புதியமாதவி மும்பை
நான் நாடகம் எழுதினேன்
ரசித்தவர்கள் என்னை நடிக்க வைத்தார்கள்
நடிப்பு ஒரு அற்புதமான கலை
ஒப்புக்கொண்டேன்.
வசனங்கள் மனப்பாடம் ஆனது.
ஒத்திகைகள் தேவையில்லை
மேடை ஏறிய தருணங்களில்
நாக்குகள் கீரிடங்களாக
ஒளிவட்டங்களாக
தலையைச் சுற்றி
ஓடிக்கொண்டிருந்தன.
திரைவிலகிய நேரம்
ஒப்பனைகள்
கர்த்தாக்களைக் கொலை செய்தன.
நிஜங்கள் நிழல்களின் ராஜ்யத்தில்
அடிமைகளாக இருந்ததை
உணர்ந்த தருணம் அது.
சாத்தான்கள் வேதம் ஓதலாம்
வேதங்களே சாத்தான் ஆகலாமா?
சிலுவையைச் சுமந்தபடி
ரத்தக்கறையுடன்
தொடரும் பயணத்தில்
பாவமன்னிப்புகள்
மறுக்கப்பட்டன.
சுயம் காயடிக்கப்பட்டது.
இந்தக் கல்லறையிலிருந்து
மீண்டும் விழித்தெழ
அந்த தேவனின் ராஜ்யம்
“பரிசுத்தப்படுவதாக”
ஆமென்