வன்னியைச் சேர்ந்த சமூக செயற்பாடாளர் தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணத்துக்கு ஆசியாவின் சமாதானத்துக்கான விருது!

தகவல் -சந்தியா( யாழ்ப்பாணம், (இலங்கை)

 வன்னியைச் சேர்ந்த  சமூக செயற்பாடாளர் தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணத்துக்கு ஆசியாவின் மதிப்புமிக்க சமாதானத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் தலைமைத்துவத்தைக் கௌரவிக்கும் வகையில் வருடம் தோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது. இவருடன் ஆப்கானிஸ்தான், நேபாளம், கிழக்கு திமோர், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தானேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மேலும் ஐந்து பெண்கள் இவ்வாண்டுக்கான சமாதான விருதைப்  பெற உள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. கிராமிய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பணியாற்றியமைக்காகவே தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணம் இவ்விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வன்னியில் பல்வேறு பெண்கள் சமூக அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வரும் இவர், ஆதரவற்ற பின்தங்கிய சிறுவர்களுக்கான கல்வி, ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கான உதவிகள், பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள் மற்றும் காணி உறுதிகள் போன்ற சட்ட ஆவணங்களைப் பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட சமூகப் பணிகளை ஆற்றியுள்ளார். பெண்களின் உரிமைகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துதல் போன்ற பல்வேறு வகையிலான பணிகளை இவர் ஆற்றி வருகின்றார்.

இவ்விருது கிடைத்துள்ளமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தவச்சிறி விஜயரட்ணம், ‘எனது சமூகத்தின் தேவைகளுக்காக பல ஆண்டுகளாக அமைதியாக சேவையாற்றி வருகின்ற நிலையில்  தன்னை இந்த  இவ்விருதுக்கு தெரிவு செய்யப்பட்டமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த விருது வழங்கும் நிகழ்வு தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *