சமீலா யூசப் அலி (மாவனல்ல, இலங்கை)
ஆயிரம் யன்னல்களையும் அடித்துச்சாத்துங்கள்
இல்லை என்ற வார்த்தையை அள்ளி விடுங்கள்
ஒரு யாசகனின் திருவோடாய் வந்த என் இதயம்
இப்போதோ ஒரு ஈந்தளித்துக் களிக்கும் செம்மலாய்
மாறி விட்டது.ஒரு தொழுகைப்பாயில் உயர்த்தப்படும் கரங்கள்
ஏழுவானங்களொத்த வெகுமதிகளின்றி வெறுமையாய்
திருப்பப்படுவதில்லை.
என் றப்பே
நீ நினைக்காத ஒன்றை நான் அடையவோ
நீ நினைத்தவொன்றை நான் அடையாமலிருக்கவோ
முடியுமென நினைக்கும் அபத்தம் நானில்லை.
கஞ்சிக்கும் நாதியற்ற தெருவோர பக்கீர் நானாவுக்கும்
ஆட்டுக்கறி செரிக்க அரை மைல் நடக்கும் அக்பர் ஹாஜியாருக்கும்
உணவளித்துப் படியளக்கும் உன் கதவுகள்
யாரிடமும் ஏந்தாமலுனை மட்டும் இறைஞ்சும்
எனக்காகத் திறவாதா?
எல்லைகளின்றி ஒடிச்செல்லும் பெரு வெளியில்
ஒற்றைக்காலூன்றிக் காத்திருக்கிறேன்…
இடி இடித்துப்பெய்ந்தோடும் அடை மழையும்
சொர்க்கம் பிய்த்தெடுத்த துண்டொன்றும்
அனுப்பி வை.