில் மட்டுமல்லாது வெளியில் வேலை செய்யப்போகும் பெண்களும் மிகவும் மோசமான பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. சங்கராச்சாரியார் போன்ற இந்துமதத் தலைவர்கள்; வெளியில் வேலைக்குச் செல்லும் பெண்கள் விபச்சாரிகளுக்குச் சமன் என்று சொன்ன கருத்துக்களுக்கு மிகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பேசிய புதிய மாதவி அவர்கள் இந்து சமயம் என்ன மாதிரி உறவுச் சிக்கல்களுக்கு குடும்பத்தின் ஆண் அதிகாரத்தின் மூலத்திற்கு வழிவகுத்திருக்கிறது. என்ற தனது உறவுச் சிக்கல்கள் என்ற கட்டுரையில் குறிப்பிட்டார். மேலும் மதங்களின் உயர் பீடங்களுக்கான அந்தஸ்தை இன்னும் பெண்கள் பெற முடியாமல் இருப்பதையும், அதேநேரம் கௌதம புத்தர் பெண்களை துறவிகளாகும் படி கூறியது போன்ற அவரது பெண்ணியக் கருத்துக்களை எடுத்துரைத்தார். இந்தக் கட்டுரையை தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் மனுசாஸ்திரம் (பிராமணியர்களால் படைக்கப்பட்டது) எப்படியான பெண்ணடிமைத் தன வரைமுறையைக் கொண்டிருக்கின்றன, அந்த வரைமுறைகளை எப்படி இன்று செயற்படுத்துகிறார்கள் என்ற விடயங்கள் பேசப்பட்டன.
மதியபோசனத்தின் பின் ஊடறு பத்திரிகையின் ஆசிரியை ரஞ்சியின் முயற்சியில் வெளியிடப்பட்ட ‘இசை பிழியப்பட்ட வீணை’ என்கின்ற மலையக பெண்களின் கவிதைத்தொகுதி அவுஸ்ரேலியாவில் இருந்து கலந்துகொண்ட ஆழியாள் வெளியிட இந்தியாவில் இருந்து கலந்துகொண்ட புதியமாதவி பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் பிராந்திய, சமூக பாரம்பரிய மொழி பற்றிய விவாதம் காரசாரமாக நடந்தது. ஒரு படைப்பு அச்சமூக, பிராந்திய மொழியினூடாக வெளிவரும்போதுதான் அதற்குரிய உண்மையான உயிர்ப்பு இருக்கும் என்ற கருத்துக்கள் ஆரோக்கியமான சர்ச்சையைக் உருவாக்கி வைத்தது.
அதனைத் தொடர்ந்து நடந்த சந்திப்பில் ” பெண் தற்கொலைதாரிகள்” பற்றிய சிறு குறிப்பொன்றை லண்டனில் இருந்து வந்து கலந்து கொண்ட எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் வாசித்தார். இந்தக் கட்டுரை புலிகள் பெண் தற்கொலைதாரிகளைப் பாவிக்கும் விடயத்துக்கும் பலமான எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருந்தது. அக்கட்டுரையைத் தொடர்ந்து பாரிஸை சேர்ந்த ஊடகவாதியான ஜெயா பத்மநாதன் “பெண் உடல் ரீதியாக மாற்றம் அடைந்தால் வரும் விளைவுகள்” எனும் கட்டுரையை வாசித்தார். தமிழ் பெண்களுக்கு தங்கள் உடல் மாற்றங்கள் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தது. அன்றைய நாளின் இறுதி நிகழ்வாக சுவிஸில் இருந்து கலந்துகொண்ட ஆரதி “தெருக்குழந்தைகள்” என்கின்ற தலைப்பின் கீழ் ஒரு சிறு ஆவணப்படம் ஒன்றை நிகழ்த்திக் காட்டினார். 14 வயதான ஆரதி ஓவியையாக ஏற்கனவே அறிமுகமானவர் என்பதுடன் இவ் ஆவணப்படத்தின் மூலம் அவரின் சமூக அரசியல் விழிபுணர்ச்சியும் தெளிவாக காணக்கூடியதாக இருந்தது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முதலாவதாக நிகழ்வாக ஆழியாள் “சிவப்பு கட்டுமரங்களும் வெள்ளை சிலந்திகளும்” என்கின்ற தலைப்பில் அவுஸ்ரேலிய மூன்று கவிஞைகளான வென் காவுட், யூடித் றொட்டிக்குவே, டோறதி போட்டன் என்பவர்களின் கவிதைப் போக்கை ஆராய்ந்தார். அக்கவிஞைகளின் கவிதைகள் கட்டுமானத்தில், வடிவத்தில், பொருளில் அக்கவிஞைகளின் கால கட்டத்திற்கேற்ப எவ்வாறு மாறுபடுகின்றது என்று விளக்கமளித்தார். மேலும் அவர்களுடைய கவிதைகளில் உடலரசியல் பேசப்படும் கவிதைகளை வாசித்துக்காட்டி பின்னர் எம்நாட்டு கவிஞைகளின் கவிதைகளில் காணப்படும் உடலரசியல் பற்றியும் ஆராந்தார். மிகவும் நேர்த்தியாகவும், ஆழமாகவும் இக்கட்டுரை அமைந்திருந்தது. அடுத்ததாக இலங்கையில் இருந்து கலந்துகொண்ட விழுதுகள் என்ற அரசுசார்பற்ற நிறுவனத்தில் வேலைசெய்யும் சாந்தி சச்சிதானந்தம் “இலங்கையின் போர்ச்சூழலில் பெண்களுக்கான வேலைத்திட்டங்கள்” எனும் தலைப்பின் கீழ் அவர்களின் வேலைத்திட்டங்களை விளக்கினார். என்னதான் வேலைத் திட்டங்களை செய்தாலும் தாங்கள் எதிர்பார்க்கின்ற விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாமல் இருக்கின்றது என்கின்ற தனது ஆதங்கத்தை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து நடந்த “மை” கவிதைத் தொகுதியை தர்மினி அறிமுகப்படுத்தி வைத்தார். இது ஊடறு இணையத்தளத்தில் வெளிவந்த கவிதைகளை தேவா, றஞ்சி இருவரும் தொகுத்து வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதியபோசனத்தின் பின்னர் “புதியமாதவியின் படைப்புகள்” என்கின்ற தலையங்கத்தின் கீழ் ஷீலா, விஜி, றஞ்சி போன்றவர்கள் அறிமுகமும் விமர்சனமும் செய்தார்கள். அவருடைய கவிதைத் தொகுப்புக்களான “நிழல்களைத் தேடி”, “ஹே..ராம்..” போன்றவற்றில் உள்ள கவிதைகளில் முக்கியமாக மத எதிர்ப்பும், தீண்டாமை எதிர்ப்பும் அதிகமாக காணப்படுகின்றன. இவை அவர் வாழ்கின்ற சூழலை அடிப்படையாகக் கொண்டே பார்க்கப்பட வேண்டியவை. மதங்களின் பெயரால் ஏற்படுத்தப்படும் அநியாயங்களை, கலவரங்களை மிகவும் ஆவேசமாக அந்த மதக்கடவுள்களை கேள்வி கேட்பதோடு, அவளது ஆழ்ந்த வேதனையையும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. மேலும் அவரது கட்டுரை, விமர்சனங்களின் தொகுதியான “சிறகசைக்கும் கிளிக்கூண்டுகள்” அறிமுகப்படுத்தப்பட்டது.
அடுத்து லண்டனில் இருந்து கலந்துகொண்ட நிர்மலா பெண்ணியச் சிந்தனைகளும் தமிழ்பெண்களின் விடுதலையும் என்கின்ற தலைப்பில் பேசிய நிர்மலா, ஐரோப்பிய பெண்ணியச் சிந்தனைகள் பற்றி ஒரு மேலோட்டமான பார்வையுடன், ஏனைய ஐரோப்பிய சிந்தனைகளில் காணப்படும் பெண்ணியக் கருத்துக்கள் பற்றியும் ஆராய்ந்தார். தொடர்ந்து உரையாற்றுகையில் ஒருநாட்டின் தேசியம் என்ற கோட்பாடு பெண்களின் அடையாளங்கள் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதுடன் பால்நிலை, பால் உணர்வுகள் என்பனவும் கலாச்சார கோட்பாடுகளினால் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை பல உதாரணங்களுடன் விளக்கினார்.
இன்று இலங்கைத் தமிழ்ப்பெண்கள் படும் அவலங்கள் பற்றிப் பல பெண்கள்தங்கள் கருத்துக்களையும் கண்டனங்களையும் தெரிவித்தக்கொண்டார்கள். மேலும் இலங்கையில் நடைபெறுகின்ற போராட்டத்தில் இன்று சமாதானத் தீர்வுத் திட்டம் பற்றி பலமாக பேச்சுக்கள் அடிபடுவதும் அதில் பெண்களின் பங்கு அவசியம் என்பதை எந்த இயக்கமும், எந்தக் கட்சியும் கவனியாது இருப்பதையும் சுட்டிக்காட்டி யுத்தமும் பெண்களும் சமாதானத்தீர்வுகளும் என்ற தலைப்பில் விஜி கட்டுரையினை வாசித்தார். ஏற்கனவே இருக்கின்ற எமது சமூக அமைப்பில் பெண்ணின் நிலையும், போராட்டத்தினால் பெண்கள் மீது சுமத்தப்படும் சுமைகள் பற்றியும், சீரழிவுகள் பற்றியும் கவனத்திற்கு கொண்டுவந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பெண்களின் பங்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இது பற்றி பல தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக ஈழத்து பெண்களின் கவிதைத் தொகுதியான “பெயல் மணக்கும் பொழுது” இனை ஒரு விமர்சனப் பார்வையாக புதியமாதவி விரிவாக ஆராந்தார். இக்கவிதைகளில் காணப்படும் உயிரோட்டங்களையும், உணர்வுகளையும் கவிதைகளின் அமைப்பிற்கப்பால் ஆராயவேண்டும் என்றார். போராட்டத்தினால் பெண்கள் படும் அவஸ்தைகளை சில கவிதைகள்தான் கூறுகின்றன என்கின்ற ஆதங்கத்தையும் தெரிவித்ததோடு, இவ்வாறான கவிதைகள் முக்கியமாக பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் இது ஒரு ஆவணப்படுத்தல் என்றும் இந்தக்காலகட்டத்தை எமக்குப் பின்னால் வருபவர்கள் புரிந்துகொள்ள இது ஒரு முக்கியமான ஆதாரம் என்றும் தன்னுரையில் கூறினார்.
பெண்கள் சந்திப்பின் இறுதியில் பின்வரும் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என கலந்துரையாடப்பட்டது.
1) இலங்கையில் தொடரும் போர் நிறுத்தப்பட்டு, சமாதான தீர்வுக்கான முன்னெடுப்பை கொண்டுவரவேண்டும். அச்சமாதான பேச்சுவார்த்தைகளிலும், சமாதானத் திட்டங்களிலும் பெண்களின் பங்கு கணிசமானதாக மாற்றப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
2) சவுதி அரேபியாவில் “றசினா நபீக்”இனுடைய மரணதண்டனையை நிறுத்தி அந்த விடயம் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். அண்மையில் சவுதி அரேபியா போகவிருக்கும் வெளிநாட்டமைச்சர் ஹெகலிய ரப்புக்கெல அவர்களை அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டன.
அடுத்த சந்திப்பு சுமதிரூபனின் வேண்டுகோளின் பெயரில் கனடாவில் நடத்துவதாக முடிவுசெய்யப்பட்டது. பாரிஸ் பெண்கள் சந்திப்பை ஒழுங்கு செய்த விஜி, ஷீலாவுக்கும் சந்திப்பை நடாத்த மண்டபத்தைத் இலவசமாக தந்துதவிய வரதனுக்கும் அவரது நிர்வாகத்தினருக்கும், சிற்றுண்டிகளை செய்து தந்துதவிய ரூபி, ஜெயந்தி, வசந்தி போன்றோருக்கும் நன்றிகள் சொல்லப்பட்டன.
rajesmaniam@hotmail.com