தாயே நான் தாகித்திருக்கிறேன்

சமீலா யூசப் அலி (இலங்கை)

மரணக்கோப்பையில்
வாழ்க்கை
வழிந்து கொண்டிருக்கும்
இந்த நிமிடம்…
இரவும்
இன்னுமொரு பகல் தான்!

தாயே
நான் தாகித்திருக்கிறேன்!!

‘பலஸ்தீன் எங்கள் பூமி’
குருதிச்சொட்டுக்கள்
குறிப்பெடுக்கின்றன…
பலஸ்தீன நீர்ச்சொட்டுக்கள்
இஸ்ரேலிய சஹாராவில்
அவிழ்ந்து விழுகின்றன!

நரம்புகளிலிருந்து
உயிர்
தெறிக்கத்துடிக்கிறது!

கொதித்துக் கொண்டிருந்த
இரத்தப்புயல்…
பிடறிகளை
புடைத்துக்கொண்டு
புறப்பட்டு விட்டது!

அன்னையே
அழாதீர்கள்…

இனிமையான
எங்கள் நாட்கள்
களவாடப்பட்டு விட்டன.

எப்போது
இதயத்தை
ஈமானிய ஒளியால்
இறுக்கிக்கொண்டேனோ
அப்போதே
ஜிஹாதின் களத்தில்
என்னுயிரை
இறக்கிக்கொண்டேன்!

மலர்களையல்ல
முற்களை முத்தமிடத்தான்
என்
இளமை உதடு
துடிக்கிறது!

இற்றுப்போன
‘நேற்று’க்களிலும்
நம்பிக்கையில்லாத
‘நாளை’களிலும் அல்ல
இந்த நிமிட
‘இன்று’களில் தான்
எதிர்காலம்
வாழ்கிறது!

இப்போதெல்லாம்
பலஸ்தீனத்துப் பூவுக்குள்ளும்
பூகம்பச்சிரிப்பு!!

அன்னையே
அழாதீர்கள்

அடிமை தேசத்து
ஆட்சியாளனை
விட
சுதந்திர தேசத்தின்
ஷஹீதாகிறேன்!

சன்னம் துளைத்த
சடலங்களின் விழிகளில்
விடுதலை ராகம்!

தாயே
நான் தாகித்திருக்கிறேன்

இருட்டை
விசாரிக்கும்
வெளிச்சம் நான்!

கடைசித் துளி
உயிர்
காயும் வரைக்கும்
இந்த உணர்ச்சிகள்
மூர்ச்சிக்காது!

அன்னையே
அழாதீர்கள்

பலஸ்தீனின்
ஒவ்வொரு அபாபீலும்
பிஞ்சுக்கற்களைப்
பொத்திப்பிறக்கும்
காலம் வரும்…

காஸா தீரம்
கடற்பறவைகளின் கானம்…
தக்பீரின் நாதம்
இதோ
என் அருகில்

(1998 பாலஸ்தீன கவிதை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *