தர்ஷினி ராதாகிருஸ்ணன் – இலங்கை

ஊடறு பெண்கள் அமைப்பின் 20 வது ஆண்டு “பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்” என்ற தொனிப்பொருளின் கீழ் மார்ச் 15,16 திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. குறிப்பாக பல்வேறு துறைசார் ரீதியில் சாதனைபடைத்துக்கொண்டிருக்கும் பெண்சாதனையாளர்களை சந்திக்கும் வாய்ப்பும் இச்சந்தர்ப்பத்தில் கிடைக்கப்பெற்றது. ஊடறு அமைப்பினர் தங்களின் அனுபவங்களின் ஊடாக ஊடறு அமைப்பு தொடர்பில் தெளிவுப்படுத்தலை மேற்கொண்டமை சிறப்பான ஒன்று.
ஆரோக்கியமான பல கலந்துரையாடல்களின் ஊடாக அரசியல்,மத, சமூக பின்னணியில் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க சிந்தனைகள் வெளிச்சமிடப்பட்டன. பல ஓராள் அரங்கு நாடகம் மற்றும் குழு நாடகங்கள் வாயிலாக சொல்லப்பட்ட சமூக பிரச்சினைகளும் இன்றளவும் மனதை நெருடிக்கொண்டிருக்கும் ஒரு விடயமாகவே மாறிவிட்டது. விசேடமாக “கசிவு ஆவணப்படம்” திரையிடப்பட்டமையும் அது தொடர்பிலான கலந்துரையாடல்களும் இயக்குநர் என்ற வகையில் பல மடங்கு உந்தலை கொடுத்துள்ளமை தனிப்பட்ட ரீதியில் சிறப்பான ஓர் அனுபவமாகும். ஊடறு அமைப்போடு பயணிக்கும் பயன்மிகு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த ஊடறு ரஞ்சி அம்மா அவர்களுக்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை விரிவுரையாளர் அனுதர்ஷி கபிலன் அவர்களுக்கும் விசேட நன்றிகள்.
ஜிந்துஜா விஜயகுமார் – இலங்கை

ஊடறு அமைப்பானது பெண்களின் முன்னேற்றம் மற்றும் அதற்குரிய வழிகாட்டலுக்கான சிறந்த களமாகக் காணப்படுகின்றது. ஊடறுவின் 20 ஆவது ஆண்டு சந்திப்பானது இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இரு தினங்கள் நடைபெற்றது. இந்த சந்திப்பில் நானும் ஒரு பங்கேற்பாளராக இருந்ததில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த வாய்ப்பினை ஏற்ப்படுத்தித் தந்த ரஞ்சி அம்மாவிற்கும் எனது போரிசிரியர் அனுதர்சி அர்களுக்கும் மிக்க நன்றிகள். பெண்நிலை சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் என்ற தொனிப் பொருளின் கீழ் நடைபெற்ற இந்த சந்திப்பில் உலகின் பல இடங்களில் இருந்து பெண்ணிய எழுத்தாளர்களும் பெண்ணிய ஆர்வலர்ளும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியிருந்தார்கள்.
இதன் மூலம் சமூகத்திலும் அரசியல் களத்திலும் பெண்கள் மற்றும் LGBTQIA+ சமூகத்தினர் எதிர் கொள்ளுகின்ற சவால்கள் வெளிக்கொண்டுவரப்பட்டு அவற்றிற்கான தீர்வுகள் கலந்தாலோசிக்கப்பட்டது. இதன் மூலம் சமூகத்தில் பெண்கள் மற்றும் LGBTQIA+ சமூகத்தினரின் எதிர்காலத்தை முறையில் கொண்டு நடத்துவதற்குரிய வழிவகைகளை அறிந்து கொள்ளக் கூடியதாகவும் அதனை முன் வைப்பதாகவும் அமைந்தது. இது எனக்கு ஒரு சிறந்த அனுபவத்தையும் அறிவையும் அளித்திருந்தது சாதிக்கத் துடிக்கின்ற பெண்களுக்கான வாய்ப்புகளை வழங்குகின்ற ஒரு சிறந்த காலமாக ஊடறு அமைப்பு செயற்பட்டு வருவதோடு இனிவரும் காலங்களிலும் சிறந்த முறையில் செயல்பட வேண்டும்.அதுமட்டுமில்லாத பல்கலைக்கழகம் மாணவர்களையும் இளம் தலைமுறையினரையும் உள்வாங்குவதன் மூலம் சிறப்பான புத்துணர்ச்சி தன்மையை பேண முடியும் என்பதோடு பெண்கள் மற்றும் LGBTQIA+ சமூகத்தினர் பற்றிய தவறான புரிதல்கள் அகற்றப்பட்டு சிறந்த புரிதல்கள் சமூகத்திலும் ஏற்படுத்தப்படும்.
ஷதிஸ்னி மதியழகன்- இலங்கை

பெண் நிலை சந்திப்பு மற்றும் பெண்ணிய உரையாடல் 2025
கடந்த மாதம் ஊடறு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த “பெண் நிலை சந்திப்பு மற்றும் பெண்ணிய உரையாடல் 2025” இந் நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது ஒரு அருமையான அனுபவமாகவும், பல்வேறு வகையான புரிதல்களையும் எனக்குத் தந்த நிகழ்வாக அமைந்தது.
இன்று வரை என்னை ஆழமாக தொட்ட சில நிகழ்வுகள் இருக்கும் என்றால், அந்த வரிசையில் உறுதியுடன் சேர்க்கக்கூடியதில் இந் நிகழ்வும் ஒன்றே என்றே கூறுவேன். இந்நிகழ்வு எனக்கு மட்டுமல்ல, பங்கேற்ற பலருக்கும் மனதில் இருந்து அசையாத நினைவாகவே இருக்கும்.இச்சந்திப்பு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இரு நாட்கள் (15, 16) நடைபெற்றது, இலங்கை மட்டுமல்லாது இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், சட்டத்தரணிகள், மாற்றுத்திறனாளி பெண்கள், பெண் போராளிகள் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்த இரண்டு நாட்களும் உணர்வால் நிரம்பிய, உரையாடல்களால் நிரம்பிய, மனித அனுபவங்களால் நிறைந்த நாட்களாக மாறியது. இங்கு பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட தலைப்புகள் அனைத்தும் ஒரு பெண்ணின் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டுபவையாக அமைந்திருந்தன.
முஸ்லிம் சமூகத்தின் விவாக, விவாகரத்து சட்டங்களில் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள், பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் , பெண்களும் ஊடக வெளியும் , பெண்களும் அரசியல் பரப்பும் , பாலின சமத்துவத்தின் அவசியம் , பெண்கள் எதிர்கொள்ளும் சமூக சவால்கள் , மாற்றுத்திறனாளி பெண்களின் குரல்கள் , போராளி பெண்களின் அனுபவங்கள் , யதார்த்த உண்மை கதைகள் , பெண்ணிய கலைநிகழ்வுகள், ஓவியக் கண்காட்சி என ஒவ்வொரு உரையாடலும் ஒரு உண்மையை உரைத்தது, ஒவ்வொரு பங்கேற்பாளரும் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக அமைந்துருக்கும் விடயங்களை நிகழ்விற்குள் கொண்டுவந்திருந்தார்கள்.
இந்நிகழ்வில் நூலக நிறுவனம் சார்பாக “பெண்கள் ஆவணப்படுத்தல்” என்ற தலைப்பில் நான் வழங்கிய Presentation எனக்கு முக்கியமானதொரு வாய்ப்பாகும். என்மீது நம்பிக்கை வைத்து எனக்காக அந்த வாய்ப்பை அளித்த நூலக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி றஞ்சுதமலர் நந்தகுமார் அவர்களுக்கு நன்றி இத்தருணத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெண்களை ஆவணப்படுத்துவது என்பது வெறும் பதிவுகளோ புகைப்படங்களோ மட்டுமல்ல அவர்களின் குரல்கள், அனுபவங்கள், அரசியல், வாழ்வியல், எதிர்ப்புகள் எல்லாம் வரலாற்றின் பகுதியாகவும் பதிவாகவும் வேண்டும். ஆவணப்படுத்தல் என்பது அவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பதும், சமூக நினைவாக மாற்றுவதுமாக இருக்க வேண்டும் எனபதனையே நூலக நிறுவனமும் வலியுறுத்துகிறது.
இது ஒரு சந்திப்பு மட்டுமல்ல…
இது ஒரு ஆழமான புரிதல்…
இது பெண்களின் வரலாற்றுப் பதிவின் தொடக்கமாய் இருக்கும் ஒரு முயற்சி…
ஒவ்வொரு பெண்ணும் தன் குரலை இங்கு பகிர்ந்தது போல, அந்த குரல்கள் காலத்தால் அழிக்க முடியாத வரலாறாக நிலைத்து நிற்க வேண்டும் என்பதே இந்த சந்திப்பின் அழகு.
“பெண்களின் குரல்களை பதிவு செய்யாத வரலாறு… ஒரு அசம்பாவிதமான இழப்பு…”
நன்றி.
டயாளினிகோகிலா – இலங்கை

நான் ஓவியை டயாளினி கோகிலா என்ற அறிமுகத்துடன் 2020 லிருந்து ஊடறுவுடன் எனக்கு இருக்கும் புரிதலை இங்கு முன் வைப்பதில் மகிழ்வடைகின்கிறேன்.
பெண்ணின் மென்மையான உள்ளமும் அதன் மூலம் பெண் என்ற வாழ்க்கைப் பாத்திரம் அதனுள்ளும் அளப்பெரிய பொறுப்பும் அதை உணராத அதை மதிக்காத, அவமதிக்கும் சமூகத்திலிருந்து தன் களம் எது தன் வலிமை தனக்கே உரித்தான, பெண் ஆளுமையின் வெளிப்பாடு எது என இனங்கண்டு அதனை அகம்,புறம் சார்ந்து சமூகத்தில் மற்றப் பெண்களுக்காகவும், குரல் கொடுக்கத் துடிக்கும் பெண்களுக்காகவும் பெரு வெடிப்பாய் மாற்ற அடித்தளமாய் விளங்கும் ஊடறுவுக்கு வாழ்த்துகள்.
ஊடறுவின் 20 ஆண்டுகள் பயணம் மார்ச் 15/ 16 2025 இல் யாழில் இடம்பெற்றது மனமகிழ்வையும் மனத்தைரியத்தையும் என்னுள்ளும் ஏற்படுத்தியிருந்தது. அங்கு பெண்கள் ஒன்றிணைந்து நிகழ்வை சிறப்பித்ததுடன் ஆளுமை மிக்க பெண்களின் பேச்சு, நாடகம், கூத்து, காண்பியக்கண்காட்சி ,காணெளிப்பதிவுகள், குறும்படம் ,விருந்துபசாரம் என நிகழ்வுகள் நடைபெற்றன. தமிழ் முஸ்லிம் சட்டவாளர்கள் மற்றும் பெண் ஆளுமைகள் சமத்துவமற்ற சட்டநிலையை பகிர்ந்து கொண்டார்கள் இந்த பாகுபாடுகளையும் மன இறுக்கங்கங்களையும் மக்களின் முன் வைத்து ஊடறு ஊடறுத்துப் பேசுகிறது என்ற மன மகிழ்வை என்னுள் ஏற்படுத்தியது.
அதுவும் என் போன்ற பல இளைய தலைமுறையினர்க்கு புதியவிடயங்களாகவும் இருந்தன.ஊடறுவின் பயணம் பல பெண் ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் அதேவேளை ஆளுமைமிக்க பெண்களுக்கான வாழ்வியல் மற்றும் அவர்களின் ஆளுமைகளை வெளிக்கொணரவும் அவர்களுக்கான வாழ்வியல் சார்ந்த ஆளுமை அடையாள வெளியையும் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். ,என்ற கேரிக்கையையும் முன்வைக்கின்றேன்.