முதலாவது இரத்தப் போக்கு (மாதவிடாய்)

கமலா வாசுகியுடன் செ.சுமித்ரா, மட்டக்களப்பு (‘தாய்வீடு’ (கனடா) மார்ச் 2016 )

மாதவிடாய் என்ற சொல் எப்படி உருவாகியது? என்ன விடாய் அது??? இதை உருவாக்கியவர்களது மாதவிடாய் பற்றிய புரிதல் என்ன???? அன்றிலிருந்து இன்று வரை மாதவிடாய் பற்றிய தமிழ்ச்சமூகத்தி;ன் விளக்கம் என்ன?ஒவ்வொரு மாதவிடாய்க் காலத்திலும் பெண்களுக்கு என்ன நடக்கின்றது, அவர்கள் என்ன உணர்கின்றார்கள் என்பதைப்பற்றிய சமூக விளக்கம் என்ன?

1stMENSTRUATION3

மூன்று நாட்களோ, அதற்கு கூடுதலான நாட்களோ உடலின் ஒரு பகுதியிலிருந்து சூடான குருதி வெளியேறிக் கொண்டிருக்கும்;. அதனை “மறந்து” அத்தனை நாளாந்தக் கடமைகளையும்; இன்னோரன்ன பல காரியங்களையும் செய்து கொண்டிருக்கும் பெண்களது அந்த நாட்;களைப்பற்றியும் அதன் சிரமங்களைப் பற்றியும் பெண்களே பேசுவதில்லை. பேசாத பேசக்கூடாத ஒரு விடயமாகவும்,ஒளித்து மறைத்து வைக்கப்படும் தீட்டாகவும், பெண்களது தனிப்பட்ட ஒருபிரச்சினையாகவும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு விடயமாகவுமே மாதவிடாய் நடாத்தப்படுகின்றது.  பெண்களது உடலியல் -உயிரியல் சார்ந்த விடயமான மாதவிடாய்க்கு (வேறு மரியாதையான தமிழ் சொல் என்னால் கண்டுபிடிக்க முடியாததால் அனைவருக்குமு; பரிச்சயமான இந்தச் சொல்லையே பாவிக்கின்றேன்) வழங்கப்படும் சமூக பொருளாதார, அரசியல், பரிமாணங்கள் மதிப்பீடுகள் இன்று பெரும்பாலும் எதிர்மறையானவையாகவே இருக்கின்றன. மாதவிடாயைப் பேசாது விடல், தேசிய அபிவிருத்திப் பொருளாதாரக் கொள்கைகள் திட்டங்களில் கணக்கிடப்படாது விடல், மாதவிடாயைத் தீட்டாக்குவதன் மூலம் அதனைக் கொண்டிருக்கும் பெண்களை தீட்டாக்குவதும் பாரபட்சப்படுத்துவதுமான மத, இன, கலாசார அரசியல்கள், பெண்களின் மாதவிடாய்க்கு உதவுவதாகக் கூறிமாதவிடாய்த்துண்டுகளை (ளயnவையசல Nயிமiளெ) விற்பதன் மூலம் பணம் குவிக்கும் பொருளாதார அரசியல் என பெண்களது உடல்நலன்சார் இவ்விடயத்தை பலரும் தமக்கான விடயமாக்கிக் கொண்டிருக்கன்றனர்.

இவற்றுக்கெல்லாம் ஆதரவாக எமது தமிழ்ச்சமூகமும் தமது மகள்மாரின் முதலாவது மாதவிடாயை அதாவது முதலாவது இரத்தப் போக்கைப்பற்றிய சரியான புரிதல்கள் இன்றி ஏதோவொரு காலங்கடந்த கலாசாரச் சடங்கின் நினைவிற்கு இயலுமானவரை மத, ஊடக நவீன சாயங்கள் பூசிச் செலவழித்துக் கொண்டிருக்கின்றார்கள். சாமத்தியச் சடங்கு, சாமத்தியக் கலியாணம் என்ற பெயரில் கொண்டாடப்படும் முதலாவது மாதவிடாயைப்பற்றித்தான் இங்கு குறிப்பிடுகின்றோம்.
முதலாவது இரத்தப் போக்கை சடங்காக்குவதில் முதன்மைப்படுத்திக் கூறப்படும் காரணம் பெண்ணின் இரத்தப்போக்கு தீட்டென்பதும், இதனைத் தூய்மைப்படுத்த துடக்குக் கழிக்க வேண்டும் என்பதுவும் ஆகும். எது தீட்டு? மாதவிடாய் இரத்தம் தீட்டென்றால் அதனுடன் வெளிவந்த மனிதர்கள் அனைவருமே தீட்டில்லையா? எங்களது சமூகங்களைத் தவிர இந்த உலகில் வேறு மனிதர்கள் இல்லையா? மாதவிடாய் இரத்தத்தையும் அதனுடன் வெளிவந்த மனிதர்களையும்; தீட்டென்று கருதாத சமூகங்கள் இந்த உலகில் எத்தனை இருக்கின்றன. துடக்கு கழிக்கப்படாமல் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரம் கோடி பெண்கள் இவ்வுலகில் வாழவில்லையா, திருமணம் செய்யவில்லையா, குழந்லையா தைகள் பெறவில்? அவர்களால் ஆரோக்கியமான சமூகங்கள் உருவாக்கப்படவில்லையா?பலநாடுகளுக்கும் போய் பலதரப்பட்ட மனிதர்களுடன் வாழக்கிடைத்த பின்னரும் வெளிநாடுகளில் வாழும் எமது புலம்பெயர் சமூகத்தவர்களும் இந்த தீட்டுக் கழிப்பை நம்பிக் கொண்டிருப்பதும் இதனைக் கலாசாரமென்று பின்பற்றுவதும் அவமானமில்லையா? உண்மையில் தீட்டென்று ஒன்று கண்ணுக்குத் தெரியாது எங்கேயோ தொங்கிக் கொண்டிருக்கின்றது என்றால் அதனை நீக்கும் தகைமை யாருக்கு இருக்கின்றது? பெண்ணின் இரத்தத்துடன் உறவு கொண்டு பெண்ணின் இரத்தத்துடன் வெளியேறி உருவாகிய ஒருவருக்கு எப்படி அந்தத் தகைமை வரும்? ‘தீட்டுடன்’ வெளியேறி ‘தீட்டுப்பெற்ற’மனிதர்களது கால்பட்ட இந்த முழுப் பூவுலகையும் (அது மட்டுமல்ல தீட்டுடன் பெண்கள் வானத்தில் பறப்பதால் முழு வானமும் கூடத் தீட்டாகத்தான் இருக்கும்) தீட்டுக்கழிப்பதென்றால் பெண்களது மாதஇரத்தப் போக்குடன் வெளியேறாத ஒரு வேற்றுக்கிரகவாசி தான் வரவேண்டும்.

இன்று இலங்கையிலோ வெளிநாடுகளிலோ பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சாமத்தியச்சடங்கு செய்வதில் காட்டும் ஈடுபாட்டில் பிள்ளையின் நலனை விட மேலோங்கிக் காணப்படுவதுசுய தம்பட்டமேயாகும். ஊர்வாய்க்குப் பயந்து நுண்கடன் எடுத்து மகளிற்கு சாமத்தியக்கலியாணம் செய்யும் போரால் கணவனை இழந்த வறிய பெண்கள் தொடங்கி நட்சத்திர உல்லாச விடுதிகளில் கொண்டாட்டம் வைப்பவர்வரை நம்நாட்டவரும், வானூர்தியில் மகளை ஏற்றி இறக்கி,வானூர்தியிலிருந்து மகளுக்குப் பூத்தூவி,வெளிநாட்டிலும் பிறகு ஆறுதலாக இலங்கைக்கு வந்து இன்னொரு விழாவும் எடுக்கும் புலம்பெயர் தமிழ்ச்சமூகமுமாக பெண்களது முதலாவது இரத்தப்போக்கைக் கேலிக்கூத்தாக்கும் ஆடம்பர நாடகம் வளர்ந்து கொண்டே போகின்றது.

சாமத்தியக் கலியாணம் என்கின்ற பெயரில் தமது மகள்மாரையே ஒரு கவர்ச்சிப் பொருளாகவும்,பாலியல் பண்டமாகவும் காட்சிப்படுத்தி விட்டு அவள் சுயமாகத் தனது ஆடைகளைத் தெரிவு செய்யும் போதும், பாலியல் ஈர்ப்பிற்குள்ளாகும் போதும், காதலிக்கும் போதும் அதனை விமர்சிப்பதும் எதிர்ப்பதுமான எமது சமூகங்களின் இரட்டை நியாயங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியவை. எமது மகள்மாரது கல்வி மற்றும் பிறதுறைசார்ந்த ஈடுபாடுகளைக் பாராட்டுவதிலும் கொண்டாடுவதிலும் விட நாம் வழங்கும் அதியுட்ச பாராட்டாக அவள் முதலாவது இரத்தப்போக்கைக் கொண்டாடுவது அமைகின்றது. அவரவருக்குரிய தனித்தன்மையான அழகு ஆற்றல் திறனுடன்எமது மகள்மார் வெளிப்படுத்தப்படாது அந்தத்தக் காலத்து இந்திய சினிமாக் கதாநாயகிகளாக பாவனை பண்ணி வெளிப்படுத்தப்படுகின்றனர். அதிலும் கதாநாயகனுக்குத் தன்னைப் படைக்கக் காத்திருக்கும் கதாநாயகிகள் போன்று நடிக்கச் சொல்லி வீடியோ படங்கள்; எடுக்கின்றோம். சினிமாப் படத்தில் கதாநாயகியை பல்லக்கில் வைத்துத் தூக்கினால் நாங்களும் பல்லக்குத் தூக்குவது, தண்ணித்தொட்டிக்குள்ளால், பற்றைக்குள்ளால், சேலைக்குள்;ளால் காதல் பார்வை பார்க்க வைப்பது என்று இளம் ஆண் படப்பிடிப்பாளர்கள் எங்களது பிள்ளைகளைப் படுத்தும் பாடு அளவிட முடியாதது. அதற்குப்பின்னணியாக விரசமான பெண்களைத் துகிலுரியும், வார்த்தைகளால் பாலியல் பலாத்காரம் புரியும் பாடல்களைப் போட்டுத் தொகுப்பாக்குகின்றோம். அதனைக்குடும்பமாக இருந்து பார்த்து மகிழ்ந்து பேணிப்பாதுகாக்கின்றோம். இது எங்கள் கலாசாரமாம்.

இந்தக் கொண்டாட்டங்களுக்கும் முதலாவது இரத்தப் போக்குக்கும் என்ன தொடர்பு? பெண் உடலியல் ரீதியான மாற்றத்தால் பாலியல் உறவுக்குத் தயாராகும் சந்தர்ப்பத்தில் அந்தப் பெண்ணை ஒரு ‘பாலியல் பண்டமாக’ உணரப்பண்ணி, மற்றவர்களுக்கும் அதைப் பகிரங்கப்படுத்துவதைத் தெரிந்து செய்கின்றோமா?தெரியாமல் செய்கின்றோமா? இனப்பெருக்க சுகாதாரம், உடலுறவு கர்ப்பம் போன்ற விடயங்கள் பற்றிய எந்த நேர்மையான அறிவூட்டல்களுமில்லாத ஆண்களுக்கு சுகமளிப்பதற்கென்று படைக்கப்பட்ட பொருளாகப் பெண்ணைப் புனையும் இந்தச் சடங்குகள் எமக்குத் தேவையா? இந்தச்சடங்கிற்கு அடுத்த நாளிலிருந்து வாழ்க்கைக் காலம் முழுவதும் அந்தப் பெண் தனது மாத இரத்தப்போக்குடன் படப்போகும்அவதிகள் பற்றிச் சிந்திக்கத் தேவையில்லையா?

பெண்ணுடைய இந்த உடலியல் மாற்றம் பற்றி நாங்கள் என்ன விளங்கிக்கொண்டிருக்கின்றோம்? முதலாவது மாதவிடாயைத்; தொடர்ந்து வரும் மாதவிடாய்களும், திருமணத்தின் மூலமான பாலியல் உறவு, கர்ப்பம், கருச்சிதைவு,கருக்கலைப்பு என மாதவிடாய் நிற்கும் காலம் வரைக்கும் பெண்ணுக்கு உடல் – உளரீதியாக ஏற்படும் குழப்பங்கள்,சிரமங்கள், சிக்கல்களைப் பற்றி நாம் ஆரோக்கியமாக விளங்கிக்கொள்வதும் முக்கியமானது. முதலாவது மாதவிடாயைக் கொண்டாடி முடித்ததிலிருந்து ஒரு பெண் பிள்ளை இரத்தப்போக்கு வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயத்துடன் பாடசாலை செல்வதில் பெண்களுக்கான சவால் தொடங்குகின்றது. அதற்குப் பாவிக்கும் மாதவிடாய்த் துண்டுகளை ஒழித்து மறைத்து வாங்குவதும் (அல்லது ஒளித்து மறைத்துக்கழுவிக் காய வைப்பதும்) அவற்றை எப்படி எங்கே அகற்றுவது என்ற நடைமுறைக் குழப்பங்களும்,இந்த விடயத்தைக் காரணங்காட்டி லீவு எடுக்கலாமா விடலாமா என்று குழம்புவதும் எமது பெண்களுக்கான மாதாந்த சவால்களாகும். வாழ்க்கைக்காலத்தில் கிட்டத்தட்ட 500 தடவைகளுக்கு மேல் உடலிலிருந்து இரத்தம் வெளியேறுவதும் அந்த நாட்களுடன் சம்பந்தப்பட்ட வயிற்றுவலிகளும் இதைப்பற்றி கல்வித்தளங்களிலோ, வேலைத்தளங்களிலோ பேசமுடியா போலியான ஒளிவும் மாதவிடாய்த் துண்டுகளை பணம் கொடுத்து வாங்கவும், சுகாதாரமான முறையில் பாவிக்கவும், மாற்றவும், அகற்றவும் இயலாச் சூழல்களில் பெண்கள் அந்த நாட்களைச் சாதாரணமானது போல் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இந்தச்சாமத்தியக் கொண்டாட்டங்களால் மறைக்கப்படும் உண்மைகளாகும்.

தத்தம் சமூகப் பெண்களின் ஆரோக்கியமானஇனப்பெருக்கநலன்களைப் பற்றி நேர்த்தன்மையாகப் பேச விரும்பாமல், அதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பதில் அக்கறைப்படாமல்,சிந்திக்க முடியாத, சிந்திக்கத் தெரியாத, சிந்திக்க விரும்பாத சமூகமாக நாங்கள் இருந்து கொண்டு போலியாக எமது இன கௌரவத்தைப்பற்றிப் பேசிக் கொண்டும், மற்றவர்கள் எங்கள் கலாசாரத்தை இழிவுபடுத்துகின்றார்கள் என்று புலம்பிக் கொண்டும் இருப்பதில் என்ன பிரயோசனம்?
எமது பிரதேசங்களில் அரச அலுவலகங்களை பாடசாலைகளை அமைத்தவர்களும், நிர்வகிப்பவர்களும், கடைகள் போக்குவரத்து சேவைகளை நடாத்துபவர்களும்என அனைவருமே தத்தமது பெண் பிள்ளைகளதோ, சகோதரிகளதோ முதலாவது இரத்தப்போக்கை அமர்க்களமாகக் கொண்டாடியவர்களாகவே இருப்பர்,அல்லது தாமே கொண்டாடப்பட்டவர்களாகவும் இருப்பர். ஆனால் அந்தக் கொண்டாட்டத்தைப்பற்றிப் பகுத்தறிவுடன் சிந்தித்து அதனைத்; தாண்டி பெண்களது மாதஇரத்தப்போக்குப்பற்றி நேர்மையாகச் சிந்திப்பார்களாக இருந்;தால் மட்டும்தான் போலித்தனங்களற்ற, பெண்கள் மனிதர்களாகத் தலைநிமிர்ந்து வாழக்கூடிய ஒரு கௌரவமான சூழலைக் கட்டியெழுப்ப முடியும்.
எனவே எங்களது மகள்மார் முதலாவது இரத்தப்போக்கை கண்டது எங்களுக்கு சந்தோசமென்றால் அதனை நாம் நேர்வழியில் தெரிவிப்போம்.

• அவளது முதலாவது இரத்தப் போக்கைக் கொண்டாடச் செலவளிக்கும் பணத்தை அவள் வாழ்நாள் முழுவதும் பாவிக்க இருக்கும் மாதவிடாய்த்துண்டுகளை வாங்கவும் அவளது இனப்பெருக்க நலன்களுக்காகவுமான சேமிப்பாக்குவோம்.

• எங்களிடம் பணம் அதிகம் இருந்தால் அவள் படிக்கும் பாடசாலைக்கு மாதவிடாய்த்துண்டுகளை அகற்றும் இயந்திரத்தை வாங்கிக் கொடுப்போம்.அவளது பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக மாதவிடாய்த்துண்டுகள் கிடைக்கச் செய்வோம்.

• அதைவிடவும் அதிகம் பணம் இருந்தால் ஏனைய பாடசாலைகள், வைத்தியசாலைகள், பஸ்தரிப்பு நிலையங்கள் போன்ற பொதுவான இடங்களில் பெண்கள் அருவருப்பின்றிபாவிக்கக் கூடிய கழிவறைகளை ஏற்படுத்திக் கொடுப்போம். மாதவிடாய்த்துண்டுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்கிக் கொடுப்போம்.

• அதைவிடவும் மிகமிக அதிகமாகப் பணம் இருந்தால் எங்கள் சமூகப்பெண்கள் நிம்மதியாகவும் கௌரவமாகவும் அவர்களது மாதஇரத்தப் போக்குகளை அனுபவிக்கக்கூடிய தேவைகளை இலகுவாக்கும்,நிறைவேற்றும் பொதுநிதியத்தை ஆரம்பிப்போம்.

• புலம் பெயர் தமிழர்கள் தமது மகள்மாரின் முதலாவது இரத்தப்போக்கைத் தாம் வாழும் நாட்டிலும், இலங்கையிலும் கொண்டாடுவதற்குப்பதிலாக மேலே கூறியவற்றைச் செய்வது இலங்கையில் வாழும் அவர்களது சமூகத்தினரை உண்மையாகக் கௌரவப்படுத்துவதாக அமையும்.

மாதவிடாய் இன்றி மனிதர் இல்லை. பெண்களது ஒவ்வொரு மாதஇரத்தப்போக்குமே சமூக பொருளாதார அரசியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டியவை. அதற்கு மதிப்புஅங்கீகாரம் வழங்கல் என்பது அந்த விடயத்தை மூடிமறைத்து அலங்கரித்துக் கொண்டாடுவதல்ல. மாறாக பெண்கள் தமது வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான வகையில் சிரமங்களற்ற மாதஇரத்தப்போக்குகளைக் கடந்து வாழக்கூடிய சேவைகளையும் சூழலையும் ஏற்படுத்துவதேயாகும். மாதவிடாய்க் காலத்தில் அசௌகரியங்களை அனுபவிக்காது கல்வியைத் தொடரவும் சகலவிதமான வேலைகளைச் செய்யவும் பயணங்களை மேற்கொள்ளவுமான ஏற்பாடுகளைச் செய்தலே கௌரவமான சமூகத்துக்கு உகந்தது ஆகும்.
மூடநம்பிக்கைகளா பகுத்தறிவா எமது சமூகங்களுக்கு சுயமரியாதையையும் பெருமையையும் தரும் என்று தீர்;மானிப்போம். எமது மகள்மாரை, எமது பெண்களைத் தீட்டென்று கூறும் மாயையையும், பாலியல் பண்டமாக்கும் சடங்குகளையும் களைந்து வாழ்வோம். நேர்மையான கௌரவமான சமூகத்தை உருவாக்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *