வாடகைத் தாய் பற்றி

சரோகசி (Surrogacy) என்றால் என்ன

ஒரு பெண் இன்னொரு பெண்ணின் கர்ப்பத்தைத் தாங்கி குழந்தையைப் பெற்று எடுப்பது தான் சரோகசி.

சரோகசி என்கிற இந்த சொல் surrogatus என்கிற இலத்தீன் மொழி வார்த்தையிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் ‘ஒருவருக்கு பதிலாக’ அல்லது ‘ஒருவரின் இடத்தில்’ என்பது.

ஒரு பெண் தன் கர்ப்பப்பையை இன்னொருவரின் கர்ப்பத்தைத் தாங்குவதற்காக பயன்படுத்துவதுதான் இந்த சரோகசி.

இப்படி இன்னொருவரது கர்ப்பத்தைத் தாங்கும் பெண்ணை சரோகேட்  மதர் அல்லது வாடகைத் தாய் என்கிறார்கள். மரபியல் மூலமாக வாடகைத் தாய்க்கும் அவர் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்காது.

வாடகை கர்ப்பப்பையை ஏன் நாட வேண்டும்?

பல முறை ஐ.வி.எஃப் முறை செய்தும் ஒரு பெண்ணால் கர்ப்பம் தரிக்கமுடியாமல் போகிறது. சில சமயங்களில், பெண்ணின் கர்ப்பப்பை, கர்ப்பத்தை 10 மாதங்கள் தாங்க முடியாதபடி பலவீனமாக இருக்கும் போது, அல்லது கர்ப்பப்பை தொற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி கர்ப்பம் தரிக்கமுடியாமல் போகும் போதும் இன்னொரு பெண்ணின் உதவியுடன் தன் குழந்தையை பெற்றெடுக்க ஒரு பெண் விரும்பலாம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) இந்த சரோகசி முறைக்கு பல விதிமுறைகளை நடைமுறைப் படுத்தியுள்ளது

ஒரு பெண்ணால் உடல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் குழந்தை பெறமுடியாமல் போகும் போது மட்டுமே அந்தப் பெண்ணின் அனுமதியுடன் சரோகசி சிபாரிசு செய்யப்பட வேண்டும்.

வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தை, ‘Deoxyribo Nucleic Acid’ எனப்படும் டி. ஏன்.எ. பரிசோதனை மூலம் இன்னாரின் குழந்தை என்று நிரூபிக்கப் பட வேண்டும். இல்லாத பட்சத்தில் அந்தக் குழந்தை உருவாகக் காரணமாக இருந்த உயிரியல் பெற்றோர்கள் (biological parents) அக்குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

கர்ப்ப காலத்தில் வாடகைத் தாய்க்கு கொடுக்கப்படும் பண உதவிக்கு ஆவணச் சான்றுகள் இருக்க வேண்டும். அவருக்கு கர்ப்பத்தினால் ஏற்படும் செலவுகள் அனைத்தையும் ஈடு செய்யும் அளவுக்கு பண உதவி அளிக்கப் படவேண்டும்.

ஒரு பெண் மூன்று தடவைக்கு மேல் தன் கர்ப்பப்பையை வாடகைக்குக் கொடுக்கக் கூடாது.

வாடகைத் தாயை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?

நம் நாட்டில் சரோகசிக்கென்றே இருக்கும் பல அமைப்புகளும், மகப்பேறு மருத்துவர்களும்   குழந்தைப்பேறு இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு இந்த சரோகசி முறையைப் பற்றி சொல்லுகிறார்கள்.

அவர்களின் சம்மதத்திற்குப் பிறகு இந்த அமைப்புகளின் கவுன்சிலர்கள்  வாடகைத் தாயாக ஆவதற்கு தயாராக இருக்கும் பெண்களிடம் பல முறை பேசுகிறார்கள். இந்த முறையை பற்றிய முழு விவரமும் அவர்களுக்கு சொல்லி அவர்களது சம்மதத்தை எழுதி வாங்குகிறார்கள். இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்ட பிறகே இம்முறை செயல் வடிவம் பெறுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் லாபம். ஒரு பெண்ணுக்கு குழந்தையும், இன்னொருவருக்கு பணமும் கிடைக்கிறது.

இந்த சரோகசி முறை இயற்கையில் கர்ப்பம் தரிக்க முடியாத, கர்ப்பப் பை பலவீனமாக இருக்கும்  பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். அதே போல வறுமையில் இருக்கும் பெண்களுக்கும் இப்படி கர்ப்பபையை வாடகைக்குக் கொடுப்பதில் நல்ல வருமானம் கிடைக்கிறது. கர்ப்ப காலம் முழுமைக்கும் ஆயுள் காப்பீடும், ஒரு மாதத்திற்கு 3000 ரூபாயும், குழந்தை பிறந்த பிறகு 2.5 லட்ச ரூபாயும் வாடகைத் தாய்மார்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

தற்சமயம் நம் நாட்டில் இந்த முறையை ஒழுங்கு படுத்த சட்டம் இல்லை. இந்திய ஜனத் தொகையில் கிட்டத்தட்ட 10 % மக்கள் மலட்டுத் தன்மையால் பாதிக்கப் பட்டுள்ளனர். சரோகசி முறையை சரிவரப் பயன்படுத்தினால் பல பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

இந்தியா போன்ற பழமையில் ஊறிய நாடுகளில் இம்முறை சிறிது தாழ்ந்த கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்படுகிறது.

ஆமீர் கானைப் போன்ற பிரபலங்கள் வெளிப்படையாக தங்களுக்கு இம்முறையில் குழந்தை பிறந்ததைப் பற்றிக் கூறும் போது பழமையில் ஊறிய மனங்களும் மாறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

ஆதாரம் : ஏடூஜெட்தமிழ்நாடு

கூடுதல் செய்தி : இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கான் மூன்றாவது குழந்தை இப்படி ஒரு வாடகைத்தாய் மூலம் பிறந்தது என்ற செய்தி சென்ற ஆண்டு வட இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

குழந்தை ஷாருக்கானின் ரத்தம்தான் ஆனால் ஷாருக்கானின் மனைவி காவ்ரிக்கு அதில் பங்கு இல்லை .

சரியோ தப்போ இந்த வாடகைத்தாய் ஏற்பட்டால் ஒரு குடும்பத்தில் ஏற்படப் போகும் உளவியல் சிக்கல்களை யாரால் தீர்க்க முடியும் ? இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டாரின் கருவை தன் வயிற்றில் ஏற்று பத்து மாதம் சுமந்து பெற்று கொடுத்துவிட்டு, ஆயுள் முழுவதும் அந்த குழந்தையின் மீது எந்த உரிமையும் கோர முடியாத அந்தப் பரிதாபகரமான பெண்ணின் வேதனைக்கு யாரால் பதில் சொல்ல முடியும் ?

இனி, குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு வைத்தியத் துறையின் நவீன சிகிச்சை முறைகள் என்ன என்பதையும், அவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையா? என்பதையும் பார்ப்போம்.

செயற்கை கருத்தரிப்பு முறைகள்.

தம்பதியினரில் கணவன் அல்லது மனைவியிடம் உடல் ரீதியான குறைபாடுகள் அதாவது பெண்ணின் முட்டையின் வளர்ச்சி போதாமை, பெண்ணின் கருவறைச் சுவரின் கலங்கள் வேறு இடத்தில் வளர்ந்து காணப்படுதல் இதற்கு பெரிட்டோனிட்டிஸ்  (Peritonitis) கோளாறு என்பர். இதனால் கருத்தரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் குறைவு. மேலும், பெண்களில் கருக்கட்டல் நடைபெறக்கூடிய பலோபியன் குழாயின் சிதைவு, ஆண்களின் விந்துக்களின் தரக் குறைவு ஆகிய காரணங்களால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகின்றது.

இங்கு ஒன்றை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது அல்லாஹ் நாடினால் எந்தக் குறைபாடு இருந்தாலும் குழந்தை பாக்கியம் அமையும். சிலர் எந்தவித குறைபாடுகள் அற்றவர்களாக இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கின்றனர்.

வானங்கள் மற்றும் புமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகின்றான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்ககிறான். அவன் அறிந்தவன். ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 42: 49,50)

இரு வகையான செயற்கை கருத்தரிப்பு முறைகளாவன:

Intrauterine insemination (IUI) – செயற்கை விந்தூட்டல் முறை

இது ஒரு செயற்கை கருத்தரிப்பு முறையாகும். இம் முறையில் ஆணிடமிருந்து பெறப்பட்ட விந்து மாதிரி ஆய்வு கூட செயல் முறையின் மூலம் பரிசோதிக்கப்பட்டு மிக வேகமாக நகரும் விந்து ஏனைய குறைவாக நகரக்கூடிய விந்துக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு  நேரடியாக கருப்பை வாய் அல்லது கருப்பை அல்லது பலோபியன் குழாய் ஆகிய ஏதேனும் ஒன்றினுள் பெண்ணின் மாதாவிடாய் சக்கரத்தின் முட்டை வெளியாகும் காலப்பகுதியைக் கணித்து கருவியின் உதவியுடன் உட்செலுத்தப்படும்.

இம் முறையின் மூலம் விந்து எந்தவித தடங்களும் இல்லாமல் குறைவான தூரத்தில் பயணம் செய்யக்கூடியதாக இருக்கும். இயற்கையான முறையை விட இம் முறையில் கருத்தரிப்பு சாத்தியங்கள் அதிகமாகக் காணப்படும். கருப்பையில் விந்து வைக்கப்படுவதே இம் முறையின் விஷேட நிகழ்வாகும்.

இம் முறையினால் ஏற்படும் கர்ப விகிதமானது இதற்குப் பயன்படுத்தப்படும் அதி உயர் தொழிநுட்பத்தின் அளவுக்கு இல்லாவிடினும் இம்முறையானது மலட்டுத் தன்மை உடையவர்களுக்கு (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்) ஒரு திறவுகோளாக அமைந்திருக்கின்றது.

In Vitro Fertilization (IVF) – Test tube pregnancy  – பரிசோதனைக்குழாய் குழந்தை.

இதுவும் ஒரு செயற்கை கருத்தரிப்பு முறையாகும். இச் செயல்முறையின் மூலம் செயற்கையான கருக்கட்டல் மனித உடலுக்கு வெளியே ஆய்வுகூடத்தின் சோதனைக் குழாயில் நடைபெறுகின்றது. இதனாலேயே இம் முறையில் பிறக்கும் குழந்தை Test tube Baby என அழைக்கப்படுகின்றது.

இம்முறை பலோபியன் குழாய் சேதமடைந்தவர்களுக்கும், முன்னர் குறிப்பிட்ட IUI முறையின் கீழ் சிகிச்சை பெற்று சிகிச்சை பயனளிக்காதவர்களக்கும், ஏனைய சில காரணங்களால் கருத்தரிப்பு அடையாதவர்களுக்கும் உகந்தது. வைத்தியர்களின் ஆலோசனை இம்முறையில் சிகிச்சை பெறும் பெண்கள் 38 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதே சிறந்தது. இது மிகவும் சிக்கலான செயல்முறையாகவும், அதிகமான செலவையும், நேரத்தையும் கொண்டதாகவும் இருக்கின்றது. இச் சிகிச்சை முறை வெற்றி அளிக்கக்கூடிய விகிதம் 15-30% ஆகும்.

இச் சிகிச்சை முறைக்கு தம்பதியினர் ஏற்றவர்கள் என முடிவு செய்யப்பட்ட பின் விந்து பகுப்பாய்வு (semen analysis) விந்து கலாச்சாரம் (semen culture), ஹார்மோன் சார் மதிப்பீடு, மாதவிடாய் சுழற்சி மதிப்பீடு ஆகிய சோதனைகள் மேற்கொள்ளப்படும். பெண்ணின் முட்டைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க மருந்துகள் கொடுக்கப்படும். இதனால் பல தகுந்த வளர்ச்சியடைந்த முட்டைகள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படுகின்றன.

இவற்றில் ஒன்று முதலில் குறிப்பிட்டது போல் பிரித்தெடுக்கப்பட்ட வேகமாக நகரக்கூடிய விந்துடன்  சோதனைக்குழாயில் கருக்கட்டச் செய்யப்பட்டு வெற்றிகரமாக கருவறையில் உள்வைக்கப்படும். கருவின் வளர;ச்சியின் முன்னேற்றம் பெண்ணின் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை அல்லது செவி உணரா ஒலி (ultrasound) மூலம் கணிக்கப்படுகின்றது.

செயற்கை முறையினால் கூட கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லாதவர்கள்.

சில தம்பதியினருக்கிடையே சில நிரந்தரமான குறைபாடுகள் காணப்படலாம். அதாவது கணவனின் விந்தின் செயற்பாடு போதாமை, ஹார்மோன் சமனிலையின்மை, இன்னும் ஏராளாமான கெட்ட பழக்க வழக்கங்களின் மூலம் ஏற்படும் குறைபாடுகள், மனைவியின் முட்டை தகுந்த வளர்ச்சியடைந்து காணப்படாமை, ஹார்மோன் சமநிலையின்மை, பாதிக்கப்பட்ட சூலகங்கள், பலோபியன் குழாய்களில் ஏற்படும் பாதிப்பு,  Endometriosis கோளாறுகள் (கருவறைச் சுவரின் கலங்கள் வேறு இடத்தில் வளர;ச்சியடைதல்), கருப்பையில் ஏற்படும் கட்டிகள் (Polycystic ovary syndrome) போன்ற காரணங்களால் ஒரு பெண் செயற்கை முறைகளாலும் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்களை இழக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

ஆகையால் தற்போதைய நவீன தொழிநுட்ப வளர்ச்சியில் தம்பதியினருக்கு வேறு ஆணிடமிருந்து விந்தையோ அல்லது வேறு பெண்ணிடமிருந்து முட்டையையோ நன்கொடையாக பெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. இதற்காக விந்து மற்றும் முட்டை வங்கி (Sperm and egg Bank) உலகில் காணப்படுகின்றது.

அது மட்டுமில்லாது கருப்பையில் குழந்தையை சுமக்க முடியாத நோய்க் காரணிகளைக் கொண்டவர்களுக்கு வாடகை தாய்மார்கள் (Surrogate Mother) அதாவது பிற தம்பதியினருடைய அல்லது பிற ஆணினது குழந்தையை செயற்கை கருத்தரிப்பு முறையான Test tube முறை மூலம் கருக்கட்டப்பட்ட நுகத்தை  தன் கருப்பையில் சுமந்து பிரசவித்துக் கொடுக்கும் பெண்ணே வாடகைத் தாய் என்று அழைக்கப்படுகிறாள்.

விந்து அல்லது முட்டை நன்கொடை, வாடகைத் தாய், இஸ்லாத்தில் கூடுமா?

மேலுள்ள தகவல்களின் மூலம் செயற்கை கருத்தரிப்பு முறைகளுக்கு தம்பதியினருடைய அல்லாத வேறு நபர்களுடைய விந்து அல்லது முட்டையும் கருத்தரிப்புக்கு பயன்படுத்தப்படுவது தெளிவாகின்றது.

மேலுள்ள அல்குர்ஆன் வசனத்தில் உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்’ என்பதிலிருந்து ஒரு குழந்தையை ஈன்றெடுப்பதற்கு அந்த தம்பதியினரின் ஈடுபாட்டைத் தவிர வேறு எந்த நபரின் பங்களிப்பிற்கும் அனுமதி இல்லை. அத் தம்பதியினருக்கு வேறு ஒருவரின் முட்டையையோ அல்லது விந்தையோ அல்லது கருவறையையோ பயன்படுத்த அனுமதி இல்லை.

விளைநிலம் என்பது விளைச்சலைத் தரக்கூடியது. எனவேதான் எல்லாம் வல்ல அல்லாஹ் மனைவியரை ‘விளைநிலம்’ என உவமையாக்கி மனைவியிடம் மட்டுமே விளைச்சலை விரும்பியவாறு பெற்றுக் கொள்ளுமாறு ஏவுகின்றான்.

ஒருவருக்கு இஸ்லாம் அனுமதித்த ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருந்தால் கருத்தரிப்பிற்கு சாத்தியம் இல்லாத, கருப்பையில் குழந்தையை சுமக்க முடியாத மனைவிக்காக மற்ற மனைவியின் கருவறையில் சோதனைக் குழாயில் கருக்கட்டப்பட்ட நுகத்தை உட்பதிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. காரணம் அந்த கணவரைப் பொருத்தவரை இரு மனைவியரும் அவரது விளைநிலங்களாகும்.

இதிலிருந்து தம்பதியினர் செயற்கை முறையில் குழந்தையை நாடினால் அவர்களின் விந்து, முட்டை அல்லாத வேறு நபர்களினது விந்து அல்லது முட்டையை பாவிப்பது கூடாது என்றும், தம்முடைய விந்து, முட்டை ஆகியவற்றால் உருவான கருவாக இருந்தாலும் வேறு ஒரு கருப்பையில் பதிப்பது அதாவது வாடகைத் தாய் கூடாது எனவும் தெளிவாகின்றது. தம்முடைய குழந்தையின் உருவாக்கத்தை எதிர்பார்த்து தம்பதியினர் அல்லாத மூன்றாவது நபரின் பங்களிப்பிற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *