புகலிட பெண்கள் சந்திப்பின் 17 வது தொடர் ஜேர்மனியிலுள்ள Stuttgart நகரில் 12.12.98 அன்று நடைபெற்றது – றஞ்சி (சுவிஸ்)

புகலிட பெண்கள் சந்திப்பின் 17 வது தொடர் ஜேர்மனியிலுள்ள ளுவரவவபயசவ நகரில் 12.12.98 அன்று நடைபெற்றது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ் போன்ற நாடுகளிலிருந்து பல பெண்கள் கலந்து கொண்டார்கள். இச் சந்திப்பில் பல நிகழ்ச்சிகள் எடுக்கப்பட்டிருந்த போதும் எக்ஸிலில் வெளிவந்த சுகனின் மதிப்பு மறுப்பறிக்கையும் அம்மாவில் வெளிவந்த நா.கண்ணனின் கதையான நெஞ்சு நிறைய என்ற கதைகள் முக்கியமாக விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. விவாதம் காரசாரமாக இருந்த போதிலும் கலந்து கொண்ட பெண்கள் மிகவும் பயன்தரக் கூடிய கருத்துக்களையும் உணர்வு பூர்வமாகவும் இக்கதைகளில் கதாசிரியர்கள் எப்படி பெண்களின் மீது தங்களது ஆண்தனத்தை வெளிப்படுத்தியமை பற்றியும் விவாதித்தார்கள். கருத்துக்களில் முரண்பாடுகள் இருந்தாலும் எல்லோரின் கருத்தும் இக்கதைகளில் புகுத்தப்பட்டிருக்கும் ஆணாதிக்க கருத்தியல்களையே மையமாக வைத்து விவாதிக்கப்பட்டது.

எக்ஸிலுக்கு

12.12.98இல் நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் என்னால் சுகனின் கதைக்காக வைக்கப்பட்ட விமர்சனத்தை எக்ஸிலில் பிரசுரிப்பதற்காக.

மதிப்பு மறுப்பறிக்கை இது புகலிடத்தில் வாழும் ஆண்களின் தனிமையை சித்தரிக்கும் கதையாக இருந்தாலும் பெண்களின் கூட்டுக்கலவி பற்றியும், பெண்களின் உடலுறுப்புக்கள் பற்றியும் இக்கதை கூறுகிறது. இங்கு கதையில் கையாளப்படும் மொழி சொற்றொடர்கள் போன்றவைகளை பலரால் சகித்துக் கொள்ள முடியாவிட்டாலும் அதை பாவிப்பதில் தவறு எதுவும் இல்லை என்றே கூறலாம். பெண்களின் பாலுறுப்புக்களான மார்பகங்கள், முலை, யோனி போன்றவைகள் மர்மமாக்கப்பட்டதும் அவைகளை எமது சமுதாயம் பேசப்படாத பொருளாகவும் தூசண வார்த்தைகளாகவும் புனிதமாகக் கட்டிக் காத்ததின் காரணமாகவே இன்று இவ் சொற்றொடர்களை பாவிக்கும் போது பலரால் அவற்றை சகிக்க முடிவதில்லை.

உதாரணத்திற்கு சரிநிகரில் கலா எழுதிய கவிதையான கோணேஸ்வரிகள் கவிதையை எடுத்துக் கொண்டாலும் பெண்களின் உறுப்புக்களை வைத்து கலா கையாண்ட மொழியினால் பெண்களாலேயே சகிக்க முடியாத அளவுக்கு விமர்சனத்திற்குள்ளாகியது. சுகனின் கதையிலும்; கையாளப்பட்ட சொற்றொடர்கள் ஆண், பெண் உறுப்புக்கள் பற்றி வெளிப்படையாகவே கையாளும் அதே நேரத்தில் பெண்ணை ஒரு போகப்பொருளாகவும்; ||பெண்கள் எல்லோருக்கும் கூட்டுக்கலவிக்கு விருப்பம் தான்||;…….. என்றாலும் பெண்களை கூட்டுக்கலவி சூழ்நிலைக்கு கொண்டுவருவதற்குள் உயிர் போய்விடும் என்று வர்ணிக்கும் சுகன் தன்னுடைய ஆண் தரத்தில் நின்றும் ஒருவகை வக்கிரம் தோய்ந்ததாகவும் அத்துடன் பாலியல் என்ற மனித உணர்வை மதிக்காமல் சிதைத்துப் போகக் கூடிய தன்மையையும் பாதிக்கப்படுகின்ற பெண்ணைப்பற்றி புரிந்து கொள்ளாமல் தனது ஆண்தனத்தை கதையில் சித்தரிக்கும் சுகன் இவற்றை கவனிக்கத் தவறுகின்றார்.

1.ஆண்-பெண் உறவை எப்பொழுதும் எவ்வித உணர்வுகளுக்கிடமின்றி ஒரு வன்முறை தோய்ந்த உறவாக பார்க்கும் பார்வை

2.ஆண்-பெண் உறவை ஆண் ஆதிக்கம் செலுத்துகின்ற உறவாகவும் பெண் அதனை விரும்பி ஏற்றுக் கொள்கின்ற உறவாகவுமே பார்க்கின்ற பார்வை.

3.பெண்களை ஒரு மனித ஜீவிகளாக பார்க்காமல் பெண் உடலை கூறு போட்டு பார்க்கும் பார்வை

  1. ஆண்களின் சுய வெறியையும் ஆதிக்கவுணர்வையும் வெளிப்படுத்துவதற்கான களமாகப் பெண்ணை காட்ட முனையும் பார்வை.

இவைகளே இக்கதையை வாசிக்கும் போது எனது அறிவுக்கு புலனாகிறது. அடுத்து கதையில் பாலுறவுக்கு -தமிழ் பெண் உட்பட- ஆசியப் பெண்களைவிட ஆப்பிரிக்க பெண்கள், அராபியப் பெண்கள், மெக்ஸிக்கோ பெண்கள் பிரெஞ்சுப் பெண்கள் சளைக்காதவர்கள் என்று வேறுபடுத்திக் காட்டுறார் சுகன். (இன்னொரு இடத்தில் பெண்கள் எல்லோருக்கும் கூட்டுக்கலவிக்கு விருப்பம் தான் என்கிறார்) பாலியல் நடவடிக்கை மனித உயிரியின் தேர்வு என்பதை மறந்து அல்லது மறுத்து பெண்ணினத்தின் பாலியல் வேட்கையை (பிராந்திய ரீதியிலும்கூட) பொதுமைப்படுத்துகிறார். இது பெண்ணை போகப் பொருளாக்கும் ஆணாதிக்க வக்கிரத்தை இங்கு வெளிக் காட்டுகிறது. விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்களின் மொழியை இழிசொல்லாக வரித்துக் காட்டிய ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும், அவர்களின் -நாகரிகமான வார்த்தைகள் என்று வரையறுக்கப்பட்ட- மொழிக்கெதிராகவும் கலகம் செய்வதாகக் கூறும் இவர்கள், ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்படும் பெண்ணினத்தின் மொழியை கலகமாக வைப்பதற்குப் பதில் ஆணாதிக்க வக்கிரங்களை வெளிப்படையாக வைப்பது பெரிய முரணாகவே உள்ளது. அவர்கள் அறியாமலோ அல்லது அறிந்தோ ஆண் மனோநிலை வெளிப்படுவதே இதற்குக் காரணம்.

எல்லா சமூகத்திலும் ஆண்-பெண் உறவினை ஆணாதிக்கம் வடிவமைப்பது பெண்ணை அடிமைப்படுத்தும் செயல் தான். இப்பாலுறவு முறைகளை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு தமது ஆளுமையை உறுதிப்படுத்தவும் பயன்படுத்தவும் ஆண்கள் தயங்கவே மாட்டார்கள். பாலுறவை காரணங்காட்டி பெண்ணின் உடலை கூறுபடுத்தி போகப் பொருளாக பாவித்து வரும் இந்த ஆணாதிக்க சமூதாயத்தினர் பெண்ணடிமைத்தனத்தின் வரலாற்றிலிருந்து விலகிநின்று சமூகத்திற்கு பொருந்திப் போகாத சில மேற்கத்தியச் சிந்தனைகளையும், புதிய மொழியாள்கையையும் கையாளும் முற்போக்கு பெண்ணியம் பேசும் ஆண் எழுத்தாளர்கள், ஆணாதிக்கவாதிகள் தங்களது நிலைப்பாட்டில் இருக்க கூடிய பெண்ணடிமைத்தனத்தையும், பாலியல் வக்கிரங்களையும் காணத் தவறுகின்றனர், காண மறுக்கின்றனர். ஏகாதிபத்தியங்களும் தொடர்புச் சாதனங்களும் பெண்ணை செக்ஸ் பொருளாகவும் அத்துடன் பெண்களின் உடற் உறுப்புக்களை கூறுபோட்டு விளம்பரப்படுத்தியும் நிர்வாணமாக்குவதையும் இந்த இடத்தில் -பொருத்தம் கருதி- நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

முற்போக்குப் பேசும் ஆண்களும்கூட தங்களது வரலாற்று ரீதியிலான பாலியல் இச்சைகளுக்கு புதிய தத்துவ நியாயங்களை நிறுவத் தொடங்கியுள்ளனர் என்ற சந்தேகம் எழவே செய்கிறது. இவர்கள் முற்போக்குக் கருத்துக்கள், புதிய மொழிக் கையாள்கை என்ற முகங்களுடன் வருவதில் நாம் எச்சரிக்கை கொள்ளாமல் இருக்க முடியாது.

றஞ்சி (சுவிஸ்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *