“ஒரு சமுதாயம் தன்னைத் தானே சுதாகரித்துக் கொண்டு, தன் நிறைவையும், குறைவையும் உணர்ந்து கொண்டு வாழ்க்கையிலும்அந்தஸ்திலும் உயர்வதற்கு தனது இன்றைய நிலையையும் கடந்த காலத்தின் வரலாறையும் ஆழமாக அறிந்திருப்பது அவசியமாகும். நமதுபூர்வீக சரித்திரத்தை நன்கு தெரிந்து கொண்டால்தான், எதிர்காலத்தில் நாம் எப்படித் திட்டமிட்டு முன்னேறலாம் என்பதை நிர்ணயிக்க முடியும்
“.-இலங்கை அமைச்சர் தொண்டைமான், இன்றைய மலையகம்கட்டுரைத்தொகுப்பின் முகவுரையில். ” லயத்தான் என்றால் என்ன? அவன்மனிதனில்லையா? அவர்களுக்கென்று ஆசாபாசங்கள் இல்லையா? குடும்பம் பிள்ளை என்று அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறதுதானே? “இந்தத் தொகுப்பினை வாசிக்கும் ஒவ்வொருவரின் மனசாட்சியை நோக்கி எழுப்படும் கேள்விகள் இவை. -வாக்குறுதிகள், தியத்தாலவ எச். எப். ரிஸ்வா. லயத்தான் என்று குறிப்பிடப்படும் மலையக மக்களின் வாழ்க்கையை பேசும் இந்தத் தொகுப்பை கொண்டு வந்திருக்கும் ஊடறு றஞ்சி பதிப்புரையில் “மலையக மக்கள் தங்களது உடல் வலிமையால் கடினஉழைப்பை வழங்குவதையும், மோசமான சுரண்டல் முறையால் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில்சிக்கித்தவிப்பதையும் இதனால் குடும்பம் என்று அடிப்படையில் பாரிய சவால்களை எதிர்கொள்வதையும் இளம் சந்ததியின் கல்விக்கான தடைக்கற்களாகி அவை குறுக்கே நிற்பதையும் அதையும்மீறி அவர்கள் கல்வியில் அடையும் முன்னேற்றங்களையும் மலையகப் பெண் எழுத்துகள் எடுத்து இயம்புகின்றன” என்கிறார்.
இதழ்களில், தொகுப்புகளில் என்று சிதறிக் கிடந்தஇந்தக் கதைகளை சேகரித்து, பெண்படைப்பாளிகளின் ஆக்கங்களை, செயல்பாடுகளை ஆவணப்படுத்துதலை தன் நோக்கங்களுள் ஒன்றாக கொண்டிருக்கும் ஊடறு, மலையகப் பெண் படைப்புகளை ஆவணப்படுத்தும் முயற்சியாக 23 பெண் எழுத்தாளர்களின் 42 சிறுகதைகள் அடங்கிய இந்நூலை வெளியிட்டுள்ளது. இலங்கை என்றதும் மனதில் எழும் முதல் நினைவு பால்யத்தில் என்னோடு ஒன்றியிருந்த வானொலி வழியாக கேட்டு மகிழ்ந்த இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் வர்த்தக சேவை2ன் நிகழ்ச்சிகள், அவற்றை தொகுத்துவழங்கிய அற்புதமான அறிவிப்பாளர்கள்.
பிறகு அங்கு சூழ்ந்த போர்மேகம், அதன் விளைவுகள். ‘இந்து சமுத்திரத்தின் முத்து’என்று சொல்லப்பட்ட அந்த மரகதத்தீவின் முகம் மாறி ‘தமிழகத்தின் கண்ணீர்த்துளி’யாக மனதில் பதிந்து விட்டது. நான் வாசித்தகுறைந்த அளவிலான ஈழப் படைப்புகளும் அதையே பேசின. இந்தத் தொகுப்பில் போர் விளைவித்ததாக்கம் குறித்து அதிகமாக ஏதுமில்லை என்பது எனக்கு ஆச்சரியம் அளித்தது. விதி வரைந்த பாதை, நினைவில் நீங்காதவள் என இரண்டு கதைகள் நீங்கலாக. ஒவ்வொரு நாளும் தேநீர்க் கோப்பையுடன் தொடங்கும் என் நாள். ஆனால் அதன் விளைவிடச் சூழல், அதை விளைவிப்பவர்கள் குறித்து என்ஞானம் பூஜ்யம்.மலையகம், மலையகமக்கள், அவர்கள் வாழ்வியல் சூழல் எதுவும் தெரியாமலே இந்தத் தொகுப்பை வாசிக்கத் தொடங்கினேன்.
மலையக மக்கள் என்று சுட்டப்படும் இவர்களின் பூர்வீகம், இலங்கைக்குஇவர்கள் சென்ற காரணம், அங்கு குடியமர்த்தப்பட்டதன் நோக்கம், மலையகத் தமிழர் என்று அடையாளப்படுத்த வேண்டியதன் அரசியல் முக்கியத்துவம், அந்த அடையாளத்தைபரவலாக்கியதிலும், அதற்கு விரிந்தஅங்கீகாரத்தை பெற்றுத்தந்ததிலும் இலக்கியத்தின் பங்களிப்பு, இலங்கையில் அரும்பிய பெண் விடுதலை சிந்தனைகள், அதற்கு பங்களித்தவர்கள் என விரிவான முகவுரை ஒன்றை 11 பக்கங்களில்எம். எம். ஜெயசீலன், தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம். வழங்கியுள்ளார். இந்த முகவுரை கதைகளை உள்வாங்கிட ஒரளவு உதவின.என்றாலும் முழுமையாக உணர இயலவில்லை.
ஏறத்தாழ எல்லா கதைகளிலும் இடம்பெறும் மரணங்கள்… கொலை, தற்கொலை, விபத்து, மருத்துவ வசதி இன்மை, இயற்கை சீற்றம், இனக் கலவரம் இவற்றின் காரணமாக தாயோ, தகப்பனோ அல்லது இருவருமே இல்லாத குழந்தைகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குமுதுகெலும்பாக உள்ள அன்னியச் செலவாணியை அதிகம் ஈட்டித்தரும் தேயிலைத் தொழிலில் இருந்தும் இம்மக்களின் அதீத வறுமை, படிக்க விரும்பும் பிள்ளைகள், ஆனால் அதற்குவரும் தடைகள், இயற்கை எழில் கொஞ்சும் மலையகத்தில் சுகாதாரமற்ற லயன் காம்ராக்கள் இவை ஏதேதோ கேள்விளை எனக்குள் எழுப்பின.
இணையத்தில் மலையகம்குறித்து தேடினபோது ‘இன்றைய மலையகம்’ நூல் கிடைத்தது. அது பெருமளவில் உதவியது. குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு அதன் விளைவுகளால் ஏற்பட்ட பின்னடைவு, குறைந்த கூலி, சூரிய ஒளி புகமுடியாத புழங்கிட போதிய இடமற்ற சிறிய பழைய லயன் வீடுகள், குழந்தைகள் உயர்கல்வி பெற வாய்ப்பற்ற சூழல்,சத்தற்ற உணவு, மலையேறி இறங்குவதால் கர்ப்பப்பைதொடர்பான பிரச்சினைகள், பிரசவகால உயிரிழப்பு போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. அமைப்பு சாரா தொழிலாளியாக, மின்பொருள் அங்காடியில் விற்பனையாளராக பணி வாழ்க்கையைத் தொடங்கிய எனக்குமுதல் கதையான ‘தீபாவளி அட்வான்ஸ் “தீபாவளிக்கு முந்தைய நாள் வரை காத்திருந்து நான் வாங்கிய போனசைநினைவூட்டியது. தாங்கள் படும் கஷ்டம் பிள்ளைகள் படக்கூடாதென போராடும் பெற்றோர்கள்.
பெரும்பாலானோர் அதில் தோல்வியடைந்து பெற்றோரின்அதேவேலையை பிள்ளைகளும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.. படிப்பில் முதலிடத்தில் வரும் தங்கராசு, ‘அட தோட்டப் பொடியனுக்கு இவ்வளவு திறமையா, அதுவும் தன் வீட்டு வேலைக்காரி மகனுக்கு “தன் மகன் மேற்படிப்பு படிக்க உதவுவார் எனத் தான் நம்பியஎஜமானியின் மனவோட்டம் தங்கராசுவின் படிப்புக்கு முற்றுப்புள்ளிவைத்து விடுகிறது. படித்து மேல்நிலைக்கு வருபவர்கள் அந்த மண்ணை புறக்கணித்து தன்னலமானவர்களாக மாறிவிடுவதையும்(தோட்டத்து மண்) மழையோ வெயிலோ அன்றன்றைக்குகஷ்டப்பட்டால்தான் வீட்டில் அடுப்பெரியும் என்கிற நிலை தங்களுக்கு எதிரான, நியாயமான தேவைக்கு கூட போராட முடியாத, போராட முனைந்தாலும் அதிலிருந்து பின் வாங்க வேண்டிய நிலை.. மருத்துவ வசதிக்காக போராடுபவர்கள்நிர்வாகத்தின் கண்டு கொள்ளாமைக்கு பணிந்து, “அவன் விதி அவ்வளவுதான். பாம்பு கடிச்சு சாகணும்னு அவன் தலையெழுத்து”நாம இப்படி உக்காந்திருந்தா செத்துப்போன வடிவேலு மாமா வந்திடுவாரா”போனவன் போயிட்டான்.
அவந் திரும்பி வரவா போகிறான்”நியாயம் கற்பித்துக் கொள்கிறார்கள்.ஒருசிலர் தவிர ஆண்கள் எல்லோரும் குடிகாரர்களாக, குடும்ப பொறுப்பற்றவர்களாக இருக்க பெண்கள் சுமப்பவர்களாக இருக்கிறார்கள். படிப்பின் முக்கியத்துவம் உணர்ந்தவர்களாகஇருக்கிறார்கள். “நான் நாலு பொஸ்தகம் படிச்சிருந்தனென்டா இப்படி அடியும் உதையும் வாங்கியேஅடங்கிப்போயிருக்க மாட்டேன் என்றுசொல்லும் செலயம்மா மகளை வக்கீலுக்கு படிக்க வைக்க விரும்புகிறாள். கதைகளில் வரும் பெண்கள் அன்றாடப் பாடுகளில் கரைந்து போக ,மங்களா தேவி,ராசம்மா, அங்கம்மா,பொன்னாத்தா,செலயம்மாபோன்ற சிலர் தவறென்று படுகையில் எதிர்ப்புக்குரல் எழுப்புகிறார்கள். இந்தக் கதைகளில் வரும் சிறுவர்கள்மனதில் நிற்கிறார்கள்.பாக்குமட்டை சவாரி செய்யும் ராஜன்,சுல்தான்,காந்தி(பாக்கு பட்டை),இலவச உடுப்புக்காக ஆவலுடன் காத்திருக்கும் ராமு, அதை வேறு ஒருவருக்கு விற்றுவிடும் அவன் அப்பா(சாபக்கேடு)படிக்க ஆசைப்பட்டு உண்டியலில் காசு சேர்க்கும் ‘நெத்திக்காசு’குமரேசு, ‘அப்பாவுக்கு கல்யாணம் ‘பரமு, ‘காயாம்பூவும் வாழை மரமும்’ காயாம்பூ.. வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்ற எளிய ஆசைகூட நிறைவேறாத வறுமை.இந்தக் கதை அறிஞர் அண்ணாவின் செவ்வாழை கதையைநினைவுபடுத்துகிறது.
அதுபோல பிரஜாவுரிமை சட்டச் சிக்கல்களால் பிறந்தநாட்டை, அங்கிருக்கும் உறவுகளை ஒருமுறை பார்த்து விட்டுசாக வேண்டும் என்று ஆசைப்பட்டு அது நிறைவேறாமலே சாகும் பொன்னம்மா (முடியாத கதைகள் பல) புதுமைப்பித்தனின் செல்லம்மாவை நினைவூட்டுகிறது.காசு உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே காட்டப்படும் பாரபட்சம்-(வாழ்க்கைச் சுவடுகள், ஒரு கந்தூரி நடந்து போகிறது. ) சஞ்சும்மா, பக்கி கதைகள் இந்தத் தொகுப்பின் மற்ற கதைகளுடன் ஒட்டாமல் தனித்து தெரிகின்றன. சில பதங்களுக்கு பொருள் விளங்கவில்லை. போஞ்சி, கதிரை, குசினி, கறுப்பு பட்டி, களுசான்… சில அருமையான தமிழ்ச் சொற்கள்இயக்கி-ரிமோட், ஈட்டுக்கடை-அடகுகடை, வைத்தியசாலை-மருத்துவமனை, காசுமுட்டி-உண்டியல்… ஆங்காங்கே எழுத்துப்பிழைகள் தட்டுப்படுகின்றன. கிழவியின் ஆசை கதையில் மகன் பெயர்க் குழப்பம்.
இரண்டாம் பராவில் மூன்றாவது மகன் தம்பா என்றிருப்பது, நான்காவது பாராவில் மூத்த மகன் பரமு என்றுள்ளது. தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான கதைகள் தீபாவளி அட்வான்ஸ், சட்டி சுட்டுவிடும், நெத்திக்காசு, கிழவியின் ஆசை, காயாம்பூவும் வாழை மரமும், வேண்டும்ஒரு பதில், வாழ்க்கைச்சுவடுகள், ஒருகந்தூரி நடந்து போகிறது, உழைக்கப்பிறந்தவள், சாபக்கேடு, முடியாத கதைகள் பல,ஆத்தா. மலையகத்தின் பிரதான உழைப்பு சக்தியாக விளங்கும் பெண்களின் பாடுகளை பேசும் இந்த மலயகப் பெண்களின் கதைகளை மலையகம்தன் 200வது ஆண்டினைத் தொடும்வேளையில் ஊடறு வெளியிட்டிருப்பதுபாராட்டுக்குரியது. வாழ்த்துகள் றஞ்சி.