கரையில் தேடும் சிறுமி

                 தாட்சாயணி   (இலங்கை)              
நுரை சுழித்த
கடலின் கரையில்,
நீண்ட நாட்களாக
ஒரு சிறுமி வந்து போகிறாள்…!

அவள் எதைத் தேடுகிறாள்…?
சிப்பிகளும்,சோகிகளும்…
தேடும் வயதுதான்…

என்றாலும்,
அது குறித்த ஆர்வம்
அவளுக்கிருப்பதாய்
இன்னும் அறியப்படவில்லை!

அவள்
அலைகளுக்கிடையில்
நுரை பிடிக்க
முயற்சித்தாளுமில்லை!

நெடுந்துயர் விரவிக்கிடக்கிறது
அவள் விழிகளில்…

அவளறியாத எதையோ…
அவளிடமிருந்து யாரோ…
பறித்துவிட்டார்கள்…

அவளறிய…
அது என்னவென்று
தெரியவில்லை அவளுக்கு…

உலகில்
சிப்பிகளுக்கும்,சோகிகளுக்கும்
மேலாக…
எதுவோ இருக்கிறதுதான்…!

அவளறிய…
அது என்னவென்று
தெரியவில்லை அவளுக்கு…

நுரை சுழித்த
கடலின் கரையில்
அவள் எதையோ…
தேடிக்கொண்டிருக்கிறாள் !

                                -2012 சித்திரை, ஞானம்

1 Comment on “கரையில் தேடும் சிறுமி”

  1. இந்தச் சிறுமியைப் போல் இன்னும் எத்தனை எத்தனை சிறுமியர்! கொடூரமான ஒரு போர்ச் சூழலில் வயதையும் உடலையும் தாண்டி முதிர்ந்து/முறிந்துவிட்ட உள்ளத்துடன்…

    //நெடுந்துயர் விரவிக்கிடக்கிறது
    அவள் விழிகளில்…
    அவளறியாத எதையோ…
    அவளிடமிருந்து யாரோ…
    பறித்துவிட்டார்கள்…//

    உங்கள் கவி வரிகள் மிகுந்த வலிதருகின்றன தோழி. தொடருங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *