“தூப்புக்காரி” என் சொந்தக்கதை மட்டுமல்ல, என் சொந்தங்களோட கதை

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் 19வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது வெள்ளிக்கோடு கிராமம்.

வெள்ளிக்கோடு கிராமம் முன் எப்போதும் இல்லாத சந்தோஷ சட்டையை அணிந்து கொண்டுள்ளது, காரணம் மண்ணின் மங்கையான மலர்வதி சிறந்த இளம் படைப்பாளிக்கான சாகித்ய அகடமி விருதை பெற்றிருப்பதுதான்.
இல்லாமையையும், இயலாமையையும் தாண்டி ஒரு பெண் சாதிக்கமுடியும் என்பதற்கு சான்றாக விளங்குபவர்தான் மலர்வதி.
தூப்புக்காரி என்ற இவரது நாவலுக்குதான் விருது கிடைத்துள்ளது.

தூப்புக்காரி என்றால் நாகர்கோவில் பகுதியில் துப்புரவு பணியாளர் என்று பொருள்.தூப்புக்காரி கதை என் சொந்தக்கதை மட்டுமல்ல என் சொந்தங்களின் கதை. திடீரென என் அப்பா திடீர்னு குடும்பத்தைவிட்டுவிட்டு போன போது என் அம்மா விக்கித்துப்போய்விட்டார். அண்ணன்,அக்கா,நான் ஆகிய மூவருக்கும் அப்போது சிறு பிராயம். எந்த கவலையையும் விட பசியால் அழுத தன் பிள்ளைகளின் கவலைதான் என் அம்மாவிற்கு பெரிதாக தெரிந்தது, தனக்கு தெரிந்த ஒரே வேலை கூட்டிப் பெருக்குவதுதான். நாள் கூலி அடிப்படையில் ஒரு பள்ளியை சுத்தம் செய்யும் வேலை கிடைத்தது.

கூட்டிப்பெருக்குவதுடன் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அடைத்துக் கொள்ளும் சாக்கடையை குத்திவிடும்போதும், வீசியெறிந்த மலத்தை அள்ளும்போதும், தீட்டுத்துணிகளை அருவருப்பின்றி அகற்றும்போது நான் அம்மாவின் இடுப்பில்தான் இருந்தேன், வளர்ந்தேன்.
வேலை அதிகமாகும் போது அங்குள்ள மொட்டப்பாறைகளில் கிடத்தப்பட்டிருப்பேன், எல்லா வேலையும் முடிந்து அம்மா வந்து அள்ளி அணைக்கும் அந்த ஒரு கணத்திற்காக காத்திருந்தேன்.

மலத்தை பார்த்தாலே முகம் சுளித்து ஓடும் மனிதர்கள் மத்தியில் மலக்கூட்டத்திற்கு மத்தியில் உணவு சாப்பிடும் ஆயிரக்கணக்கான விளிம்பு நிலை மனுஷிகளில் ஒருவராகத்தான் என் அம்மா இருந்தார்.
தன்னை அசுத்தப்படுத்திக்கொண்டு தன் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொண்ட அம்மாவைப் போன்ற பெண்களுக்கான சமர்ப்பணம்தான் இந்த நாவல்.

வீட்டின் பொருளாதார சூழ்நிலை காரணமாக ஒன்பதாவது வகுப்பிற்கு மேல் பள்ளிக்கு போய் படிக்கமுடியவில்லை, ஆனால் இயற்கையை நேசிப்பதும், மனிதர்களை வாசிப்பதும் எனக்கு பிடித்த விஷயமாகும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நான் வாசித்த மனிதர்களைப்பற்றி, எனக்கு கிடைத்த அனுபவத்தை, நான்பட்ட வலியை எழுத்து மூலம் பகிர்ந்துகொள்வதற்கான பதிவுதான் தூப்புக்காரி.

இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள எண்ணற்ற பெண்கள் மதிக்கப்பட வேண்டும் இந்த கழிப்பறை வேலைக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்ற என் ஆதங்கத்துடன் நாவலை முடித்திருப்பேன்.
நாகர்கோயில் அனல் பதிப்பகத்தில் கடன் சொல்லித்தான் இந்த நாவலை அச்சேற்றினேன், நாவலை படித்த சில மூத்த படைப்பாளிகள் இதனை சாகித்ய அகடமி விருதிற்கு அனுப்பச் சொன்னதன் பேரில் அனுப்பியதில் 2012ம் ஆண்டிற்கான இளம் சாகித்ய அகடமி விருது எனக்கென அறிவிக்கப்பட்டுள்ளது. தாமிர பட்டயமும், 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். பணம், தாமிர பட்டயம்தாண்டி எனக்கு கிடைத்த அங்கீகாரம் எனக்கு பெரிதாக தோன்றுகிறது.

இப்போது நான் இந்தப்பகுதியில் வரும் “முதற்சங்கு’என்ற மாத இதழிற்கும்,”இலக்கிய சிறகு’ என்ற நாளிதழுக்கும் பொறுப்பாசிரியராக உள்ளேன். குறைந்த வருமானம் என்றாலும் நிறைவான பணி. இப்போது கிடைத்துள்ள விருது என்னை மேலும், மேலும் நிறைய எழுத தூண்டியுள்ளது.

 

 

 

 

 

1 Comment on ““தூப்புக்காரி” என் சொந்தக்கதை மட்டுமல்ல, என் சொந்தங்களோட கதை”

  1. இந்த நாவல் பெற உங்கள் உதவி தேவை.உதவுவீர்களா ரஞ்சி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *