‘மடை’ பாரம்பரியக் கலைகளின் செயற்பாடும் கலைஞர்களின் உற்சாக கொண்டாட்டமும்

அன்னபூரணி மட்டக்களப்பு

உலகமயமாக்கலின் தீவிர போக்கினால் உலகம் பொதுவான பண்பாட்டை உருவாக்கும் நிலையில் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மக்களைத் தனியாக்கி பிரித்து உறவை வலுப்படுத்தும் சூழல் இல்லாத இந்த 21ம் நூற்றாண்டில் மக்கள் அதனைக் கடந்து தம்மை இணைப்பதற்காக வடிவமைத்து வைத்திருந்த பாரம்பரிய கலைகளை மேலும் வலுவாக சுய திட்டமிடலுடன் கிராமப்புறங்களில் முன்னெடுத்துக் கொண்டாடுகின்றமை மகிழ்வைத் தருகின்றது.

பொதுவாக பாரம்பரிய கலை விழாக்கள், ஆய்வரங்குகள், மக்கள் சார்ந்த நிகழ்வுகள் மக்களிடம் தகவல்களை எடுத்துக் கொண்டு புதிய போக்காக பாரம்பரியக் கலைகளின் செயற்பாடுகளும் கலைஞர்களின் கொண்டாட்டமும்  போன்ற நிகழ்வுகள்  இடம்பெறுகின்றன

‘மடை’ எனும் பெயரில் முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்வில் பாரம்பரிய கொண்டாட்டங்களையும், ஆற்றுகைகளையும், காட்சிப்படுத்தல்களையும், கலந்துரையாடல்களையும் இது கொண்டுள்ளது. மடை எனும் சொற்பதம் சமூகத்தில் வழிவழியாக பெரியோர் முதல் சிறியோர் வரை பரீட்சயமானது. மடை எனும் பெயரில் சுட்டி நிற்கும் இந்த விழா வேறுபட்ட எண்ணக்கருவுடன் கலாநிதி சி. ஜெயசங்கரின் தலைமையில்  உருவாக்கப்பட்டு தொடர் செயற்பாட்டுடன் பல வழிகளில் திட்டமிட்டு நடைபெறுகின்றது.

மடையின் தொனிப் பொருள் மிகவும் வித்தியாசமானது. பன்முக சமூகத்தை உள்வாங்கி அதிகாரத் தாக்கம் இல்லாத மக்கள் மைய நிகழ்வாக திகழ்கின்றது. இது திருகோணமலையில் சிவானந்த தபோவன சிறுவர் இல்லத்தில் 25.10.2013 தொடக்கம் 27.10.2013 வரை ஈழத்துத் தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள அனைத்துப் பாரம்பரிய கலைச் செயற்பாட்டாளர்களையும் இணைத்த ஒரு கூதட்டுச் செயற்பாடாகும் 
மடை என்பது சமூகத்தில் பொதுவாக பண்பாட்டுத் தளத்தில் இரண்டறக் கலந்த ‘பல்பொருட்களையும் ஒன்றிணைத்ததாக’ விளங்குகின்றது. மடை வைத்தலானது ஒரு மடையில் தொடங்கி மூன்று, ஏழு என தொடர்ந்து செல்வதும் உண்டு. வீடு கட்டுவது முதல் புது மனை புகுதல் வரையும் மடை வைத்தே அதனை ஆரம்பிப்போம். சடங்கு சம்பிரதாயங்கள், வாழ்க்கை முறைகள், இன்ப துன்ப நிகழ்வுகள் போன்றவற்றில் எல்லாம் மடைக்கென தனி இடம் உண்டு. அவை வைப்பதற்கான தனியான முறைமையும் உண்டு. எனினும் இரு பாலாரும் தமது விருப்பிற்கேற்ப இதனை வைப்பர்.

மடை எனும் கலை இலங்கையில் பல பாகங்களிலும் பாரம்பரியத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களையும் அதனூடாக வெளிப்படும் கலைகளையும் ஒன்றிணைக்கும் பன்மைத்தன்மை சார்ந்தவையாகும். கிராமப்புற நிகழ்த்து கலைஞர்கள் தமது சமூகத்தினரை இணைத்துக் கொண்டு தாமாகவே தமக்குரிய மகிழ்விற்கான தமது திட்டமிடலுடனும் சுய செயற்பாட்டினுடனும் எந்த விதமான பெரும் செலவும் இன்றி தமக்குள் சிறிய அளவு பணத்தைச் சேர்த்துக் கொண்டு பாரம்பரிய கலை நிகழ்துகைகளை பருவகாலங்களில் உற்சாகத்துடன் முன்னெடுக்கின்றனர். அப்போது கிராமத்தவர் மகிழ்வுடன் கலந்து கொள்வர். இவ்வாறு முன்னெடுக்கும் போது சில பிரச்சினைகள், சவால்கள் போன்றவற்றையும் எதிர்நோக்க வேண்டிய சந்தர்ப்பமும் நிலவும்.

இலங்கையின் சுமார் 200 கலைஞர்கள் சங்கமமாகும் நிகழ்வே இதுவாகும். தாம் தேர்ச்சி பெற்ற இந்த பாரம்பரிய கலைச் செயற்பாட்டில் தாமாகவே தமது அறிவு, திறன் போன்றவற்றோடு குறித்த கலையில் தமக்கிருக்கும் ஆழ்ந்த புலமைத்துவம் போன்றவற்றையும் தாமாகவே எடுத்துக் கூறுவதாகவே அமைவது இந்த மடையாகும். மக்கள் தாங்களே தமது ஆற்றல்களைப் படைப்பது இந்த மடையில் நிகழும்.

இத்திருவிழாவில் மக்கள் கலைஞர்கள் அனைவரும் தனியாகவும் கூட்டாகவும் தமக்கான கலை ஆற்றல்களை பல சந்தர்ப்பங்களில் மற்றய கலைஞர்களுக்கு வெளிப்படுத்துவர். அதனை மற்றய கலைஞர்களுக்கு பகிர்ந்து மகிழ்வதோடு இதில் பரீட்சயமாகி அது தொடர்பான உரையாடலில் ஈடுபடும் வாய்ப்புண்டு.

பல்வகைமைகளை முன்னிலைப்படுத்தும் இந்த மடையில், இலங்கைக் கலைஞர்களின் கலை வெள்ளம் பாய்வதையும் காணலாம். யாழ்ப்பாணத்தில் இருந்து 16 பேருடன் பப்பரவாகன் வடமோடிக்கூத்து, காத்தவராயன் கூத்து நிகழ்த்துகையும், அந்தக்கலைஞர்களின் உரையாடல்களும், முல்லைத்தீவில் இருந்து கோவலன் கூத்தும், சிலம்பு கூறல் நிகழ்வும் பகிர்வுகளும், மன்னாரில் வாசாப்பு, வடபாங்கு, தென்பாங்கு எனும் பாரம்பரிய ஆற்றுகைகளை இணைத்த மன்னார் மாலையும், உணர்வுப் பகிர்வும் உடப்பின் அதன் தனித்துவ ஆற்றுகைகளும், திருகோணமலை துரோணர் போர் வடமோடிக் கூத்து, சிலம்பாட்டம், கும்பத்துச் சடங்கும், அந்தக் கலைஞர்களின் அடிமன வெளிக்கொணர்கையும், மட்டக்களப்பில் 56 பாரம்பரியக் கலைஞர்களை உள்ளடக்கிய வேடச் சமூகத்தினரின் வேடச் சடங்கு இசை நிகழ்வுகளும், பறங்கியர் சமூகத்தினரின் கபறிஞ்சா அதனுடன் தொடர்பான அவர்களின் பாரம்பரிய இசை நிகழ்வும், மட்டக்களப்பில் வருடா வருடம் சமூகத்தை இணைத்து நடைபெறும் கூத்துக்களில் ஒன்றான மகிடிக் கூத்தும், முஸ்லீம்களின் தனித்துவத்தினை வெளிப்படுத்தும் பக்கீர்பைத், பொல்லடி, வாள்வீச்சு போன்ற நிகழ்வும், அருந்ததியரின் தப்பு எனும் வாத்தியக் கருவி மூலம் மிகவும் காத்திரமாக இசைக்கப்படும் இசை நிகழ்வும், பாரம்பரிய இசைக் கருவிகளான பறை, மத்தளம், தாளம், சவணிக்கை, உடுக்கை, சொர்ணாளி போன்றவற்றினுடனான இசைக் கோர்வையும் என ஒன்று திரண்ட நிகழ்வாக இவை அமையும்.

கலைஞர்கள் அவர்களாகவே தமது ஆளுமைகளைச் செய்து காட்டியும், உரையாடல் மூலமும் தம்மை அடையாளப்படுத்தும் அற்புத நிகழ்வு இங்கு செவ்வனே இடம்பெறும். பாரம்பரிய கலைஞர்களிடம் தமக்கென தனித்துவமான திறன் உண்டு. அவர்கள் தமது பண்பாட்டுச் சூழலில் தாமாகவும், செய்து கற்றல் மூலமும் பெற்றுக் கொண்ட அனுபவக்கருத்துக்களை வெளிப்படுத்துவர்.
பாரம்பரியக் கலைஞர்களின் கொண்டாட்டங்களில் மிகமுக்கியமாக வெளிப்படுத்தப்படுவது பல பிரதேச பண்பாட்டுத் தளங்களில் இருந்து வரும் கலைஞர்களின் பிரச்சினைகள், அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் போன்றவற்றை உரையாடும் சந்தர்ப்பம் இதில் முக்கியமானது.இன்றைய நவீன தொழிநுட்ப யுகத்தில் பாரம்பரியக் கலைகள் அருகிப்போயுள்ளது. அழகற்றது என கட்டமைக்கப்பட்டுள்ள நிலைமை ஏற்படுகின்றது. அத்தோடு தொடர்ச்சியாக கலைச் செயற்பாட்டை முன்னெடுத்துவரும் பாரம்பரியக் கலைஞர்களுக்கு உள்ளார்ந்த, புறவயமாக நிலவுகின்ற பிரச்சினைகளை அவர்களே கலந்துரையாடுவர். அப்போது அவர்களுக்குள்ளே பிரச்சினைக்குரிய தீர்வை அறிந்து கொள்வதற்கான சுய சிந்தனை வெளிப்பாடும் இந்த சந்தர்ப்பத்தில் வலுப்பெறும். அவ்வாறே தொடர்பு சாதனங்களின் தாக்கம், புத்திஜீவிகளின் கருத்தியல் ரீதியான கட்டமைப்பு, உலகமயமாக்கலின் மூலமான முதலாலித்துவ ஆதிக்கம், கற்றல் சூழலில் இதற்கென விதிக்கப்படும் கூற்றுக்கள் போன்ற பல சவால்கள் பற்றி பேசப்படும். இந்த சந்தர்ப்பத்தில் ஏனைய கலைஞர்களுக்கும் அவை படிப்பினையைத் தரக் கூடியதாக அமையும்.

குறிப்பாக தன்னாமுனையில் சுமார் 42 வருடங்களுக்குப் பிறகு ஞானபுத்திரன் எனும் வடமோடி கிறிஸ்தவக் கூத்து குறிப்பாக இளம் சமூகத்தினர் ஒன்றுசேர ஆடப்பட்டது. களுவண்கேணியில் 13பேர் வடமோடிக் கூத்து மக்கள் திரலாக ஒன்றிணைய அரங்கேற்றிக் கொண்டாடினர்.

காயங்கேணியில் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு 14ம் போர் வடமோடிக் கூத்து நிகழ்த்தப்பட்டது. கரவெட்டியில் பூதத்தம்பி விலாசம் கூத்து ஆடப்பட்டது. இதற்குக் காரணம் இதன் தேவையும் இருப்பும் மிகவும் அவசியமானது என உணர்தமையே ஆகும். ஆனாலும் அவற்றை முன்னெடுப்பதில் புலப்படும் சவால்களையும் இங்கு அவர்களாலே வெளிக் கொணர வைப்பதும் முக்கிய நிகழ்வாககும்
வேடர் சமூகத்தினர், பறங்கியர் சமூகத்தினர், அருந்தியர் சமூகத்தினர், பறையர் சமூகத்தினர், வனக்குறவர் சமூகத்தினர், முஸ்லீம் சமூகத்தினர் போன்றோர் ஒன்னிணைந்து தமது இடையூடாட்டங்களை மேற்கொள்வதும் அவர்களுக்கு மதிப்பளித்தலும் இடம்பெறும். சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இன்றி தமது ஆற்றல்களை வெளிப்படுத்துவது முன்னிலைப் படுத்தப்படுகின்றது.

இந்தக் நிகழ்வு திருகோணமலையில் பிரதேச ரீதியான ஆற்றுகைகள் ஊட்டக்கூடிய வகையில் 5 இடங்களில் நடைபெறும். கடற்கரை ஓரத்தில் பாரம்பரிய வாத்திய இசை நிகழ்வு இடம்பெறும். குளக்கோட்டன் தோப்பு முன்றலில் பறங்கியர் இசை நிகழ்வு, முஸ்லீம்களின் பொல்லடி(களிகம்பு), வாள் வீச்சு, பறைமேளக் கூத்து போற்றவையும் இடம்பெறும். சிவானந்த தபோவனத்தில் அமைக்கப்படும் களரியில் பிரதேச தனித்துவ வெளிக் கொணர்கையை முன்னிலைப்படுத்தும் கூத்துக்கள் நிகழ்த்தப்படும். சடங்குப் பந்தல் மற்றும் காட்சிக் கூடத்திற்கு முன்பாக சில ஆற்றுகைகள் முன்னிலைப்படுத்தப்படும். இவ்வாறே இந்து கலாசார வளாக மண்டபத்தில் மகிடிக் கூத்தும், காமன் கூத்தும் நிகழ்த்தப்படும்.

இந்தக் கொண்டாட்டத்தில் காட்சிப்படுத்தல்களும் முக்கிய இடம் வகிக்கின்றது. வேடர் சமூக சடங்குப் பந்தல்கள், தமிழரின் தனித்துவ கட்டிட அமைப்புக்கள், களரி, தோரணம், பாரம்பரிய பொருட்கள் கொண்ட காட்சிக் கூடம் போன்றவைகளும் சிறப்புற அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த மடை என்ற விழா தொடர்பாக கலாநிதி சி .ஜெயசங்கரின் தலைமையில் 11 பேர் கொண்ட ஒழுங்கமைப்புக் குழு ஒரு மாதத்திற்கு முன்பிருந்து ஆரம்பிக்கப்பட்டு தொடர் கலந்துரையாடல், சந்திப்பு மற்றும் செயற்பாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டது. இங்கு குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *