மாவோயிஸ்டுகள் பயன்படுத்தும் தமிழின் கிளை மொழி கோண்டி!

மனித மனத்தைப் பாழாக்கும் கல்வியை அதாவது தற்போது நாடெங்கும் அரசு வழங்கும் கல்வியை படித்தால்தான் என்ன படிக்காவிட்டால்தான் என்ன? அதனால் நாங்களே அடர்ந்த வனங்களுக்குள் மரத்தடியில் அவர்களுக்குக் கல்வியை, துணைக்கல்வியை, சிந்திக்கும் கல்வியை வழங்குகிறோம் என்கின்றனர்.

மாவோயிஸ்டுகளை பொறுத்தளவில் தவறானவர்களாகத் தெரியவில்லை. தவறான பாதையில் செல்பவர்களாகத்தான் தெரிகிறார்கள். ஆளும், ஆளவரும், ஆளத்துடிக்கும் நம்மூர் அரசியல் இயக்கங்களை விட அவர்கள் தெளிவாகவே உள்ளனர். அவர்கள் பொய்யான வாக்குறுதி எதையும் அளிப்பதில்லை. ஊழலில் திளைப்பதில்லை. ஏறெடுத்துப் பார்க்காத அரசு எந்திரங்களின் போக்கிலிருந்து மக்களைப் பார்ப்பதில் மாறுபட்டு நிற்பவர்கள். இன்னும் நிறைய கூறலாம். எனினும் சமீபத்தில் வெளியான ஒரு செய்தியே அவர்களின் சமூகப் பொறுப்பை மத்திய அரசே வெட்கப்படும்படி அமைந்துள்ளதை அறிந்தபோது, அணி சேராத இதழாளன் எனக்கு அவர்கள் மீது இன்னும் கூடுதலான மரியாதையை உருவாக்கியுள்ளது. ஆயுதந் தாங்கி போராடும் அவர்களின் வழிமுறைகளையும் தாண்டி சமூக பொறுப்புணர்வு மெச்சத்தக்கன.
 

மாவோயிஸ்டுகள் கருவி தாங்கி அரசின் துணை இராணுவப் படைகளை அடிக்கடி எதிர்கொள்வது ஒருபுறம் நடந்தாலும், உள்துறை அமைச்சரே சுட்டிக்காட்டி பேசும் வகையில் அவர்கள் அரசுக் கட்டித் தந்த பள்ளிகளை இடிப்பது தொடர்பாக ஒரு தகவல் உண்டு. அவர்கள் பள்ளிக் கட்டிடங்களை தகர்ப்பது உண்மை. ஏனெனில், பயன்படாத ஒன்றைத் தாங்கள் தகர்ப்பதாகச் செய்திகள் வருவது எவ்வளவு உண்மையோ அவ்வாறுதான் அப்பள்ளிகள் பழங்குடி மக்களுக்கு பயன்படவில்லை என்பதும் உண்மை. அங்கு அரசு அமர்த்தும் ஆசிரியர்களுக்கு பழங்குடி மக்களின் மொழியில் பாடம் நடத்தத் தெரியவில்லை. அத்துடன் பள்ளிகளைக் காரணம் வைத்து வருகை தரும் அதிகாரிகளும் பழங்குடி மக்களை முகம் சுழித்து ஏளனப்படுத்துவதுபோல், பாராமுகம் காட்டுவது, அவர்களை, அவர்கள் மொழியை மதிப்பதில்லை என்பன போன்ற காரணங்களாலும், மேலும் பள்ளிக் கட்டிடத்தில் பாதுகாப்பு படையினர் அவ்வப்போது தங்குவதற்குப் பயன்படுத்துவதாலும்தான் அதைத் தகர்ப்பதாகக் கூறுகின்றனர்.ப்படித் தகர்ப்பதால் பழங்குடி மக்களின் பிள்ளைகள் கல்வி பாழாகாதா என்ற கேள்விக்கு மனித மனத்தைப் பாழாக்கும் கல்வியை அதாவது தற்போது நாடெங்கும் அரசு வழங்கும் கல்வியை படித்தால்தான் என்ன படிக்காவிட்டால்தான் என்ன? அதனால் நாங்களே அடர்ந்த வனங்களுக்குள் மரத்தடியில் அவர்களுக்குக் கல்வியை, துணைக்கல்வியை, சிந்திக்கும் கல்வியை வழங்குகிறோம் என்கின்றனர். பழங்குடிகளின் இளம் தலைமுறையினர்க்கு சிந்திக்கும் கல்வியை வழங்குவதாக மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர்.

கல்வி வழங்குவதைக் கருவி தாங்கிய போருக்கிடையே உள்ள முக்கிய கடமை என்றும் கூறுகின்றனர். அதற்கேற்ப, சட்டீஸ்கர் வனப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு பழங்குடி குழந்தைக்கும் கணிதம் – சமூக அறிவியல் – அரசியல் – பாடங்களை, கோண்டி மொழியில் தயாரான பள்ளிப் பாடநூல்களைத் தற்போது தருகின்றனர்.கோண்டி மொழி என்பது தமிழ் மொழியின் கிளை மொழிகளில் ஒன்று என்பது இங்கு மிகமிக முக்கிய சேதியாகும். குறிப்பாக தமிழ் மொழிக் குடும்பத்தில் இருவகை பிரிவுண்டு. ஒன்று: இலக்கியம் படைக்கவும், இலக்கணமுள்ளதும், பேசவும் எழுதவுமான மேம்பட்ட மொழி. இரண்டு: வெறும் இனக் குழுக்களிடையே மட்டும் பேசவும், இலக்கியம் படைக்க திறனற்றதான மொழி. இந்த இரண்டு வகை மொழிக்கூட்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளுக்கு தனித்தனியே வரிவடிவம் அதாவது எழுத்துருக்கள் உண்டு. இலக்கணமும் உண்டு. இலக்கியங்களும் உண்டு.
ஆனால் ஏனைய தமிழின் கிளை மொழிகளான தோடா, கோத்தர், படுகு, கேடகு, வர, கொலமி, நயினி, பருஹுய், பர்கி, ஒல்லரி, குய்ய, கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, குருக், மோஸ்ரா போன்றவற்றிற்கு பேச்சு வழக்கு உண்டே தவிர, இலக்கியப் படைப்பு இல்லை. எல்லாவற்றிலும் வாய்மொழி வழக்காறுகள் உண்டு. இதுபோன்ற கிளை மொழிகளை அவை பேசும் நிலத்தை வைத்து மொழியியலாளர்கள் வகைப்டுத்தியுள்ளனர்.

ஆப்கான் எல்லையோரம் உள்ள பலுசிஸ்தானில் பேசப்படும் தமிழ்மொழிக் குடும்பத்து ப்ருஹுய் வட இந்திய தமிழ்மொழிகளில் ஒன்று. அதைப்போல், மத்திய இந்திய தமிழ்மொழிக் குடும்பத்திலுள்ளவை பர்ஜி, ஒல்லரி, குய்யி, கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, கோய், குரூக், மோஸ்ரா முதலியவை. தென்னிந்திய தமிழ் மொழிகளாக தோடா, கோத்தர், படுகு, கேடகு, வரகொலமி, நயினி, இருளிகா போன்றவை உள்ளன.அதிலும் தமிழ்மொழிக் குடும்பத்தின் தொன்மையான தாய்மொழியான தமிழ் தன் கிளை மொழிகளான, அதாவது சேய் மொழியான பழங்குடி மொழி ஒன்று இத்தனை நாட்கள் இலக்கியம் படைக்க இயலாத அதன் நிலையில் மாற்றம் கண்டதென்பது பழங்குடி மொழியின் எழுச்சியாகத்தான் கருத வேண்டும். இதனால் தமிழரும் பெருமை கொள்வர். 

தமிழ்மொழி இயல் அறிஞர்கள் உட்பட, ஆய்வாளர்கள் அனைவரும் பேருவகைக் கொள்ளத்தக்க செயல் இது. தற்போது புத்துயிர் பெற்றுள்ள தமிழ்க் கிளைமொழியாம் கோண்டியில் அடிப்படைக் கல்வி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து பழங்குடி குழந்தைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மொழியை அறியவும் அதனைப் பயன்படுத்தி சிந்திக்கவும் ஏராளமான கதை, வரலாறு, கலை, பண்பாடு, உயிரியல் போன்ற முக்கியப் பிரிவுகளில் நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தற்போதுள்ள எண்மின் அசைவுபடகுலுவூட்டி குறும்படங்கள் எனவும் காட்சிப் படங்களைத் தயாரித்துள்ளனராம். ஒன்று முதல் ஐந்து வரை கோண்டி மொழி கற்பித்தல் மொழி. சட்டீஸ்கரி, கோர்கு, ஹலபி, துர்குகா போன்ற இதர மத்திய இந்திய சிறுபான்மை பழங்குடி மொழி பேசும் குழந்தைகள் உட்பட தொடக்கக்கல்வி  மொழியான கோண்டியில்தான் படிக்க வேண்டும். பின்னரே உயர்நிலை அறிவியல் எதிர்காலத்தை உணர்த்தும் விதமான பாடங்களை ஆறு முதல் பத்து வரை இந்தியில் கற்கவும் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்.பலமொழி பேசும் பழங்குடிகள் மத்தியில் கோண்டி பேசுவோர் மட்டும் 27 இலட்சம் பேர் உள்ளனர்.

தண்டகாருண்யம் பகுதியில் ஆகப் பெரும்பான்மை மொழியாக கோண்டி மொழி உள்ளது. இதனையே ஒட்டுமொத்த மாவோயிஸ்ட்  இயக்கமும் தங்கள் தொடர்பு மொழியாகக் கொண்டுள்ளனர். மாவோயிஸ்டுகளிடம் பேச வேண்டுமென அரசு நினைத்தாலும் கோண்டி மொழி தெரிந்த அதிகாரிகள் சென்றால்தான் பேச முடியும். பேச்சுவார்த்தை நடத்திட முடியும்.பழங்குடி மொழி, பண்பாடுகளைப் பாதுகாத்து அவைகளை மேம்படுத்த வேண்டிய மத்திய மாநில அரசின் அலுவலர்கள் கடந்த காலங்களில் தங்களுக்குக் கடமை என அறிவுறுத்தப்பட்ட இதுபோன்ற எதனையும் செய்யவில்லை. அத்துடன் உயர் அலுவலர்கள் பழங்குடிகள் மீதும், அவர்கள் மொழியின் மீதும் காட்டிய வெறுப்புணர்வை, கேலி, கிண்டலைப் பலகாலம் பொறுத்த மக்களுக்கு, மாவோயிஸ்டுகளின் அணுகுமுறையும்,  அவர்களால் தங்கள் மொழி, பண்பாடு, வாழ்க்கை வாழ்விடம் உள்ளிட்டு காக்கப்படும் என்ற நம்பிக்கை வரும்போது அங்கே அரசு எப்படி நுழைய இயலும். குதிரையை வெளியில் விட்டு பட்டியைப் பூட்டுவது போல, வண்டிக்குப் பின்னால் மாட்டைக் கட்டுவது போல் அரசின் திட்டங்கள் யாவும் உள்ளன. அதனால் பிரச்சனை பலவும் முளைத்து, கிளைத்து, மரபாக ஓங்கி வளர்ந்த பின்னர், அரசுகள் இப்போது திடீரென்று முழித்து, கருவி தூக்கிக் கொண்டு அப்படி செய்கிறேன் பார்! இப்படி செய்கிறேன் பார்! என அரற்றுவது வீண்.சூன் மாதம் பழங்குடி மொழிகள் தொடர்பான இந்திய அளவிலான கருத்தரங்கை மைசூரிலுள்ள மத்திய மொழி ஆய்வு மையம் நடத்தியுள்ளது. இதில் தமிழ் கிளைமொழிகளின் நிலை, கோண்டி மொழியில் ஏற்பட்டு வரும் மாற்றம் தொடர்பாகவும், ஆய்வு செய்துள்ளது.பழங்குடிகளின் மண்ணை வேறொருவர் விலை கொடுத்து வாங்குவதையும், பிறர் அந்நிலங்களைப் பயன்படுத்துவதையும் தடை செய்து முறைப்படுத்தும் தேசியப் பழங்குடி நிலச் சட்டம் 2004 இன்னமும் நிறைவேற்றப்படாமல் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தயவால் அரசு தாலாட்டுப் பாடி தூங்க வைத்துள்ளது. 2002-ல் பழங்குடிகள் பிரச்னை பல அறிவாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டபோது 2004-ல் என்.டி.ஏ.,

அரசு இதற்கான சட்ட முன்வரைவை உருவாக்கியது. இது அன்றே நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தக் காரணமே பழங்குடி நிலங்கள் சல்வாஜூடும் என்கிற ஐந்தாம் படையால் ஆக்ரமிக்கப்பட்டு அங்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரங்கம் அமைத்த பின்னர் இந்தச் சட்டம் வெளியானால் அதற்கேற்ப சிற்சில மாறுதல்களைச் செய்துகொள்ளவே இந்தத் தாமதம். தற்போது முறன் பெரிதாக ஆகிவிட்டதால் மாவோயிஸ்டுகள் செல்வாக்கை குறைத்திட இந்தச் சட்டத்தை எப்படி பயன்படுத்தலாம் என்ற ஆய்வில் அமைச்சரவை இறங்கியுள்ளது போலும்!சமீபத்தில் இந்தத் துறை அமைச்சர் காந்திலால் பூரியா எப்படியாவது கிடப்பில் உள்ளதை நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சித்து வருகிறார். வரக்கூடிய புதிய சட்ட விதிகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான அம்சம் இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில் மண்ணையும் காத்து, மொழியையும் காத்து, அறிவையும் தந்து, வாழவும் வழி செய்து, அங்கு மக்கள் அரசு என்பதையும் அமைத்து பழங்குடி குழந்தைகள் இதர இந்தியக் குழந்தைகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர்களல்ல. அவர்களை அடுத்து வரும் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றி வருகின்றனர் மாவோயிஸ்டுகள். இதனால்தான் அவர்கள் இதர பழங்குடி பகுதிகளிலும் ஆழமாக வேரூன்றி வருகின்றனர். அரசும் தற்போதுதான் இதனை உணர்ந்துள்ளது. அரசு விட்ட இடத்தை அவர்கள் நிரப்பி வருகின்றனர் என்பதே இன்றைய நிலை. எப்படியோ துவக்கு ஓசைகளுக்கும் நடுவே தமிழ்க் கிளைமொழியும் ஒன்று துளிர்விடத் தொடங்கியுள்ளது.

நன்றி க. குணசேகரன்,நட்பூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *