உயிர்த்தலைப் பாடுவேன்!

லறீனா அப்துல் ஹக்-

(18.02.2012 திருமதி பத்மா சோமகாந்தனால் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த “அமரர் நா. சோமகாந்தனின் அழியாச் சுவடுகளின் நினைவுப் பரவல்” நிகழ்வில், தமிழகக் கவிஞர் திலகபாமாவின் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை )

lareena

கிளைகளுக்கு நீரூற்றிக்கொண்டே

வேர்களை வெட்டியெறியும்

ஒரு தோட்டக்காரன்!

 

மனச் சருகு மிதிபடும் சத்தம்

இரும்புச் சப்பாத்துக்களின்

செவிகளை எட்டவேயில்லை!கெல்லிக் கெல்லி – என்

கணுக்களைச் சிதைக்கிறாய் – மீள

உயிர்த்தலைத் தவிர்த்திடும்

நஞ்சினைப் புதைக்கிறாய்!

 

கொத்திக் குதறும் – உன்

மண்வெட்டிக் கைப்பிடிக்கு

எந்தன் முதுகெலும்பையே

இரவலாய்க் கேட்கிறாய்!

 

காதலின் கருணையின்

காணிக்கை என்று சொல்லி – என்

நாளையை, வாழ்தலை

கனவுகளைப் பறிக்கிறாய், நீ !

 

சுவர்களை, மதில்களை

உயரமாய் எழுப்பியோர்

இருள்வெளிக் குகையுளெந்தன்

இருப்பினை வரையறுத்தாய்!

 

ஆதிக்கம், அதிகாரம்

உன்வசமே கொண்டாய் – மனித

நீதிக்கும் விலங்கிட்டாய்

நாடியதை நீ செய்தாய்!

 

என் வலியில் என் தவிப்பில்

என் இழப்பில் எல்லாம்

வெற்றிவாகை சூடியதாய்

பெருமிதங்கள் கொண்டாய்!

 

அன்புக்கும் அருளுக்கும்

உன்பெயரே என்றாய் – எனை

அழிப்பதிலும் ஒழிப்பதிலும்

அயர்விலாது நின்றாய்.

 

அன்புக்கும் அகிம்சைக்கும்

உன்பெயரே என்றாய் – எனை

அழிப்பதிலும் ஒழிப்பதிலும்

அயர்விலாது நின்றாய்.

 

 

அடையாளம் எதுவுமற்ற

அகதியென்று சொன்னாய்

இனி சூரியனே ஒளிர்தலற்ற

வானமெனக் கென்றாய்!

 

மொழியற்ற உயிரி என – என்

மௌனத்தை மொழிபெயர்த்தாய்!

எனக்கென ஓர்

வரலாறே இல்லையென்று

வதந்திகளும் பரப்பினாய், நீ!

 

வார்த்தைகளால் வஞ்சனையால்

வீழ்த்துகின்ற போரில் – என்

வாழ்வுதனைக் காவுகொள்ளும்

வீண்கனவில் ஆழ்ந்தாய்!

 

(கெல்லிக் கெல்லி – என்

கணுக்களைச் சிதைக்கிறாய் – மீள

உயிர்த்தலைத் தவிர்த்திடும்

நஞ்சினைப் புதைக்கிறாய்!

 

கொத்திக் குதறும் – உன்

மண்வெட்டிக் கைப்பிடிக்கு

எந்தன் முதுகெலும்பையே

இரவலாய்க் கேட்கிறாய்!

 

காதலின் கருணையின்

காணிக்கை என்று சொல்லி – என்

நாளையை, வாழ்தலை

கனவுகளைப் பறிக்கிறாய், நீ !)

 

ஆனாலும்…

அறிக என் தோழனே!

 

வெட்டியும் கொத்தியும்

ஒட்டவே நறுக்கினாலும்

மிதித்தாலும் நசித்தாலும்

மரணத்தை விதித்தாலும்

புதையுண்டு போதலில்லை – ஆல்

விதையென்று ஊன்றி வீழ்வேன்!

சிதைவுறுதல் சிறிதுமின்றி

என் ஆன்மாவைக் காப்பேன், நான்!

 

நசுங்குண்ட சருகையெல்லாம்

உரமென்று ஏற்பேன் – நான்

நஞ்சுண்டும் மாளமாட்டேன்

நிமிர்ந்தெழுந்து உயிர்ப்பேன்!

 

கிளைபரப்பி இலையடர்த்து

சிலிர்த்து நான் நிமிர்வேன் – கீழே

வீழ்ந்தரற்றி நீ அழுதால் எழ

விழுதுனக்கும் தருவேன்!

 

அட! உள்ளார்ந்து கனன்று எழும் – என்

உயிர்த்தீயின் முன்னே – உன்

கயமைகள் நீர்த்தழியும் – நான்

காலத்தை வெல்வேன்!

 

கிளைபரப்பி இலையடர்த்து

சிலிர்த்து நான் நிமிர்வேன் – கீழே

வீழ்ந்தரற்றி நீ அழுதால் எழ

விழுதுனக்கும் தருவேன்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *