“நியாய”சபை

-தாட்சாயணி-

கண்ணகியின்
ஒற்றைச்சிலம்பின் பரல்கள்
தெறித்துக்கொண்டிருக்கின்றன
நீதிமன்றின் சுவர்களெங்கும்…..!

பல்லிகள் அந்தப் பரல்களைப்
பொறுக்கிக்கொண்டு
ஓடுகின்றன…
ஓடிச்சென்று
கூரையின் இடுக்குகளில்
ஒழித்துவிட்டு
கிலுக்கி எறிகின்றன
வேறு பரல்களை…

அவற்றை ஏந்துவதற்கென்றே
வந்து சேர்கின்றன
இன்னும் சில…

கோவலன் கொலையுண்ட
செய்தியைக் காட்டிலும்
அதிர்ச்சியைத் தந்திடும்
சபையில்,
அவள் மானம் குறித்த கேள்விகள்…
அவள்மேல்,
ஒன்றொன்றாய்
விழும் கற்கள்…

முடிவில்
ஊரைக் கொழுத்தியும்
பயனிலை எனக்கண்டு,

பல்லிகளின்
நஞ்சுண்டிறந்தாள் கண்ணகி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *