சாம்பரிற் பூத்தவள்

ஆதிலட்சுமி

என்னை முற்றிலுமாக எரித்துவிட்டதாக
கனவு கண்டவர்களே….
நினைவிருக்கிறதா உங்களுக்கு
என்னின் எதுவும் மிஞ்சவில்லை என
உறுதிப்படுத்திய பின்
எதுவும் நடக்கவில்லயெனத்தானே
அறிக்கையிட்டீர்கள்!
வாழ்வதற்கு என்னிடம் இனி
எதுவுமில்லை என்றுதானே
கற்பனை செய்தீர்கள்…
இன்று….
எரித்த சாம்பரினின்றும் நான்
எழுந்து வந்துள்ளேன்…
ஒளியற்ற கூட்டிற்குள் என்னை
அடைத்து வைத்தபோது
எனக்குள்ளே ஒரு சூரியன் இருந்தது
உங்களுக்கு தெரியவில்லை.
விமானமொன்றின் கறுப்புபெட்டிபோல்
என் கனவுகள் கருக்கமுடியாதவை.
உடைமைகள் எல்லாவற்றையும்
இழந்துபோனாலும் என்
உரிமைகளை ஒருபோதும்
இழக்கவிரும்பாதவள் நான்…
என் தேசத்தை உங்களிடம்
தாரைவார்க்கவும் தயாரற்றவள்.
கனன்றெரியும் என் கனவுத்தீயை
அணைத்துவிடலாம் என
கனவு காணாதீர்கள்.
நெருப்புக்கடலில் திரண்ட
அமுதத் துளி நான்.

ஒருபோதும் உங்கள் அமிலங்களில்
அழிந்துபோகமாட்டேன்
என்தேசத்துக்காய் பலியிடப்பட்ட
அத்தனை உயிர்களின் மீதும்
அடித்துச் சொல்கிறேன்.
எத்தனைமுறையும் என்னை
கொல்லுங்கள்! எரியுங்கள்!!
கதிரோனின் கதிர்களில் ஒன்றாய்
உங்கள்முன் எழுந்துநிற்பேன்.
———-
27.06.2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *