பெண்களின் பாதுகாப்பு பற்றி எழுதும் எங்களுக்கே பாதுகாப்பில்லை!

uma shakthi

உமா சக்தி

ஒரு பெண் வேலைக்குப் போவது அவளது பொருளாதாரச் சுதந்திரத்துக்கு மட்டுமல்ல, அவளுடைய சுயம் சார்ந்த தேவையும், அறிவுத் தேடலின் சாரமாகவும் தான். தான் மட்டுமல்ல தன்னைச் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்ற ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். சுறுசுறுப்பும், ஆளுமையும், அறிவுத் திறனும் பெண்களை துறை சார்ந்த வல்லுனர்களாக எளிதில் முன்னேற்ற பாதைக்கு உயர்த்திச் செல்கிறது.

ஆனால் வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டால் பெண்கள் என்ன என்ன பிரச்சனைகள் அனுபவிக்க வேண்டியுள்ளது? பார்வைகள், கேலிப் பேச்சுகள் இவற்றை எல்லாம் எளிதில் புறக்கணித்துவிடலாம். பொறாமைகள், வேலையில் கிடைக்கும் வெற்றியை வேறு விதமாக விமர்சிப்பார்கள். வேலை விஷயமாக வெளியூர் அல்லது வெளிநாடு போக வேண்டுமானால் வீட்டில் பர்மிஷன் கேட்க வேண்டும். எங்கே திரும்பினாலும் தடைக்கற்கள். ஆனாலும் சளைத்தவளல்ல. நினைத்தவற்றை முடிக்கும் உறுதியும் தெளிவும் அவளிடம் மேலதிகமாகவே உள்ளது. ஒன்பது மணிக்குள் வீட்டில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் மெல்ல தளர்ந்து பெண்கள் வீடு திரும்பும் நேரம் வேலை முடியும் நேரமாக மாறிக் கொண்டிருக்கும் சமயங்களில் தான் அவளின் பாதுகாப்பு பிரச்னைகள் இப்படி கேள்விக்குரியதாகிவிடுகிறது.

பெண்ணை உடலாகவும் போகப் பொருளாக மட்டுமே நினைக்கும் வக்கிர மனம் படைத்த மனிதர்களுக்கு அவள் படித்தவளா வேலைக்குபோகிறவளா என்றெல்லாம் யோசிக்க எங்கே நேரம். பயன்படுத்தி தூக்கி எறிய நினைக்கும் கேடு கெட்ட ஜென்மங்கள் இருக்கும் பூமியில் தான் வாழ்கிறோம். எவ்வளவு பாதுகாப்பாற்ற நிலையில் ஒவ்வொரு நாளும் உயிரைப் பணயம் வைத்து செல்கிறார்கள் என்று அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் அதற்கான முயற்சியோ அப்படி என்ன வேலைக்குப் போய்த் தான் ஆகணுமாஞ்என்ற கேள்வியையும் தான் எதிர்க் கொள்ள வேண்டியுள்ளது..

நானே ஒரு பத்திரிகையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஷிப்ட் சிஸ்டம் மாற்றினார்கள். புற நகர்ப் பகுதியில் இருக்கும் என் வீட்டருகே அடிக்கடி பல குற்றங்கள் நிகழ்வதுண்டு. மதியம் இரண்டு மணிக்கு வேலைக்குச் சென்று இரவு பத்து மணிக்கு வீடு திரும்பும் பெண்ணை தெருவில் இருக்கும் நாய்கள் கூட குரைத்துத் தான் வரவேற்றன. சற்று வேலை நேரத்தை மாற்றித் தாருஙக்ள் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தும் முடியவில்லை. பெண்கள் பாதுகாப்பைப் பற்றி, அது இல்லாமல் கொடூரமாக மரணம் அடைந்தவர்களைப் பற்றி அதே பத்திரிகைகளில் கட்டுரை எழுதுகிறோம், ஆனால் வேலைக்கு வரும் பெண்களுக்கு குறைந்த பட்சம் வாகன ஏற்பாடாவது செய்து வீடு வரை விடமாட்டோம். உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் என்று கை கழுவி விட்டுப் போகும் மன நிலையில் நீங்கள் எழுதி என்ன, பத்திரிகை நடத்தி என்ன? மனம் வெறுத்துவிட்டதுஞ் சில கார்ப்பரேட் பத்திரிகைகள், ஐடி நிறுவனங்களின் காஸ்ட் கட்டிங் விஷயங்களைப் பார்த்து, பாதுகாப்பு போன்ற விஷயங்களை அலட்சியம் செய்கின்றன‌. உங்கள் அலுவலகத்தை மற்றொரு வீடாக நினைத்துத்தான் ஒவ்வொரு பெண்ணும் வேலைக்கு வருகிறாள். பணமோ பதவியோ அவை அடுத்த விஷயங்கள். பெண்களை எப்போது சக உயிராக மதித்து அவளுக்குத் தேவையான அனைத்தையும் முழுமையான மனப் பூர்வமாக எப்போது செய்கிறோமா அப்போது தான் நிர்ப்பயாக்களும் உமா மகேஸ்வரிகளும் வித்யாக்களும் மீண்டும் மீண்டும் சாக மாட்டார்கள்.

உமா சக்தியின் வலைதளம் http://fourladiesforum.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *