நர்மதா தேவி(இந்தியா)
2010-ஆம் ஆண்டில் உலகில் 5,000 கௌரவக் கொலைகள் நடைபெற்றதாகவும் அதில் 1,000 கொலைகள் இந்தியாவில் நடந்தவை என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது உலகில் நடந்த கௌரவக் கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெருகிறது.
வட இந்தியாவின் பங்கு என்ன?
90 சதவிகித கௌரவக் கொலைகள் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர் பிரதேசத்தில் மட்டுமே நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. இவை பெரும்பாலும் காப் பஞ்சாயத்துக்களின் தீர்ப்பை ஒட்டி நிகழ்த்தப்பட்டவை.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வட இந்தியப் பகுதிகளில் ’காப் பஞ்சாயத்துகள்’ எனப்படும் சபைகள் இயங்கி வருகின்றன. சாதிய/கோத்ர ஒழுங்கைப் பேணுவதே இச்சபைகளின் முக்கியச் செயல்பாடாக இருக்கிறது. 12, 24 அல்லது 84 கிராமங்களை உள்ளடக்கியது ஒரு காப். காதல் மணம் புரியும் தம்பதிகளைப் பிரித்து வைப்பது, ஊர் நீக்கம் செய்வது, கௌரவக் கொலை செய்வது, தற்கொலைக்குத் தூண்டுவது போன்ற குற்றச்செயல்பாடுகள் வாயிலாக காப் சபைகள் சாதிய/கோத்ர தூய்மையைப் பேணிவருகின்றன.
தென்னகத்தில் இல்லையா?
தென்னகத்தில் சாதிய சபைகள் காப் பஞ்சாயத்துகள் என்ற பெயரில் செயல்படாவிட்டாலும், கட்டப்பஞ்சாயத்துகள் வடிவில் செயல்படுகின்றன. இவையும் சமூக விலக்கம், சாதி நீக்கம், கௌரவ கொலைகள் வாயிலாக சாதித்தூய்மையைப் பேணி வருகின்றன. தமிழ்நாட்டில் நடைபெற்ற கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை எவ்வளவு? அவை எதற்காகச் செய்யப்படுகின்றன? போன்ற தகவல்கள் சரிவரக் கிடைக்கவில்லை.
எனினும் கௌரவக் கொலைகளை கீழ்கண்ட காரணங்களுக்குள் அடக்கலாம்.
1) சாதி மறுப்புக் காதல் உறவுகள்/ திருமணங்களாலோ
2) ஒரே சாதிக்குள் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத உறவினர்களுக்குள்ளான உறவுகள் /திருமணங்களாலோ
3) ஒரே சாதி திருமணங்களில் வர்க்க வேறுபாடுகளாலோ
4) திருமணத்துக்கு வெளியிலான உறவுகளாலோ
5) ஆண்/பெண் உறவுமுறைக்குள் வராத ஒரு பாலர் உறவுமுறைகளினாலோ
6) பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட காரணத்தினாலோ
7) வேறு காரணங்கள்
தமிழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து ஜூலை மாதத்திற்கு இடைப்பட்ட 12 வாரங்களில் சாதியின் பெயரால் 7 கௌரவக் கொலைகள் செய்யப்பட்டிருக்கின்றன. பல சமயங்களில் கௌரவக்கொலைகள் தற்கொலைகள் என்று சித்தரிக்கப்படுகின்றன. ஆகையால் தற்சமயம் தமிழகத்தில் இளம்பெண்கள் தற்கொலை நிகழ்வுகளின் எண்ணிக்கையைக் கொண்டே, இளம்பெண் கௌரவக் கொலைகளின் எண்ணிக்கையை ஊகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
2010 அக்டோபர் 23 தேயிட்ட தெகல்கா வார இதழில், தமிழகத்தில் கௌரவக்கொலைகள் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியானது. அதில் ஜனவரி 2008-ஆம் ஆண்டிலிருந்து ஜூன் 2010 வரைக்குமான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் தற்கொலை செய்துகொண்ட பெண்களில் 1,971 பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இந்தக்காலகட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட பெண்களில் 90 சதவிகிதத்தினர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தற்கொலைகளில் கௌரவக்கொலைகளும் அடங்கியிருக்கலாம்.
கௌரவக்கொலைகளைத் தற்கொலைகள் என்று மூடிமறைப்பதில் குடும்ப உறுப்பினர்கள், ஊர் மக்கள் தவிர காவல்துறைக்கும் கணிசமான பங்கு இருக்கிறது.
http://www.tehelka.com/seven-honour-killings-in-12-weeks-tamil-nadu-does-it-too/