தென்றலின் தவம் –

 தி .வினோதினி
உன்வீட்டுச் சாளரங்களையும் 
கதவுகளையும் 
இறுகத் தாழிட்டுக்கொள் 
நான் தவம் இருத்தலையே 
விரும்புகின்றேன் 
அனற் பொழுதுகளைக் 
கடப்பதற்காக 
தென்றலை வசியம் செய்யும் 
உன் தந்திரத்தில் 
ஒருவேளை என் தவம் 
கலையக்கூடும் 
உன் தந்திரத்தின் 
ஒரு பகுதியில் 
என் தவத்தைக் குலைக்கும் 
மேனகையாய் நீ 
வந்து போகக்கூடும் 
அப்போது உன் அழகின் மருட்சியில் 
திசைமாறி வீசி 
உன் வீட்டின் சாளரங்களை 
நான் தொடக்கூடும் 

பசுஞ்சோலைகளை 
துவம்சம் செய்துவிட்டு 
பாலைவனத் தென்றலுக்காய் 
ஏங்கும் உன் அறியாமை மீது 
நான் இரக்கம் கொள்ளக்கூடும்
தவம்கலைந்து 
வாடை குளிர்ந்து 
இளகிய தென்றலாய் 
இறங்கும் தூறலில் 
உன்னைச் சூழ்ந்திருக்கும் 
தூசுப் புயல்கள் 
கரைந்து போகக்கூடும் 
இருப்பினும் 
நீ பசுஞ்சோலைகளை  
துவம்சம் செய்கையில் 
விடைபெற்ற தென்றல் 
தவமிருத்தலையே விரும்புகிறது 
தவத்தைக் குலைத்தல் 
கொடுமை 
தவத்தைக் குலைத்தல் 
சுயநலம்
தவத்தைக் குலைத்தல் 
உன் இயலாமை 
அனல் தகிக்கும் 
பாலைவன மணல்மேட்டில் 
நீயும் தவமிருக்கக் கற்றுக்கொள்  
அப்போது 
தவமிருத்தலின் பல பக்கங்கள் 
உனக்குப் புரியத்தொடங்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *