
நான் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ளேன்.
என்னை யாரும் கேள்வி கேட்டுத்
தொந்தரவு செய்யாதீர்கள்
நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனது இதயம்
……..
திட்டங்களில் புதைந்துபோன மூளைகள்
திட்டமிட்டுத் திட்டமிட்டே
களைத்த மூளைகள்
முகில்களில் ஏறியிருந்து சவாரி செய்கின்றன.
மூச்சுத் திணறும் இரத்தவாடை பற்றிய
சிந்தனையில்லாது
-செல்வி-
1991 ஆகஸ்ட் 30 ம் திகதி விடுதலைப் புலிகளால் செல்வி கைது செய்யப்பட்டு காணாமல் போய் 17 ஆண்டுகளாகின்றன. செல்வி வவுனியா சேமமடுவில் பிறந்தவர். இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் நாடக அரங்கியல் மாணவியுமாவார். இவர் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளதுடன் கவிஞராகவும் திகழ்ந்துள்ளார். ஈழத்துப் பெண் கவிஞர்களின் தொகுப்பாக வெளிவந்த சொல்லாத சேதிகள் என்ற கவிதைத் தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்துள்ளன. International PEN என்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் கூட்டமைப்பு 1992ம் ஆண்டுக்கான தனது சிறப்பு பரிசை கவிஞர் செல்விக்கு வழங்கியது. அராஜக அரசுகளால் சிறையில் வைக்கப்பட்ட -தஸ்லிமா நஸ்ரின் போன்ற- சமூகப் புத்திஜீவிகள் பலருக்கு இப் பரிசு விடுதலையை வாங்கிக் கொடுத்தது. ஆனால் செல்வியை விடுதலைப் புலிகளிடமிருந்து இது மீட்டுத்தரமுடியாமல் போனது. இது சர்வதேச ரீதியில் கவனத்துக்குள்ளானது.http://udaru.blogdrive.com/archive/815.html