கொள்கை குடை பிடித்து நடப்பாள் – – எஸ்.இஸ்மாலிகா (புஸல்லாவ)

2006 Feb  ஊடறுவில் பிரசுரமான கவிதை

முற்றத்து கல்லொன்றில்
முத்தம்மா அமர்ந்திருக்க
எட்டத்தில் செல்லுகிறாள் பேத்தி
அவள் கையிலுள்ள புத்தகங்கள் நேர்த்தி

கிட்டத்தில் நடந்து சென்று
கீழ் வளைவு வங்கருகே
சட்டென்று வந்து நிற்கும் பஸ்ஸில்
சடுதியாக ஏறுகிறாள் பார்த்து

வெள்ளை நிறச் சட்டையுடன்
இரட்டைப் பின்னல் முதகைத் தொட
கள்ளமில்லா பார்வையுடன் வருவாள்
காணும் போது கண்ணியத்தை தருவாள்

புகை கக்கும் விளக்கொளியில்
பூமியில் அமர்ந்தபடி
தொகையான பாடங்களைப் படிப்பாள்
தூரவுள்ள நம்பிக்கையை நினைப்பாள்

 

நீர் கொணர்ந்து புல் அறுத்து
நாலு புறம் மனை கூட்டி
பார் பிடித்து தோட்ட வேலை செய்வாள்
பத்திரிகை பலவற்றைப் படிப்பாள்

வெற்றிலையும் போடாமல்
ஊர்வம்பும் பேசாமல்
முற்றிய நோக்கமதை எண்ணி
முழுமூச்சாய் கல்வியதை கற்பாள்

வீட்டுக் கணக்கு செய்து
விஞ்ஞான விடையெழுதி
நாட்டுச் சரித்திரமும் அறிவாள்
நல்ல கிரிகைகளைப் புரிவாள்

சுட்ட நீர் அருந்தி உணவை மூடி வைத்து
சுகாதாரம் அறிந்ததனை செய்வாள்
கெட்ட பழக்கமதை கீழாக தள்ளிவதை;து
கொள்கை குடைபிடித்து நடப்பாள்

எட்டத் தெரிகின்ற ஏற்றமிகு நம்பிக்கை
ஏந்திடவே மொழிகள் பல உரைப்பாள்
சுட்டப் பொன்னாக விளங்கி மலைநாட்டில்
சூழ்ந்த கருமைதனை துடைப்பாள்

முத்தம்மா காலத்து மூத்த பழைமகள்
முடிக்க புதுமகள் பிறந்தாள்
சுத்தமாய் பொன்னொளி எங்கும் பரப்பிட
சுந்தரத் தமிழ் மகள் நடந்தாள்

முற்றத்து கல்லொன்றில்
முத்தம்மா அமர்ந்திருக்க
எட்டத்தில் செல்லுகிறாள் பேத்தி
அவள் கையிலுள்ள புத்தகங்கள் நேர்த்தி

feb 2006 http://www.blogdrive.com/

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *