படிமங்களாய் நிரம்பி வழியும் கிராமியங்களுக்குள் முதன்மை பெறுகிற ‘காலமில்லாக் காலம்’

 கிண்ணியா எஸ். பாயிஸா அலி

faiza  

கவிதைக்கான கிழக்குமாகாண சாகித்திய விருதினைப் பெற்றிருக்கிறது உயிர்மைப் பதிப்பக வெளியீடான சகோதரர் நபீலின் காலமில்லாக்காலம் கவிதைத்தொகுப்பு.“வாழ்க்கை என் கன்னத்தில் அறையும்போதெல்லாம் விழுந்து விடாமல் நிமிர்ந்து நிற்க எனது கவிதைகள் உதவுகின்றன”என்ற நபீலின் வரிகளை வாசிக்கையில் உணர்வுகளுக்குள் இழையோடிய இறுக்கமானது கவிதை தனக்கு இஸ்டமானவனின் மடிக்குள்தான் உட்கார்ந்து பால்குடித்து அவன்முகம் பார்த்துக் கொண்டிருக்கும். ஏன்று நான் கூறும்போதெல்லாம் அதுசரிதான்….அதுசரிதான்…என்று தலையாட்டிக் கொண்டிருக்கும் இந்த நபீலின்…..எனத்தொடர்கிற சோலைக்கிளியின் ஆகி க்குள் தளர்வடைந்து இயல்புநிலையை எய்தி விடுகிறது.

      சோலைக்கிளியின் முன்னுரை அணிந்துரைகள் சுவாரஷ்யம் நிறைந்தவை.அவரின் கவிதைகளை விடவும் அலாதியானதோர் ரசிப்புத் தன்மையை எமக்குள் கோரி நிற்பவை.

காலமில்லாக் காலத்தின் உட்பொதிவாய் செறிந்திருக்கும் 78 கவிதைகளும் அப்படியொன்றும் எம்மை ஒரே மூச்சிலெல்லாம் படித்துவிடமுடியாதென்கிறது நம்மிடம்.

நீண்ட காலமாகவே தேசியப்பத்திரிகைகளின் கவிதைப்பக்கங்களை அலங்கரித்த பெயர்தான் றிஸ்வியூ முஹம்மத் நபீல்.எனது வாசிப்புக்குள் அடங்கிய இவரின் மொத்தக் கவிதைகளுமே ஏறத்தாள 3 தொகுப்புகளுக்கானவை. ஆனாலும் அவையனைத்தையுமே இத்தொகுப்புக்குக்குள் திணித்துவிடாது நவீனமும் செறிவுமாய் பொறுக்கிச்சேர்த்திருக்கிறார்.நபீலின் இச்செயல் முதல்புத்தகம் போடமுனைகிற இளைய தலைமுறைக்கவிகளுக்கு சிறந்த முன்னுதாரணம்.

           faiza

காலமில்லாக் காலத்தின் அனேக கவிதைகள் பேசுகிற சங்கதிகள் சாதாரண சம்பவங்களின் நுணுக்கமான பதிவுகள்.மாற்றுப்பார்வை.முதல்வாசிப்பிற்குள் பிடிபடாதவைகள் மறுபார்வைக்குள் பிரமாண்டங்களை வரவழைக்கிறது. அபூர்வமான கணங்களைத் தொட விழைகிறது.பேச்சுமொழியை அண்மித்ததான நிறையச் சொல்லாடல்கள் கவிதைக்குள் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன.

பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்குமான இடைவெளி குறைந்திருத்தல்கூட நவீனத்துவத்தின் இயல்புகளிலொன்றுதானே.

சட்டியில் போட்டு வறுக்கிறாய் …..   முறுகுவதாயில்லை மனது

மண்குடத்தில் நீரெடுத்து……பழஞ்சோறு கரைத்து

உலையில் கிடந்து வேகிறது…புழுங்கல் அரிசி…..

வாப்பாவின் பசி அடங்கலாக…

போன்ற பல வரிகள் இந்த இயல்போடு ஒன்றிப் போகிறது.தான் வாழுகின்ற சூழலையும் அதோடு ஒட்டிக்கிடக்கின்ற பாரம்பரியங்களயும் தன் எழுத்திலிருந்தும் ஒரேயடியாய் ஒதுக்கிச் செயற்பட ஓரு படைப்பாளியால் முடியாது. தான் சார்ந்த சமூகத்தையும் அதன் பிரச்சனைகளையும் தன்னோடும் எழுத்தோடும் இணைத்துச் செயற்படுபவன்தான் படைப்பாளி.நபீலின் கவிதைகளும் பாரம்பரியங்களோடும் சூழலோடும் இணைந்தே பயணப்படுகின்றன.

               கடலோடும் வயலோடும் இணைந்த வாழ்க்கைமுறைதான் எத்தனை ரம்மியமும் அழகும் நிறைந்தவை. ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நெய்தல் மருதநிலமக்களின் வாழ்வியலுக்குள் இழையோடிக்கிடக்கிற அன்பு காதல் சோகம் முயற்சி எதிர்பார்ப்புகள் அனைத்தையுமே நேரடியாகப்பேசாவிடினும் மெலிதான இழைபோலே எல்லாக்கவிதைகளிலும் உள்ளோட விட்டிருக்கிறார் கவிஞர்.

பெரும்பாலான கவிதைகளுக்குள் கடல் வளர்கிறது முழம்முழமாய்….கூந்தல் விரிக்கிறது…செவியெரிய ஓசையெழுப்புகிறது…….வெள்ளமும் நுரையுமாய் சிலிர்க்கிறது…சுழியோடுகிறது…..இறக்க மட்டுமே தெரிந்த மீன்களை நெளிந்து விளையாட அனுமதிக்கிறது…கருமுகிலை விழுங்கிய பறவைகளுக்காய் கரையைக் கடிந்துரைக்கிறது…நரி ஊளையிடும் மயானமாகிப் பற்றியெரிகிறது….நிராகரிப்பின் வடுக்கள் செரிக்காமல் ஓங்காரிக்கிறது….

இப்படிப் பலவிதமாய் பரிணாமங்கொள்ளும் கடலை நோக்கி *இதற்குமுன்னர் பார்த்ததே இல்லை நான்* எனும் சுனாமி தொடர்பான கவிதையில் இப்படிக்கூறுகிறார் கவிஞர்:

இதோ கிடக்கிறது கயிறு

உன் கூந்தலை

அள்ளி முடிந்துகொள் கடலே.

அது என்ன கயிறெனச் சொன்னால் எம்போன்ற கரையோர வாசிகளுக்குப் பேருதவியாக இருக்குமே.

அடுத்து வயல்சார் வாழ்வியல் வெகுஅழகாய் படிமப்படுத்தப்பட்டிருக்கும் கவிதை பனிமூசை.

இதில் வரும் அனேக வரிகள் செறிவானவை. வசீகரமானவை.

குலுங்கியாடும் கொண்டையில் நசல் வந்து….

உடல் வளிறிக் குனிந்த என்குமர் நிமிரவேயில்லை இன்னும்…

தயிர்ச்சட்டி போலிருந்த வயலில்…

போன்றவை வித்தியாசமான கற்பனை. பித்தம் போன்ற கவிதைகளில் மழை பிரசங்கம் செய்கிறது.

மேலும் மண்புடவை சவுக்குநார் போன்றவை யுத்தஅவலம் பற்றிப்பேசுகிறது.

அவசரத்துக்கென்று உடுத்துக் கொள்ள

மண் புடவையாகி; மசிந்து கிடக்கிறது.

விரட்டப் படுதலின் கொடுவலிக்குள் மனசு புதைந்து போகிறவரிகள்.

கவிஞரின் மென்மனசு புலப்படுகிற இன்னொரு கவிதை மீன்முள்

வருத்தப் படுவாயோ என்ற அடைமொழி

வலிக்கிறது.

உண்மைதான, ஒரேயொரு அடைமொழிக்காய் வாழ்நாள் முழுதும் மீன்முள்ளின் அவஸ்தைகளைத் தாங்கி வாழும் தொண்டைக்குழிகள்தான் நிகழ்வில் எத்தனையெத்தனை?

பிள்ளைப்பருவத் தோழமையொன்றின் அழியாநினைவுளை ஈரமாய் முன்வைக்கிறது தக்காளிமணிகள்.

குருவிச்சம் பூப்பறித்துத் தருவேன்

‘சுள்’ என்று புளியடித்துக் கண்கூசி நிற்பாய்

பச்சைப்பிடிக்குள் திமிறும் சிவப்பரிவாள் போன்ற ஒட்டி(குருவிச்சம்)ப்பூவின் புளிப்புச்சுவை அவ்வளவு எளிதில் மறந்திடுமா என்ன? நான் விரும்பிப் படித்த அழகான கவிதை. இதுபோல கூனிப்பெத்தா

கிராமத்துமூதாட்டி தொடர்பான வர்ணனை.அல்லுக்குத்தும் பூட்டுக்காப்பும் அணிந்தபடி வெற்றிலை இடிக்கும் சப்தம் உம்மம்மாவின் நினைவுகளை நெஞ்சுக்குள் கிளரிப் போகிறது.

             இப்படியாய் நினைவில் பதிந்துவிடக்கூடிய பல வரிகள் ஏராளமுண்டு இத்தொகுப்பினுள். கவிஞர் வாழும் சூழலையொட்டியே எனது பிரதேசமுமென்பதால் கவிதைகள்தொடர்பானபுரிதலில்இடரேற்படவில்லை. எனினும் இச்சூழல்சாராத வாசகரும் எளிதில் உணர்ந்து கொள்ளக்கூடியதாய் கவிதைக்குள் இவர் தெளித்திருக்கும் புழங்குமொழிகளுக்குப் பின்னிணைப்பாய் பொருள் தந்திருக்கின்றமை பாராட்டுக்குரியது.

உண்மையில் இந்தப் புழங்குமொழிகளே கவிதையின் உயிர்ப்பையும் செழுமையையும் தீர்மானித்திருப்பதைக் கூறித்தானாக வேண்டும்.படிமங்களாய் நிரம்பி வழியும் கிராமியங்களுக்குள்தான் முதன்மை பெற்றிருக்கிறது காலமில்லாக்காலம் ;.

                     எனினும் ‘பூவின் மீதுஏறிவந்த வெறிக்குதிரை’, ‘தீ மதுவருந்தும் ஓவியம்’, ‘பல்லிப்பா’ போன்ற கவிதைகள் புரிந்து கொள்ளலில் அயர்வையும் புரியாத் தன்மையையும் ஏற்படுத்துபவையாயுள்ளன. இக்கவிதைகளுக்குள் வாசகன்நுழைவதற்கான எல்லா வழிகளையுமா அடைத்துப்போட வேண்டும் மயக்கமான சொற்தேர்வுகளால்?என நாம் வினவினால் புரிதலை நோக்கிய தனது பார்வையைக் கூர்மைப் படுத்திக் கொள்ள வேண்டிய வாசகனின் பொறுப்பைச்சுட்டி நிற்கின்ற புரிதலும் புரியாமையும் வாசகனின் பணிவிலும் முயற்சியிலும் இருக்கிறது என்ற அறிஞர் என்.எஸ்.ஜெகந்நாதனின் வரிகளை நமக்கு நினைவூட்டுவார்போலும் கவிஞர்.

 இவைகளையெல்லாந் தாண்டிக் காலமில்லாக் காலமிதைக் கையிலெடுக்கிற எவருக்கும் தொகுப்பின் மொத்தக் கவிதைகளுமே முடிந்துபோகிற தருணங்களில் உணர்வுகளுக்குள் அது விட்டுச் செல்கின்ற மெலிதான கீறலின்வலிதனை சிறிதுநேரம்முகம்புதைந்தே ஆற்றுப்படுத்த வேண்டியிருந்திருக்கும் அட்டைப்படம்போலே.

  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *