“பெண்”

சோலையூராள் (இலங்கை)

அன்பை தந்து ஆசி பல வாங்கி
ஆசையுடன் ஆதரவளித்தவளை
அநியாயக் காரனான நீ
ஆட்டிப் படைத்தாய்

இச்சை வார்த்தைகளால் கொச்சைப் படுத்தி
ஈவிரக்கம் அற்று எள்ளி நகையாடினாய்
உதிரம் கொட்ட அடித்து
ஊரான் மனைவி என வசனமழை பேசினாய்

எதையும் எதிர்பாராது
ஏணியாய் இருந்தவளை
எட்டி உதைத்தாய்
ஏனென்று யாரும் கேட்கவில்லை

அவள் இன்றி அணுவும் அசையாது
அதை நினைக்க நீ மறந்து விட்டாய்
அஸ்தமிக்க போகிறது உன் வாழ்க்கை

குட்ட குட்ட குனிவாள் என நீ நினைத்தால்
அது உன் மடமை – அவளே இன்று
கோபுரமாய் உயர்ந்து விட்டாள் – ஏனெனில்
அவள் பெண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *