பெரும் அவலம்: மலையகம் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்!

 Thanks – 4தமிழ்மீடியாவுக்காக: புருஜோத்தமன் தங்கமயில்

அபாய அறிவிப்புக்கள் விடுக்கப்படுவதால் மாத்திரம் உயிரிழப்புக்களைத் தவிர்த்துவிட முடியும் என்றால், இந்த உலகம் இலட்சக்கணக்கான உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்கும். யுத்த சூனிய வலயம் என்று அறிவித்துவிட்டு அதற்குள்ளேயே குண்டு மழை பொழிவதுதான் நவீன உலகின் போர் தர்மம். எப்போதுமே, அபாய அறிவிப்புக்கள் மாத்திரம் பதியப்படும். அதற்கான அடிப்படைகளைக் பேணுவது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் என்றைக்கும் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை.

அதுதான், பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்த பகுதியில் நேற்று புதன்கிழமை (ஒக்டோபர் 29) காலை இயற்கையின் பெயரினால் மண்சரிவு வடிவில் பிரதிபலித்திருக்கிறது. இதுவரை 8 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. 300க்கும் அதிகமானவர்களைக் காணவில்லை. மழை உள்ளிட்ட சீரற்ற காலநிலையினால் முன்னெடுக்கப்பட்டிருந்த மீட்புப் பணிகளும் நேற்று மாலையோடு நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 30 அடி ஆழத்தில் புதையுண்டிருக்கும் 300க்கும் அதிகமானவர்களின் நிலை என்ன? எண்ணிக்கைகள் வேண்டுமானால் ஊடக பரபரப்புக்கு தீனி போடலாம். ஆனால், உயிர் வலிகளும், அவை சுமந்து நின்ற பேரவலத்தின் அடையாள வாழ்க்கையையும் யாரும் பெரிதாக கண்டு கொள்வதற்கான வாய்ப்புக்கள் இங்கு இல்லை.

அப்படியான அக்கறை இருந்திருந்தால், ஏற்கனவே (2011ஆம் ஆண்டு) அபாயப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து அந்த மக்களை ஒட்டு மொத்தமாக வெளியேற்றியிருப்பார்கள். மாற்றுக் காணிகள் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும். அபாய பகுதி என்று அறிவித்துவிட்டு அங்குள்ள 40 குடும்பங்களுக்கு மாத்திரம் மாற்றுக் காணிகளை வழங்கிவிடுவதால், அபாய அறிவிப்பு நீங்கிவிடுமா என்ன?

அரசாங்கம் தோட்ட முகாமைத்துவத்தைக் குறை சொல்கின்றது. தோட்ட முகாமைத்துவம் தனக்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கும். இழப்புக்களுக்கான காரணங்கள் ஏற்கனவே தெரிவித்துவிட்ட நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளை சம்பந்தப்பட்டவர்கள் பெரிதாக எடுக்கவில்லை. எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் பெயரளவில் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன.

தோட்ட முகாமைத்துவம் மக்களுக்கான மாற்றுக் காணிகளை வழங்கவில்லை என்று அரசாங்கம் குற்றஞ்சாட்டுகின்றது. ஆனால், தோட்டங்களின் முனைமைத்துவ அலகு மாத்திரமே தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. காணிகள் இன்னமும் மத்திய அரசாங்கத்தின் சட்ட ஆளுகைகளுக்குள்ளேயே இருப்பதாக சட்டத்தரணிகள் கூறுகின்றனர். அப்படியான நிலையில், தேவையான காணிகளைப் பெற்று அல்லது தேர்வு செய்து அபாயமுள்ள பகுதிகளில் குடியிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்றுவது யாரின் கடமை? சாட்டுப் போக்குகள் என்றைக்கும் போன உயிர்களையும், வாழ்க்கையையும் மீண்டும் தந்துவிடப் போவதில்லை.

பிரித்தானியர்கள் காலத்து லயன்களிலேயே இன்னமும் அதிகளவான மலையக மக்கள் குடியிருக்கிறார்கள். அவர்களின் அடிப்படை வாழ்க்கை என்பது சர்வதேச வாழ்க்கைத் தர நியமனங்களுக்கு மிகவும் கீழானது. இலங்கை அரசாங்கங்களைத் தீர்மானிக்கும் அளவுக்கு தேர்தல் வாக்களிப்பைக் கொண்டிருக்கின்ற சமூகம் இன்னமும் அடிமட்டத்தில் உழன்று கொண்டிருக்கிற நிலைமைகள் தொடர்பில் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

பெரும்பான்மை மனநிலை அரசாங்கங்களும், ஆட்சியாளர்களும், அவர்களின் சார்பாளர்களும், தோட்ட முகாமைத்துவமும், தோட்டத் தொழிலாளர் சங்கங்களும், அரசியல் கட்சிகளும், தலைவர்களும் என்று பல தரப்பினரையும் மலையக மக்கள் 200 ஆண்டுகளைக் கடந்தும் அலைகழிப்பான வாழ்க்கை வாழ்வதற்கு காரணமாகச் சொல்லிக் கொள்ள முடியும்.

ஆனால், இன்னொரு பெரும் காரணம் பற்றியும் நாம் பேச வேண்டியிருக்கிறது. இல்லாது போனால் இன்னும் இன்னும் எமது உறவுகளின் இழப்புக்களை நாம் இயற்கையின் பெயரினால் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

அடுத்த சந்ததியின் பாதுகாப்பான வாழ்க்கை, அடிப்படையான கல்வி, தொழிற்பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மலையக இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கின்ற விழிப்புணர்வு பேரெழுச்சி பெற வேண்டிய காலம் இது.

வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்களும், மலையக வாழ் தமிழ் மக்களும் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளுக்கு அப்பால், அடிப்படையான வாழ்க்கைப் பிரச்சினைகள் அதிக தருணங்களில் வேறு வேறானவை.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பெரும் காலம் வரையில் தமது தோள்களில் சுமந்த ஒரு சமூகம் இன்றைக்கும் பெரும் மாற்றங்களின்றி மடங்கிப் போயிருக்கின்றது. அவற்றை தமது அரசியல் இலாபங்களுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் கட்சிகள், தொழிற் சங்கங்களை சரியாக கையாள வேண்டிய தேவை பற்றிய விழிப்புணர்வு என்பது பெருமளவில் ஏற்பட வேண்டும். அதுவும், மலைய இளைஞர்களிடத்தில் ஏற்படும் விழிப்புணர்வைக் காட்டிலும் மலையகப் பெண்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே சமூக முன்னேற்றத்தின் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்த முடியும்.

மறைந்த (முன்னாள் அமைச்சர்) சந்திரசேகரன் மலையக இளைஞர்களின் விழிப்புணர்வு கொண்ட எழுச்சியின் குறியீடாக ஒரு காலம் வரையில் கொள்ளப்படக் கூடியவராகவே இருந்தார். ஆனால், அவர் தேர்தல்- வாக்கு அரசியலுக்குள் வந்த பின் ஒட்டுமொத்தமாக சீர்குலைந்து போனார். அவரின் இறுதிக் காலம் என்பது அவரைச் சார்ந்திருந்த கட்சி, தொழிற்சங்களில் படுதோல்வியின் காலமாகவே கொள்ளக் கூடியது.

மலையகத்தில் ஏற்படும் எழுச்சி என்பது சந்திரசேகரன் உள்ளிட்டவர்கள் ஏற்படுத்தியதைத் தாண்டியதாக இருக்க வேண்டும். அது, தேர்தல்- வாக்கு அரசியலையும் இலகுவாக கையாண்டு அடுத்த தலைமுறை தொடர்பிலான அக்கறையை பெருமளவில் வெளிப்படுத்துமளவுக்கு இருக்க வேண்டும்.

இல்லையென்றால், தோட்டங்களில் வேலை செய்வதிலிருந்து விடுபடுதலின் அடுத்த இலக்கு என்பது கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் கடைகளிலும், வீடுகளிலும் வேலை செய்வதாகவே அமையும் சூழலே நீண்டு செல்லும். அவற்றை மாற்றுவதற்கான அடிப்படைகள் தொடர்பில் பேரியக்கமாக மலையக இளைஞர்களும், பெண்களும் தம்மை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்.

சாராயப் போத்தல்கள் வாக்குகளைப் பெற்றுத் தந்துவிடும் என்ற சூழ்நிலையை உருவாக்கி வைத்திருக்கும் மலைய அரசியல் கட்சிகளின் எண்ணங்களில் தீயிட்டு, பெரும் இலக்குகள் நோக்கி ஓட வேண்டியதே மலையக மக்களின் இன்றைய அவசியம். அது, 200 ஆண்டுகால அடிமை வாழ்க்கையை மாற்றி சுதந்திர வாழ்க்கையைக் கொடுக்கும். அதுதான், அவசியமானது, அப்போது, இயற்கை அனர்த்தங்களையும் வென்று விடலாம். போலிக் காரணங்களைக் தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *