“நீ” வரும்வரை…!

 – ஆதிலட்சுமி-

தூக்கமில்லா இரவுகளாய்

கழிகிறது என் காலம்…

உனக்கான பாடல்களை

இசைக்கிறது மனம்,

சிட்டுக்குருவியென உன்னை நீ

உணர்த்திய வேளைகளில்,

நீ பீனிக்ஸ்பறவை என

எனக்குள் உணர்ந்தேன்.

ஆதலால் மகளே, நீ

கீழ்த்திசை நோக்கி சென்றபோது

கலங்கவில்லை நான்

உன்னைக் கடிந்துகொள்ளவுமில்லை

மண் அள்ளிச் சிந்தி யாரையும்

சாபமிடவுமில்லை.

நீ கொண்டுவரும் ஒளியில்

உலகம் விடியுமென காத்திருந்தேன்

வரவில்லை மகளே நீ

ஆற்றங்கரைகளிலும் – பற்றைகளிலும்

மலக்குழிகளின் உள்ளேயும் .

மனித எச்சங்கள் கண்டெடுக்கப்படும்போது

வலித்துப்போகிறது என்மனது

ஆனாலும்- அடிமனதின் ஓரத்தில்

அழியாதிருக்கிறது நம்பிக்கை,

வேல் கைதந்து விடைகொடுத்து

அனுப்பியவள் நான்

வீழ்ந்திடமாட்டாய்

உன் நிமிர்வு ஒருபோதும் குலையாது

உன் நாடிநரம்புகளில புதுஇரத்தம்

பாய்ச்சியபடியே இருக்கும் என்

வாசம் நிறைந்த பாடல்கள்

எங்கிருந்தாலும்-எல்லாவற்றையும் ஊடறுத்து

என்னை வந்தடையும் உன்குரல்…

அதுவரை-கையில் ஒருகவளம் சோற்றுடன்

தொண்டைக்குழிக்குள் தேக்கிய

என் உயிரை பாதுகாத்திருப்பேன்…

-0 4.10.2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *