தலைப்பிலி கவிதை


-யாழினி யோகேஸ்வரன்-

தேசாந்திரங்கள் கடந்து வந்திருக்கிறாய் நீ
உனது வருகையின் பிம்பங்களால்
கண்ணாடி முகங்கள்
சிதறல்களாய் மாற்றப்பட்டிருக்கின்றன
உன் பிரசன்னம் வாயிலோடு நில்லாமல்
வலியன் போல சுற்றிக் கொண்டது
எனதாழ் மனதில்
துரோகம் துப்பிய எச்சிலென
தூக்கி வீசப்பட்ட எனதங்கங்கள்
இன்னும் உயிர்த்தெழவில்லை
உயிர்வலி துறந்து
உணர்வினைத் தொலைத்து
வேறெதுவெனத் தேடுகிறேன்
துரோகம் மட்டுமே மீதமிருக்கிறது
துரோகம் மட்டுமே எஞ்சியிருக்கிறது
வெற்றுக் கதிரைகளுக்காயும்
காகிதப் பணத் தாள்களுக்காயும்
மகிழ்ந்திருந்த மனத் தண்டுகளை
துரோகத்தின் பெயரால்
தளையாமல் தகர்த்துவிட்டாய்
துரோகம் உன் உணர்வோடு
ஒட்டியிருக்கிறது
இல்லை இல்லை
கலந்தேயிருக்கிறது
இனியும் சொன்னால்
நீயே துரோகம்
துரோகமே நீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *