பிரிந்து செல்வதில் பிழையென்ன???

த.எலிசபெத்(இலங்கை)

ஒத்துப்போகவில்லையெனில்
விட்டு விலகுதலில் தவறேது
பத்துத்திங்கள் கழித்து
அத்துக்கொண்டு செல்வதிலும்
பித்துக் கொ(ல்)ள்ளும்வரை
பிதற்றித்திரிவதிலும்
பிரிந்து செல்லுதலில் தவறேது???

சீர்வரிசைகளென்று தந்தையின்
மார்வலியை அதிகப்படுத்தாது
ஊர்வாயில் விரல்வைக்கவென்று
தேர்மீது அலங்காரமிடாது
வார்த்தைகள் வளர்த் ததனால் -கண்ணீர்களை
சேர்த்தெவரையும் வதைக்காது
பிரிந்து செல்வதில் தவறேது???

பத்துமாதம் சுமந்துபெற்ற பிள்ளை
தத்தித்தவழ்ந்து நடக்குந்தரு வாயில்
புத்திமாறி புதியவழி தேடுமவர்களோடு
கத்திச்சண்டையிடுவதிலும் -வாய்
பொத்தியழுது ஜீவியத்தை
நித்திலத்தில் தொலைப்பதிலும்
பிரிந்து செல்வதில் தவறேது???

அலுவலகத்திற்கு ஒரு(வன்)த்தி
அழகாக இருந்தாலோ அவ(ன்)ள்
திறமையில் என்னைவிட
தினுசாக மிளிர்ந்தாலோ
அனுதினமதை சுட்டிக்காட்டி
அணுவணுவாய் நமைகொல்லும்
ஆட்கொள்ளி வருவதற்கும் -இப்போதே
பிரிந்து செல்வதில் பிழையென்ன???

பிந்திய சிலநாட்களில்
எந்தனின் தலையெழுத்தென்னவென‌
ஏங்கியே தவிக்காது மண்ணில்
உதித்ததே பாவமென புலம்பாது
விதியினை நொந்து விதவிதமாய் கண்ணீர்
வடித்தழாது இப்போதே
பிரிந்துவிடுதல் நலமன்றல்லவா???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *