மணிமொழியின் இரண்டு தலைப்பிலி கவிதைகள்

– வீ.அ.மணிமொழி (மலேசியா)

திடீரென
முளைத்த மயிர்களை
வெட்ட நினைக்கிறேன்.
பொடுக்கள் பேன்களோடு
சீழ் வடிந்ததால் தடைப்பட்டது.

மயிர்கள் முளைத்துக் கொண்டே போக
மூக்கைப் பொத்த
வீசும் வாடை எனதருகில்
எவரும் வர மறுக்க செய்தது

மயிர்கள் என் கால் நுனி விரல்கள்
வரை வளர்ந்து விட்டது.
முனகிக்கொண்டே…
எல்லா கொச்ச வார்த்தைகளையும்
‘மயிரென்றேன்’
முளைத்த மயிர் சிக்குண்டது.

*******

பாவியை
சுமக்க வலிமையற்று
தெருவோரத்தை கண்ணீர் கொண்டு கழுவினேன்.

பாவி திட்டுகின்றது
கேள்விகள் கேட்கின்றது
அடிக்கின்றது…
அடையாளம் மறைத்த
இன்னொருத்தியை அழ வைக்கிறது.

கறுப்பு நிற பாவி கைத்தட்டி சிரிக்கிறது
பாவ முகத்தைக் காட்டி நடிக்கிறது
உறவை புதுபித்து கொள்கிறது

பாவியின் அட்டூழியங்கள் தாளாமல்
ரத்தம் சொட்ட சொட்ட
துண்டு துண்டாக வெட்டி
அம்மியில் அறைத்து
பெட்ரோல் ஊற்றி
என்னை கொழுத்தி காற்றில் ஊதிவிட்டாலும்
பாவியை மன்னிக்க முடியாது.

 jan 2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *