மலேசியாவில் பெண்களின் இன்றைய சவால்கள்  

-யோகி

01

 

மலேசியாவைப் பொறுத்தவரை  இந்தியப் பெண்கள் பல சிக்கல்களுக்கு நடுவில் இருக்கிறார்கள் என்று மட்டும்தான் சொல்லத்தோன்றுகிறது. அவர்களில்  வாழ்வியல் முன்னேற்றம் குறித்து பேசுவது என்றால் அதுவே ஒரு சிக்கலான விஷயம் என்றுதான் சொல்வேன்.இங்கே சீனப்பெண்கள் பண பலத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்கான முதல் தேவையாக கல்வி இல்லை என்றாலும் (தற்போது சீனர்கள் கல்வியிலும் முன்னுக்கு வருவது குறிப்பிடத்தக்கது) பொருளாதாரத்தில் அவர்களை மிஞ்ச யாரும் இல்லை என்ற ரீதியில் நிற்கிறார்கள்.  மலாய்க்கார பெண்களுக்குப் பணபலம் இல்லை என்றாலும் அரசாங்கத்தில் ஆதரவும் பூமி புத்ரா அந்தஸ்தும் இருக்கிறது. இதில் இந்திய பெண்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக இருக்கிறது. அவர்களுக்குப் பண பலமும் இல்லை பூமி புத்ரா அந்தஸ்தும் இல்லை. ஓரளவுக்கு வசதியான பெண்கள் தங்களைப் பொருளாதார ரீதியில் நிலை நிறுத்திக்கொள்கிறார்கள்.  இந்த நிலை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும்தான். இந்த சூழ்நிலையிலிருந்து மீண்டு வருபவர்கள் சில பேர் தான். அப்படி பார்த்தாலும் அவர்களுக்கு பின்னால், வாழ்கையை அல்லது ஆசையை தொலைத்த யாராவது இருக்கவே செய்கிறார்கள்.

02 03 05

இந்நிலையில் மலேசிய நாட்டில் பெண்களின் சுதந்திரத்தை எப்படி வரையறுப்பது என்று தெரியவில்லை. முதலில் இந்தியப் பெண்களிடத்தில், அவர்கள் சுதந்திரம் குறித்து பேச நேரும்போது,  பெண்களே ஒரு குற்றச்சாட்டை அல்லது கருத்தை அவ்விடத்தில் முன்வைக்கின்றனர்.  அதாவது பெண்களே பெண்களின் சுதந்திரத்தை தவறாக புரிந்துக்கொள்கின்றனர் என்றும் அவர்களுக்குப் பெண் சுதந்திரத்திற்கு  அர்த்தம் தெரியவில்லை என்றும். இன்னும் தீர்க்கமாகச் சொல்ல வேண்டுமானால், அவர்களின் அடிப்படை சுதந்திரம்கூட பெண்களாலேயே மறுக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்தச் சிந்தனை அவர்களிடத்தில் எப்படி வந்தது என்றால் ஆண்கள் குணத்தின் பிரதி பிம்பம் என தெளிவாகத்தெரியும். இங்கே பெண் சிந்தனை என்பது ஒரு ஆணால் கட்டமைக்கப்பட்டதாக இருக்கிறது. தந்தை வழி சமூகத்தில் வளரும் பெண்கள் அவர்களுக்குத் தெரியாமலே ஆணாதிக்க சிந்தனையை பெண்களின் சிந்தனை என நினைக்கிறார்கள், என்பதைக்காட்டிலும் நம்புகிறார்கள்

குறிப்பாக, 12 வயதில் பருவம் அடைவதற்கு முன்பாகவே அதாவது அவள் குழந்தையாக இருக்கும் போதே சக நண்பனுடன் விளையாடுவதை அவர்கள் தடைவிதிக்கிறார்கள். உளவியல் ரீதியில் பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமையும் வேற்றுமையும் அங்கே தன் தாயின் மூலமே தொடங்கி வைக்கப்படுகிறது.

என்ன அவனிடம் உனக்கு பேச்சு? என்ன பேசினீர்கள்? உனக்குப் பெண் தோழிகளே கிடையாதா? போன்ற வார்த்தைகளை சராசரியாக எல்லா பெண் குழந்தைகளும் கடந்து வருகிறார்கள். இது ஒரு பழி வாங்கும் நடவடிக்கைதான். அவரின் தாயாரோ அல்லது யாரோ அவருக்கு கூறியதை, இவர் சந்திக்கும் பெண் குழந்தைகளிடத்திலெல்லாம் சொல்லி பழி தீர்க்கிறார்.

இந்த நிலை சீன-மலாய்க்கார சமூகத்திலுள்ள பெண்களுக்கு மாறுபடுகிறது. அதாவது தனது 13-வது வயதில்இடைநிலைப்பள்ளிக்குப் போகக்கூடிய இந்திய மாணவிகள், முற்றிலும் வேறொரு உலகத்திற்கு அல்லது கலாச்சாரத்திற்குள் போகிறார்கள். அங்கு சீன மற்றும் மலாய் மாணவிகள் ஆண்களிடமும் மற்ற சமூகத்திடமும் சகஜமாக பழகக்கூடிய சூழலைக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் கலாச்சாரத்திற்கு உள்ளேயே வாழ்ந்துக் கொண்டிருந்த ஒரு பிற்போக்குதனமான சிந்தனைக்கொண்ட மாணவிகள் இந்தச் சூழலுக்கு வருகிறபோது அவர்களிடம் மாற்றமும் ஒரு தாக்கமும் ஏற்படுகிறது.

இந்த மாற்றமானது இந்திய பெண்களுக்கு உடனே வந்துவிடுவதில்லை. தோட்டம் சார்ந்து வாழ்ந்த மக்கள் பட்டணத்திற்கு வரும்போது வேறு இனத்தவரோடு இணைந்து பழகும்போது, அவர்களைப் பார்த்து ஏற்படுத்திக்கொண்ட மாற்றம்தான் இது.

 05

மலேசியாவில் பெண்கள் அமைப்பின் வளர்ச்சி

மலேசியாவில் பெண்கள் அமைப்புகளை பல்லாண்டுகளாக பலர் தலைமையேற்று நடத்துகின்றனர். அவர்கள் பல்வேறு பின்புலங்களையும், நாட்டின் பல்லின தோற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். மலேசியப் பெண்களின் போராட்டங்களை ஒரு கழுகுப்பார்வையில் பார்க்க சாந்தா அவர்களின் ஆய்வு நமக்குக் கைக்கொடுக்கிறது.

மலேசிய சோசியலிஸ கட்சியைச் சார்ந்த சாந்தா அவர்கள் கூற்றின்படி  1930-ல் மலாய்ப் பெண்கள் ஆசிரியைகள் சங்கம், மலாய் சமூகத்தின் பெண்களைப் பள்ளிகளுக்கு அனுப்புவதற்குப் போராட வேண்டியிருந்தது என தெரிய வருகிறது. ஆண்களும்கூட, சைட் சேக் அல் – ஹடி மற்றும் ஜைனல் அபிடின் அகமத் ஆகியோர் பெண்கள் கல்வி கற்பதன் அவசியத்தை உணர்த்த முக்கிய பங்கு வகித்தனர் என அவர் கூறுகிறார்.

1945-ல் (womans union) என்ற பெயரில் ‘பெண்கள் சங்கம்’ தோற்றுவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாட்டின் மற்ற மாநிலங்களில் கிளைகள் அமைக்கப்பட்டன. அதில் சீனர்களே அதிகம் உறுப்பினர்களாக இருந்தனர். போருக்குப் பின்னர் அமைக்கப்பட்ட முதல் பெண்கள் அமைப்பாக அது இருந்தது. அதன் நோக்கம், இனம் சாராத, தொழில் சார்ந்த கல்வி மற்றும் அரசியல் தொடர்புடைய சங்கமாக இருக்க வேண்டும் என்பதே.

1946-1948 வரையில் பல்வேறு இனம் சார்ந்த பெண்கள் குழுவினர், பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்திற்கு எதிராக பெண்களின் தாழ்வு மனப்பான்மை தொடர்பான விசயங்களில் போர்க்கொடி தூக்கினர். இவர்களே பின்னாளில் பெண்கள் பிரிவின் தேசியவாதிகளாகவும், கம்யூனிச கட்சிகளாகவும் விளங்கி சுயமாக செயல்படத் தொடங்கினர்.

சமீப காலத்தில் மலேசியாவில் பெண்கள் அமைப்புகள் அதன் நோக்கங்களில் பரவலான விரிவாக்கத்தைக் கொண்டுள்ளது. அதில் இளம் பெண்கள், திருநங்கைகள், பெண் பாலியல் தொழில்புரிபவர்கள், குடியேற்ற பெண் தொழிலாளர்கள், பூர்வீகக்குடி பெண்கள் போன்றோரும் அடங்குவர்.

இதில் காணப்படும் பலவீனங்கள் யாதெனில், இதுபோன்ற அரசு சார்பற்ற அமைப்புகள் மத்திய வர்க்க பெண்களால் ஆளப்படுவதுதான். சக்திவாய்ந்த விளிம்புநிலை பெண்கள் சார்ந்த அமைப்புகளை இன்னும் உருவாக்கவில்லை அல்லது உருவாக்க இயலவில்லை என்றுதான் சொல்வேன். அதற்கு மலேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருப்பதாலும், ஹராம் என்ற ஒற்றைச் சொல்லில் அத்தனையையும் அவர்கள் ஒடுக்க நினைப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். 

பெண்கள் அமைப்புகள் சுதந்திரத்திற்கு முன்பு போல் பாகுபாடற்ற நிலையில் இல்லாமல், இப்போதெல்லாம் பெண்கள் சார்ந்த எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துகின்றனர். கல்வி வாய்ப்புகள், சொத்துடமைகளை உரிமைக் கொள்ளல், சுரண்டல், பாகுபாடு, வேலையிடத்தில் மற்றும் சமுதாயத்தில் நிலவும் தங்களுக்கு எதிரான அனைத்திலும் விழிப்புணர்வு பெற போராடி வருகின்றனர்.

2. இன்றைய பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்

மலேசியாவில் பெண்களின் நிலையில் முன்னேற்றம் அறவே இல்லை என சொல்லிவிட முடியாது. முன்னேற்றம் என சில இருக்கவே செய்கிறது. சாந்தா அவர்களின் ஆய்வுபடி நாட்டின் தொழில் ஆள்பலத்தில் 52.8 விழுக்காடு பெண்கள் இருப்பதுடன், ஆச்சரியப்படும் வகையில் உயர்க்கல்வி நிலையங்களில் 68 விழுக்காடு உள்ளனர். ஆனால் கலாச்சாரம், சட்டம் மற்றும் மதங்கள் அவர்களுக்குப் பல வகையில் தடையாக உள்ளன. பாலின செயல்பாடுகளில் அவர்கள் கட்டுப்பாடான மற்றும் பாதுகாப்பான ஆணாதிக்க சிந்தனைகளை பெண்களிடையே பிரயோகிக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.

பெண்களை பாகுபாட்டுடன் நடத்துவதில் சட்டங்களும், ஆண் மனபோக்கு விவகாரங்களும், விவாகரத்து விசயங்களில் எதிர்க்கொள்ளும் போராட்டங்கள் பெண்களுக்கு எதிராக எத்தகைய போக்கினை கடைப்பிடிக்கின்றன என்பதை பெண்கள் உதவி அமைப்புகள் காட்டுகின்றன. இன்று பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டாலும் பலர் தங்களது ஊதியத்தை கணவனிடம் ஒப்படைக்க கட்டாயப்படுத்தப்படும் நிலை இன்னும் இருக்கவே செய்கிறது.

சட்டங்கள் பெண்களுக்கு நியாயமாக செயல்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. அதற்கு இரு சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம்.

1. இளம் இந்திய பெண்ணான கலைச்செல்வி என்பவர், 2010-ஆம் ஆண்டு தன்னை கற்பழிக்க வந்தவனை தாக்கியதால் அவன் உயிர் இழந்தான். இரண்டு வருடம் அந்த வழக்கு நடந்தது. கடந்த வருடம் அவள் குற்றவாளி என இரண்டு வருட சிறைதண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு நீதிமன்றம் சொன்ன காரணம், உயிர் போகும் அளவுக்கு தாக்கியது குற்றம் எனக்கூறியது.

2. மதமாற்றப் பிரச்சனையில் இந்திராகாந்தி எனும் பெண்ணிடமிருந்து அவளின் குழந்தை பறிக்கப்பட்டது. விவாகரத்து பிரச்சனையைப் பொறுத்தவரையில் பிள்ளைகளை யார் பாதுகாப்பில் விடுவது, பராமரிப்புச் செலவு, போன்ற விஷயங்களுக்கு இன்றுவரை சரியான சட்ட தீர்வு இல்லை.

மேலும், குடிநுழைவு, வீட்டு வன்முறைமற்றும்சொத்து ஆகியவற்றிலும் பெண்கள் வெகுவாக பாதிப்படைகிறார்கள். அதுபோன்ற சட்டங்களை மாற்றக்கோரி பிரச்சாரங்களை மேற்கொண்டதில் வருமான வரி, விநியோக சட்டம், கற்பழிப்பு தொடர்பான சட்டம் போன்றவை மட்டுமே திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அவை முழுமையாக மலேசிய பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறதா என்பது கேள்விக்குறிதான்.

அரசியல் ரீதியாக பார்த்தாலும் பெண்களுக்கான சுதந்திரம் அதில் குறைவுதான்.

உதாரணத்திற்கு, அண்மையில் சிலாங்கூர் மாநிலத்தில் மந்திரி பெசாரை நியமிக்கும் விசயத்தில், பி.கே.ஆர் கட்சியின் டாக்டர் வான் அஸிஸாவை மந்திரி பெசாராக பரிந்துரைக்கும் முயற்சி தோற்கடிக்கப்பட்டது. இதற்குக் கூறப்பட்ட பல காரணங்களில் அவர் பெண்ணாக இருப்பதும் ஒன்று என தெரிவிக்கப்பட்டது. இந்தக் கருத்தை அம்னோவின் வழக்கறிஞரான டத்தோ முகமட் ஜஃபாரிஸாம் ஹாருன், நாட்டின் பிரபல நாளேடான News Straits Times-சில் பகிரங்கமாக கூறியிருந்தார். இது உண்மையில் ஒரு இழிவான கருத்தாகவே நான் பார்க்கிறேன்.

 03

தென் கிழக்காசியாவில், நாடாளுமன்ற பெண்கள் பிரதிநிதித்துவத்தில் மலேசியா கடைசிக்கு இரண்டாவது இடத்தில் உள்ளது. இது குறித்த விரிவான தகவலை நாட்டின் முன்னணி இணைய செய்தி வலைத்தளமான Insider  வெளியிட்டிருந்தது.

 Timor-Leste என்ற நாட்டில்தான் அரசியலில் பெண்களின் பங்கு 38.5 விழுக்காடு என முதல் நிலையில் இருக்கிறது. Loas  25 விழுக்காடாக இரண்டாம் நிலையிலும் இருக்கிறது. வியட்னாம் 24.4. விழுக்காடும் சிங்கப்பூர் 24.2 விழுக்காடும், பிலிப்பைன்ஸ் 22.9 விழுக்காடும் கம்போடியா 20.3, இந்தோனேசியா 18.6 மற்றும் தாய்லாந்து 15.8 விழுக்காடும் பெண்களுக்கான அரசியல் உரிமையை வழங்குகின்றன.  மலேசியாவில் 222 நாடாளுமன்ற சீட்டுகளில் பெண்களின் பங்கு 10.81 விழுக்காடு மட்டுமே. இது அரசாங்க மற்றும் சட்டமியற்றும் அமைப்புகளில் பெண்களின் முடிவெடுக்கும் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவு என்பதை நமக்குப்படம் பிடித்து காட்டுகிறது.

1995-ல் பெண்களின் பிரதிநிதித்துவம் 30 விடுக்காட்டு இலக்கைக் கொண்டிருந்தாலும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அது இன்னும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கான அடைவு நிலையில் வராதது வருத்தமளிக்கிறது.

மூவினங்கள் கொண்ட மலேசியாவில் ஒவ்வொரு இனத்திற்கும் தாய்க் கட்சி உண்டு. மலாய்க்காரர்களுக்கு அம்னோ. அதில் தேசிய மகளிர் பிரிவின் அணி தலைவி, டத்தோஸ்ரீ என்ற உயரிய பட்டத்தோடு கட்சியை வழிநடத்துகிறார். சீனர்களின் தாய் கட்சியான MCA-வில் தேசிய மகளிர் தலைவியான ஹெங் சீய் கிய் டத்தோ அந்தஸ்தோடு, மகளிர் குடும்பநல மேம்பாட்டு துணையமைச்சர் பதவியில் தலைவி அந்தஸ்தில் இருக்கிறார். இந்தியர்களின் தாய் கட்சியான ம.இ.கா-வின் தேசிய மகளிர் தலைவிக்கு எந்த அந்தஸ்தும் கிடையாது. அந்த மகளிர் பிரிவுக்குச் சொந்தக் கட்சியிலிருந்து மானியம்கூட ஒதுக்குவதில்லை. அவர்கள் அரசிடம் வேண்டிதான் பெற வேண்டும். சொந்த கட்சியே அவர்களை இப்படி ஒதுக்கி வைத்திருக்கையில், மற்ற இனத்தவரோடு எம் பெண்களை ஒப்பிட்டு பார்ப்பதே எனக்கு கூச்சமாக உள்ளது. 

கடந்த மாதத்தில் பிரபல இணைய எழுத்தாளரும் விரிவுரையாளருமான ரிட்டுவான் தீ, பெண்களின் உடல்கள் வசீகரமாகவும் உணர்ச்சியை தூண்டும் வகையில் உள்ளது. அவர்கள் தங்கள் உடலை வெளிக்காட்டி பீற்றிக் கொள்கிறார்கள். இதுவே ஆண்களை கற்பழிப்புக்கு தூண்டுகிறது.  நாட்டில் நடைபெற்ற ஒரு லட்சம் கற்பழிப்பு சம்பவத்திற்கு இதுதான் காரணம் என்கிறார்.

இங்கு ஒரு விஷயத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது கடந்த வருடம் டில்லியில் பேருந்தில் மாணவி கற்பழிக்கப்பட்டச் சம்பவத்திலும் பெண்கள் அணியும் உடைதான் பாலியல் பிரச்சனையை தூண்டுவதாக கூறப்பட்டது. இதுபோன்ற பொதுபுத்தி சார்ந்த அபிப்பிராயம் கொண்டவர்களிடத்தில் நான் ஒரு கேள்வியைத்தான் முன்வைக்க நினைக்கிறேன். அதாவது உலக முழுவதுமே பள்ளி மாணவர்களை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்துகிற சம்பவம் நிறைய பதிவாகியுள்ளன. அப்படி என்றால் பள்ளி மாணவிகளின் சீருடை எந்த அளவுக்கு கவர்ச்சியானதாக இருக்கிறது என்பதை இந்த ஆணாதிக்க சமூகம்தான் கூறவேண்டும். குறிப்பாக உடைக்கும் பாலியல் தூண்டதலுக்கும் சம்பந்தம் இருக்கிறது எனக் கூறுவது எவ்வகையான சிந்தனை வடிவம் என எனக்கு இன்னும் விளங்கவில்லை.

 ‘ஜாய்ஸ்’ சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகா, பிப்ரவரி மாத தொடக்கத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப்பிறகு, பெண்கள் கற்பழிப்பு சம்பவங்களிலிருந்து விடுபட ‘அவ்ராட்’ (AURAT) எனும் கட்டுபாடுகளை விதித்தது. அதாவது மலாய் மொழியில் அவ்ராட் என்றால், நெருங்கிய உடல் பாகங்கள் என்றும், முஸ்லிம் பெண்கள் தங்கள் உடலை துணிகளை கொண்டு மறைத்து வைத்திருக்க வேண்டும் என்றும் வெளியில் காட்டுவது பாவத்திற்குரியது என்றும் கூறி வலியுறுத்தியது. 

திரேசா கோக் போன்ற எதிர்கட்சி தலைவிகள் தங்கள் சொந்த வாழ்கையில்கூட சுதந்திரமாக செயல்பட முடியாமல் விமர்சிக்கப்படுகிறார்கள். அதாவது, அவர்கள் மது அருத்துவதைக்கூட படம்பிடித்து ரொம்பவும் கீழ்த்தரமாக இழிவுபடுத்தி விமர்சிக்கிறார்கள். அரசியலிலும் சமூக இயக்கங்களிலும் ஈடுபடும் ஆண்கள் செய்யும் எந்த நெகடிவ் விஷயமும் அங்கு கேள்வி கேட்கவோ, விமர்சிக்கவோ, அல்லது கேள்வியோடு பார்க்கவோ படுவதில்லை. ஆனால், இதுபோன்ற விமர்சனங்களுக்கு பெண்கள் பதில்சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலக்கிய ரீதியில் என்று பார்த்தாலும் குறிப்பாக மலேசியத் தமிழ் இலக்கியத்தையே கவனித்தால் பாலியல் ரீதியான, அந்தரங்கமான விஷயங்களை பகிரங்கமாக எழுதுவது எம் நாட்டுச் சூழலுக்குப் பொருந்தாது என்கின்றனர். எதன் அடிப்படையில் இந்த கூற்று வைக்கப்படுகிறது என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை. அதையும் மீறி எழுதினால், அது கழிவறை இலக்கியம் என விமர்சிக்கப்படுகிறது. அல்லது இவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என ஒதுக்கப்படுகிறார்கள். அதற்கு உதாரணமாக, மிக அண்மையில் விரிவுரையாளரான கிருஷ்ணன் மணியம், இப்படி கூறுகிறார். அதாவது தமிழக பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்கிற கவிதைகளும் இலக்கியங்களும் மலேசிய நாட்டுச் சூழலுக்குத் தேவையில்லை எனும் கருத்தை முன்வைக்கிறார். ஆனால், தமிழ் இலக்கிய பரப்பில் சங்க இலக்கியங்களிலிருந்து தற்போது இருக்கிற நவீன இலக்கியம் வரைக்கும் பெண் உடல்சார்ந்த, விஷயங்கள் பேசப்பட்டுதான் வந்திருக்கின்றன.

ஆனால், மலேசியா போன்ற நாட்டில், ஒரு ஆணாதிக்க சமூகத்தில் வாழ்ந்துக்கொண்டிப்பவர்களை தமிழ்துறை சார்ந்த தலைவரான ஒருவர் இப்படிப்பட்ட இலக்கியங்கள் வரக்கூடாது என சொல்கிறார். அப்படி என்றால், இதுபோன்ற சிந்தனைக் கொண்ட விரிவுரையாளரோ அல்லது ஆசிரியரோ இருக்கக்கூடிய பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவி அல்லது மாணவர்களிடத்தில் எம்மாதிரியான இலக்கிய படைப்புகளை எதிர்பார்க்கிறது?

தமிழை மட்டுமே ஒரு பாடமாக எடுத்து முனைவர் பட்டம் பெரும் வாய்ப்புகள் கொண்ட நாடுகள் மிகச் சொர்ப்பம்தான். சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, தமிழ் நாடு, இலங்கை உள்ளிட்ட நாடுகளில்தான் அது செய்ய முடியும். மலேசியாவிலும் அந்த வாய்ப்பு இருக்கிறது என்றால், அந்த நாட்டில் தமிழ் துறையில் இருக்கும் தலைவர் இம்மாதிரியான இலக்கியங்கள் வேண்டாம் என்று சொல்கிற பட்சத்தில், அந்தக் கல்லூரியில் படிக்கும் தமிழ் மாணவர் அல்லது மாணவிகளின் இலக்கிய அறிவு எந்தளவுக்கு விரிவடைய சத்தியமாகிறது? இங்கு மாணவிகளுக்கு கல்வி கிடைக்கிறது.. ஆனால், உண்மையான கல்வி எது என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.   

மிக அண்மையில் நான் ஒரு நிகழ்ச்சிக்குச் செய்தி சேகரிப்புக்காக போயிருந்தேன். அப்போது எங்களின் இந்திய தேசிய கட்சியின் மகளிர் தலைவி உரையாற்றினார். பெண்களுக்குப் பூ கட்ட, கேக் செய்ய, மருதாணி போட, மணி பின்ன, மணப்பெண் அலங்காரம் செய்ய பயிற்சி கொடுத்திருக்கிறோம். இனி அவர்கள் சொந்தமாக தங்களின் வருமானத்தை ஈட்ட முடியும். இவர்கள்தான் பாரதி கண்ட புதுமை பெண்கள் என்றும் கூறினார். இன்னும் வீட்டு வேலைகளைச் சொல்லி கொடுக்கும் அளவுக்குதான் எம்மின தலைவிகளுக்கு அறிவு இருக்கும்பட்சத்தில் பாரதியின் வரிகள் அலங்கார வரிகளாகவே உபயோகப்படுத்தப்படும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

தொடர்ந்து மலேசிய ஊடகங்கள் பெண்களின் நலனை எப்படி பார்க்கின்றன? பத்திரிக்கைகளில் அல்லது வானொலியில் அல்லது தொலைக்காட்சியில் மகளிர் அங்கமோ அல்லது பெண்கள் சிறப்பிதழ் போன்றவற்றில் மீண்டும் மீண்டும் சமையல் குறிப்பு, பெண்களுக்கான சிகையலங்காரம், கோலப் பயிற்சி இதைத்தான் தயாரித்து வழங்குகின்றனர். அதைத்தாண்டி ஒரு பெண்ணின் தேவையைக்குறித்து பேசுவதில்லை. இம்மாதிரியான மனநிலையில்தான் மலேசிய நாட்டில் இருக்கிற ஊடகங்கள் பெண்களுக்கு ஆதரவு தருகின்றன.

தமிழ் நாட்டிலிருந்து ஏறக்குறைய இந்திய பெண்கள் புலம் பெயர்ந்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்களிடத்தில் ஒரு நீண்ட வரலாறு உண்டு. தொடக்க காலத்தில் இந்த மலேசிய மண்ணில் இந்திய பெண்கள் சேலை அணிந்துக்கொண்டுதான் வேலை செய்து வந்திருக்கிறார்கள். கால ஓட்டம் மாறுபட தோட்ட துண்டாடலுக்குப் பிறகு அங்கிருந்து நகரத்திற்கு வரும்போது அவர்களிடத்தில் சில பாதிப்புகள் ஏற்படத்தான் செய்தது. குறிப்பாக நகரச்சூழலோடு ஒத்துப்போக முடியாத சூழலை அவர்கள் கொண்டிருந்தார்கள். ஆனால், கால ஓட்டத்தில் மற்ற இனங்களோடு இணைந்து பழக தொடங்கியவுடன் அவர்களிடத்தில் ஒரு விழிப்புணர்வு உண்டாகத்தொடங்கியது. தங்களுக்கான அரசியல் உரிமை, சொத்துரிமை உள்ளிட்ட பல விஷயங்களை அவர்கள் தெரிந்துக்கொண்டார்கள். மலேசியாவைப் போன்று ஒரு கலவையான சமூகத்தில் வாழக்கூடிய சாதகமான விஷயமாக இது இருக்கிறது. இந்த நிலை இன்னும் வலுப்பெற வேண்டும் என்றால் தமிழ் பெண்கள் தமிழ் சார்ந்த இயங்களோடு பங்கு பெறாமல் தேசியம் சார்ந்த இயங்களில் பங்குப் பெற்றால், இன்னும் அவர்களின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *