சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சந்தியா எக்னலிகொடவுக்கு ஐக்கிய பெண்கள் முன்னணி இம்முறை “கௌரவத் தாய்” (அபிமான் மாத்தா) என்கிற விருதை மார்ச் 8 அளிக்கவிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தை விமர்சித்து எழுதி வந்த பத்திரிகையாளரும் கார்டூன் ஓவியருமான பிரகீத் எக்னலிகொட 2010ஆம் ஆண்டு ஜனவரி 24 காணாமல் போனது தொடக்கம் அவரை தேடியலைந்து, உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் முறைப்பாடுகளுக்கு மேல் முறைப்பாடு செய்தும், அமைதி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், கண்காட்சிகள் நடத்தியும் தனது போராட்டத்தை தொடர்ந்து வருபவர்.
அது மட்டுமல்லாது இலங்கையில் சமீப காலமாக தொடரும் ஜனநாயகத்துக்காக போராடும் சக்திகளுடன் கைகோர்த்து பணிபுரிபவர். பெண்கள் அமைப்புகள், மனித உரிமைகள் அமைப்புகள், ஊடக உரிமை போராட்டங்கள் என அனைத்திலும் கலந்துகொண்டு தனது பங்களிப்பை வழங்கி வருபவர்.
சமீபத்தில் விலைவாசியுயர்வுக்கு எதிராக பெண்களை ஒன்று சேர்த்து அமைப்பொன்றை உருவாக்கிய சந்தியா, ஜனாதிபதியின் மனைவியையும் அதில் இணையுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
மார்ச் 8 காலை 10 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் ரணில் தலைமையில் இந்த விருது வழங்கப்படவிருக்கிறது.