அலைந்து திரியும் கர்ப்பபை – கௌரி பரா லண்டன்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பண்டைய கிரேக்க தேசத்து கொஸ் என்ற தீவில் ஒர் இளம் பெண் இனம் தெரியாத வலியால் துடித்துக்கொண்டிருந்தாள், உடல் மிகவும் சோர்வாக இருந்தது, நடுக்கத்துடன் கூடிய கொடிய காய்ச்சல் அவளின் உடலை வாட்டி வதைத்தது, மேலும் வலி நெஞ்சை அடைத்தது, காய்ச்சலினால் மனத்தில் ஏற்படும் மாயத்தோற்றங்கள் எல்லாம் மூளையை தாக்கின.

அந்தப்பெண் வலி தாங்க முடியாமல் கிணற்றில் விழுந்து சாகப்போனாள்.

அவளின் தகப்பனார் வைத்தியரை நாடினார். வைத்தியருக்கு பார்த்தவுடனேயே இந்தப்பெண்ணுக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்று தெரிந்து விட்டது, ஏனெனில் இந்த வியாதி வந்த பெண்களை அவர் முன்னரும் பார்த்திருக்கிறார்.

மாதவிடாய் தொடங்கிய பின்னர் திருமணமாகாத பருவப்பெண்களுக்கு வரும் வியாதி தான் இது என்பது அவருக்கு புரிந்து விட்டது. சிறுமிகள் யுவதிகளாக வளரும் வரை அவர்கள் உடல்கள் செழிப்பாக வளர்வதற்கு அவர்களின் உடலுக்கு நிறைய குருதி தேவைப்பட்டது. ஆனால் அவர்கள் செழிப்பாக வளர்ந்த பின் அந்த குருதி அவர்கள் உடலுக்கு தேவையாக இருக்கவில்லை. மீதமாகவிருந்த குருதி அவர்களின் கர்ப்ப பையில் தேங்கியது . ஆகவே அவர்கள் உடல்கள் ஒவ்வொரு மாதமும் மீதமாக இருந்த குருதியை வெளியேற்றியது. அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் உடல்கள் ஆரோக்கியமாக இருக்கும். இல்லாத பட்சத்தில் பிரச்சனை தான்.

இந்தப்பெண்ணின் உடல் அப்படி மீதமான குருதியை வெளியேற்ற படாத பாடு பட்டுக்கொண்டிருந்தது , ஆனால் அந்த குருதி வெளியேறவில்லை. இது அன்றைக்கு இருந்த வைத்தியர்கள் பெண் உடல் பற்றி தெரிந்து வைத்திருந்த விடயம்.

ஆகவே இந்த இளம் பெண்ணின் குருதி வெளியேறாமால் மீண்டும் கற்பபைக்குள் போய் நாடி நரம்புகளுக்குள் புகுந்து உடலை நஞ்சுத்தன்மையாக்கி உணர்வுகளை மழுங்கடித்து விட்டது, அதனால் அந்த வைத்தியர் அந்த பெண்ணின் தகப்பனாரிடம் கூறிய அறிவுரை என்னவென்றால் இந்தப்பெண்ணிற்கு உடனே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான்.

அப்படி செய்து வைத்தால் குருதி வெளியேற வாய்ப்புண்டு என்பது மட்டுமல்லாமல் அந்த பெண் கர்ப்பம் தரிக்கும் போது பெண்ணுடல் ஆரோக்கியம் அடையும் என்பதுவுமாகும்.

அதேவேளை இந்த தீவில் வேறோர் இடத்தில் பல வருடங்கள் திருமணமாகி பல குழந்தைகளை பெற்றெடுத்த பெண் வலிப்பால் துடிதுடித்துக்கொண்டிருந்தாள், அவள் கண்கள்
மேலே சென்று செருகின, வாயில் இருந்து வெண்மையாக நுரை தள்ளியது, உடல் குளிர்ந்தேறியது, அடிவயிற்றை வலி வாட்டியெடுத்தது. அந்தப்பெண்ணின் கணவன் செய்வதறியாது வைத்தியரை நாடினார்.

வைத்தியர் பெண்ணின் முகத்தை பார்த்தார், முகம் ஈரலிப்பாக இருந்தது. பெண்ணின் வயிற்றில் காதைவைத்து கேட்டார் . இந்த வியாதியின் மூலகாரணம் அவருக்கு தெரிந்து விட்டது. உடலுறவு மூலம் கர்ப்பபை ஈரலிப்பு அடைகிறது, ஆனால் இப்படி பிள்ளை பெற்று முடித்து வயதாகி உடலுறவு குறையும் காலத்தில் கற்பபைகள் வறட்சி அடையும் , அப்படி வறட்சி அடையும் போது கற்ப பைக்கு உடலுறவின் மூலம் ஏற்படும் ஈரலிப்பு தேவைப்படும் , அது கிடைக்காத பட்சத்தில் கற்ப பையானது உள்ளிருக்குள் ஈரலிப்பான உறுப்புக்களை நோக்கி நகர்ந்து சென்று அந்த உள்ளுறுப்புக்களை திருகி அந்த உறுப்புக்களில் இருந்து ஈரலிப்பை உறிஞ்சி எடுக்க விளைகையில் அது அந்த பெண்ணின் மரணத்திற்கு கூட இட்டுச்செல்லும் அபாயத்தை ஏற்படுத்தும்.

ஆகவே மருத்துவர் இந்த பெண்ணிற்கு வந்த வியாதியின் மூல காரணம் உடலுறவின் பற்றாக்குறை என்று கணவருக்கு அறிவித்தார்.

மேலும் அலைகின்ற கர்ப்ப பையை திரும்ப அதன் இடத்திற்கு கொண்டு வருவதற்கு பெண்கள் மிகவும் நாற்றமான வாயுக்களை மூக்கினால் இழுப்பதை வைத்தியர்கள் பரிந்துரைத்தனர். இதில் நசுக்கப்பட்ட மூட்டைப்பூச்சிகளில் இருந்து வரும் மணம் மற்றும் எரிந்த மான் கொம்பு என்பவற்றின் மணங்களும் அடங்கும்.

மேலும் அப்பெண்களின் காதில் உலோகங்களை அடித்து சத்தம் எழுப்பி கர்ப்பையை மீண்டும் அதன் இருப்பிடத்திற்கு கொண்டு வரலாம் என்பது ஹிப்போகிரட் வாழ்ந்த காலத்தில வாழ்ந்த த்த்துவஞானியான Xenophon என்பவரின் பரிந்துரையாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்த காலத்தில் மருத்துவ அதிகாரம் ஆண் மருத்துவர்களின் கையில் இருந்தது அவர்கள் அறிவின்படி பெண்களின் நோய்களுக்கான மூல காரணம் அவர்களின் கற்பப்பை என்பதாகும். ஆண்களுக்கு வரும் நோய்களுக்கான மூலகாரணங்கள் பெண்களுக்கு வரும் நோய்களுக்கான மூல காரணங்களோடு ஒத்திருப்பதில்லை என்பதை உறுதியாக சொன்னவர் பண்டைய கிரேக்க அறிஞ்ஞர் ஹிப்போகிரட், அதன்படி பெண்களின் நோய்களுக்கான தீர்வுகள் கண்டடையப்பட்டது, பெண்களின் மகப்பேற்று விடயங்களை அது சம்பந்தமான பராமரிப்புக்களை சகபெண்களே பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்றாலும் அவர்கள் மருத்துவத்தை கற்கவோ பெண்களுக்கு வரும் நோய்கள் பற்றிய ஆராய்ச்சிகள் பற்றி பேசவோ அன்றைய ஆணாதிக்க சமூகம் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.

ஹிப்போகிரட்டிஸ் கோர்ப்பஸ் ( Hippocrates Corpus) என்ற மருத்துவ புத்தகத்தில் பெண்களுக்கு வரும் வியாதி மற்றும் அதன் மூல காரணங்கள் என்ன என்பது பற்றி என்னவெல்லாம் எழுதியிருந்தது என்பதை அன்றைய பெண்களுக்கு படித்து பகுத்தறிய வாய்ப்பில்லை, அவர்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்ட காலம் அது.

ஹிப்போகிரட்டிக் கோர்ப்பஸ் என்ற மருத்துவ நூல் எழுதப்பட்ட காலம் கிறிஸ்த்துவிற்கு முன் ஐந்தாம் நூற்றாண்டு. கிரேக்கத்தில் பிறந்தவர் ஹிப்போகிரட் அன்றைய காலத்தில் மருத்துவத்தின் தந்தை என்றறியப்பட்டவர் அவரின் மருத்துவ அறிவின் திரட்டே அந்தப்புத்தகம்.

கடவுள்களுக்கு மனிதர்கள் மேல் எழுந்த சீற்றமே மனித உடலில் வியாதியாக மாறியது அல்லது கொடிய விலங்குகளின் ஆவி மனித உடலில் புகும் போது மனிதர்களுக்கு வியாதியாக வருகிறது என்ற அன்றைய மூட நம்பிக்கையை ஹிப்போகிரட் தகர்த்தெறிந்தவர், மனித உடலின் சமநிலை குழம்பும் போது உடலில் வியாதிகள் ஏற்படுகிறது என்பதை முதலில் உலகுக்கு எடுத்துரைத்த நபர் ஹிப்போகிரட்டீஸ்.

ஒருவருக்கு வந்த வியாதிகளின் அறிகுறிகளை கண்டுபிடித்து அதன் மூலத்தை ஆராய்ந்து குறிப்பெடுத்து அதற்கு தகுந்த மூலிகை மருந்துகளை பரிந்துரைப்பதும் ஏழை பணக்காரன் படித்தவர் பாமர்ர் என்ற பாரபட்சம் பார்க்காது அவர்களின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படாத வகையில் வைத்தியம்
பார்க்கும் நடைமுறைகளை மருத்துவ உலகில் கொண்டு வந்து பழக்கப்படுத்தியவரும் இவரே. ஆதலினால் இவரின் மதிப்பு அன்று சமூகத்தில் உயர்ந்திருந்தது.

இருப்பினும் பெண்களுக்கு வரும் வியாதிகள் அனைத்தும் கர்ப்ப பையின்
சமநிலை குழம்புவதனால் என்ற தவறான அவர் கணிப்பீடு நோயுற்ற பெண்களுக்கான மருத்துவ தீர்வென்பது பெண்களை மேலும் துன்புறுத்துவதாக அமைந்தது.

அவருக்கு பின்னர் வந்த Galen என்னும் மருத்துவ விஞ்ஞானி மனிதர்களின் நோய்களுக்கு காரணம் கருப்பு பித்தம், மஞ்சள் பித்தம், சளி மற்றும் இரத்தத்தில் ஏற்படும் சமநிலையற்ற போக்கே என்றுரைத்தார்.

ஆகவே பெண்களின் உடலானது பித்தத்தை வெளியேற்ற போதுமான வெப்பத்தை கொண்டிருக்காத காரணத்தினால் அவர்களுக்கு மாதா மாதம் இரத்தம் வெளியேறுகிறது என்று கண்டறிந்ததாக கூறினார்.

முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கிரேகத்தில் பெண்களின் நோய்கள் சம்பந்தமாக ஆய்வுகள் செய்த ஒருவரான Soranus of Ephesus என்பவரே முதல் முதலில் Gynaecology என்ற சொல்லை கண்டுபிடித்தவர். அவர் பெண்களின் கர்ப்பபை பற்றி முன்னர் இருந்த பிற்போக்குவாதங்களையும் மூட நம்பிக்கைகளையும் விலக்கியவர். அவர் ரோம் நகரில் வாழ்ந்தவர்.

அவர் ஹிப்போகிரட்டின் “ பெண் உடலுக்குள் அலைந்து திரியும் பெண்களின் கர்ப்ப பை” என்ற மருத்துவ விளக்கத்தை வெறும் மூட நம்பிக்கை என்று ஒதுக்கினார்.

பெண்களுக்கு வரும் எல்லா நோய்களுக்குமான காரணம் பெண்களுக்கு கர்ப்ப பையின் சமநிலை குழம்புவதனால் அல்ல என்ற விழிப்புணர்வை சமூகத்திற்கு கொடுத்தவர். மற்றும் வியாதிகளினால் அவஸ்த்தைப்படும் பெண்களை மேலும் துன்புறுத்தும் வகையில் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவது மனிதாபிமானமற்றது என்றும் சமூகத்திற்கு எடுத்துரைத்தவர். அதன்நிமித்தம் அவர்களுக்கு ஏற்படும் வியாதிகளுக்கு இலகுவான தீர்வாக மூலிகை குளியல், உடற்பயிற்ச்சி , சத்துள்ள உணவுகளை உட்கொள்ளல் , மற்றும் எண்ணெய் மசாஐ் , உரத்த வாசிப்பு என்பவற்றை முன்வைத்தவர், அவருடைய எழுத்துக்கள் ரோமன் மொழியில் இருந்து ஆறாம் நூற்றாண்டில் லத்தீனுக்கு மொழி பெயர்க்கப்பட்டது.

பண்டைய கிறிஸ்த்துவ மதமானது பெண்களை ஆண்கள் மருத்துவ பரிசோதனைக்காக தொடுவதை அனுமதிக்கவில்லை இருப்பினும் Soranus எழுதிய Gynaecology என்னும் பிரதி, பிரசவம் பார்க்கும் மருத்துவிச்சிகளுக்கு மிகவும் பயனுள்ள கையேடாக அமைந்தது. எது எப்படி இருந்தாலும் ஆதிப்பெண்ணான ஏவாள் செய்த பாவத்தின் பலனே பெண்கள் அனுபவிக்கும் அத்தனை வலிகளுக்கும் காரணம் என்று நம்பியிருந்த சமூகம் பெண் ஒவ்வொரு மாதமும் ரத்தம் சிந்துவதாலும் அசுத்தமானவளாகவும் இரண்டாம் தர பிரஜையாகவுமே பார்த்தது.

கிட்டத்தட்ட பதினொராம் நூற்றாண்டில் Salerno என்ற தெற்கு இத்தாலி நகரில் பெண்களும் மருத்துவம் கற்க அனுமதிக்கப்பட்டார்கள். Salerno ல் முதல் முதலில் மருத்துவம் படித்த பெண் பெயர் Trota . Condition of women and Treatments of women என்ற புத்தகத்தை எழுதியதாக தெரியவருகிறது.

14 ஆம் நூற்றாண்டளவில் ஐரோப்பா முழுவதும் பெண்கள் மருத்துவம் படிப்பதற்கும் மருத்துவர்களாக வேலை பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. கிறிஸ்த்துவ மதப்போதனைகள் பெண்களை மீண்டும் சுத்தம் அற்றவர்களாகவும், சிந்தனை வளம் மற்றும் மூளை வளம் அற்றவர்களாகவும் சித்திரித்து புறகணித்து அவர்களின் இருப்பை பல்வேறு வழிகளில் சின்னாபின்னமாக்கியது.

1405 ல் Christine de Pizan பிரான்சில் அரசவைப்புலவராகவும் , அரசறிவியல்
சிந்தனாவாதியுமாக விளங்கிய பெண், கூடவே ஓர் பெண்ணியவாதியாகவும் திகழ்ந்தார்.
அந்த காலகட்டத்தில் இத்தாலியை சேர்ந்த Cecco d’ Ascoli என்ற ஆண் மருத்துவர் கடும் பெண் வெறுப்பை தனது நூல்களில் பிரசுரித்து பிரச்சாரப்படுத்தி வந்தார்.

அந்நூல்களில் அவர் பெண்கள் இயல்பிலேயே குறைபாடுள்ளவர்கள் அதனானாலேயே அவர்களுக்கு மாதவிடாய் என்னும் பிரச்சனை இருக்கிறது, மேலும் காட்டு விலங்குகளுக்கு இருக்கும் கடவுள் நம்பிக்கையை விட அவர்களுக்கு குறைவான நம்பிக்கையே இருக்கிறது, அவர்கள் திமிர் பிடித்தவர்கள், பேராசைக்காரிகள் , புத்திக்கூர்மை அற்றவர்கள், பைத்தியக்காரிகள், அவர்கள் மனித இதயங்களில் நஞ்சை புகுத்த வல்லவர்கள். என்றெல்லாம் எழுதினார்.

ஏற்கனவே பெண்வெறுப்பை மையப்படுத்தும் மத வெறியினால் ஆட்கொள்ளப்பட்ட ஐரோப்பிய சமூகம் அவர் கருத்துக்களை சரி என்று ஏற்றுக்கொண்டு பெண்களின் இருப்பை மேலும் வதைக்குள்ளாக்கியது.

இந்த காலகட்டத்தில் Christian de Pizan ற்கு Cecco d’ Ascoli வின் பெண்ணெதிர்ப்பு பிரச்சார எழுத்து கடும் சினத்தை உண்டுபண்ணியது“ பெண்களின் வாழ்வென்பது வேலியற்ற திறந்த பழத்தோட்டாமாக இருக்கிறது என்றும் அதை ஆண்களின் கோரப்பிடியில் இருந்து பாதுகாக்கும் நேரம் நெருங்கி விட்டது என்றும் கூறி“ The book of the City of Ladies” என்ற நூலை எழுதினார். இந்த நூலில் கற்பனையான பல பெண் ஆளுமைகளை சித்தரித்து அவர்களுக்கு குரல் தந்து வடிவமும் அளித்தார். அந்த கதாபாத்திரங்களை நேர்மையானவர்களாகவும் புத்திசாலிகளாகவும் அனபானவர்களாகவும் சித்தரித்தார்.

அந்த காலகட்டத்தில் Christian de Pizan ற்கு St Albert Magnus என்ற Germany ஐ சேர்ந்த இன்னொரு கத்தோலிக்க மதகுருவினால் எழுதப்பட்ட “ Secrets of Women” என்ற புத்தகத்தில் பெண்களைப்பற்றி எழுதப்பட்ட பொய்ப்புனைவுகளும் கடும் கற்பனைகளோடு கூடிய அவதூறுகளும் மேலும் எரிச்சலை அளித்தது.
பொதுவாக பெண்கள் தீய சக்தி, கொடூரமானவர்கள், அவர்களை தீங்கானவர்களாக ஆக்குவது அவர்களின் மாதவிடாய் தான், மாதவிடாய் உள்ள காலங்களில் பெண்களின் ஓரக்கண்பார்வை கூட விலங்குகளுக்கு நஞ்சை பாய்ச்சும், தொட்டிலில் உள்ள குழந்தைகளை கூட பாதிக்கும், அவர்கள் பார்வை பட்ட ஆண்களில் அந்த பார்வை தொழுநோயையும் புற்று நோயையும் ஏற்
படுத்தும். உடலுறவின்போது பெண்களின் மனதில் பயங்கரமான கற்பனைகள் தோன்றும், அப்பேர்ப்பட்ட உறவின் போது பெண்கள் கருத்தரித்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அங்கவீனர்களாக குறைபாடுகளோடு பிறக்கும் என்பதும் அவர் கருத்து. ஒரு பாம்பின் விஷமானது எப்படி அந்த பாம்பை பாதிக்காதோ அப்படித்தான் பெண்களின் அசுத்தமும் அவர்களின் தீய சிந்தனைகளும் அவர்களைப்பாதிக்காது என்றனர்.

பெண்கள் மருத்துவர்களாக வேலை பார்க்க கூடாது என்ற சட்டத்திற்கு புறம்பாக 1322 ல் வேலை பார்த்து பல பெண்களின் நோய்களை குணப்படுத்திய Jacob Felice என்றறியப்பட்ட பெண் மருத்துவர் சட்டத்தால் தண்டிக்கப்பட்டார்.

1346 ல் bubonic plague என்ற தொற்று நோயானது ஐரோப்பா முழுவதையும் பீடித்தது. அதில் 20 மில்லியன் மக்கள் இறந்தனர். Middle Ages எனப்படும் இந்த காலகட்டத்தில் இப்படியான தொற்று நோய்கள் நுண்கிருமிகளினால் தொற்றுகிறது என்பதை அறியாத மக்கள் இது கடவுளுக்கு மக்கள் மேல் ஏற்பட்ட விரோத்தினால் வந்தது என்று பயந்தனர். சாட்டு இல்லாவிட்டால் சாவில்லை என்பார்கள். ஏற்கனவே பெண்வெறுப்பில் ஊறிக்கிடந்த சமூகம் இப்பேர்ப்பட்ட பெரிய மனித் குல அழிவிற்கு காரணம் பெண்களின் சூழ்ச்சிக்கார மனமும் சுத்தம் அற்ற உடலும் என்று திட்டவட்டமாக நம்பினர், இந்த நிலையில் இருந்து சமூகத்தை மீட்டெடுக்க வேண்டுமேயானால் முதலில் பெண்களின் தீய நடத்தையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்று அன்றைய ஆண் அறிவியல் மேதைகள், மருத்துவர்கள் மற்றும் புனித மதகுருமார்கள் தீவிரமாக சிந்தித்து பெண்கள் மேல் மேலும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர்

இன்றைய செக் றெப்பப்ளிக் என்ற இடத்தில் 1474 ல் Heinrich Kramer என்பவர் அதனது இளவயதில் கத்தோலிக்க பாதிரியாராக பணிசெய்து வந்தார். மதமும் மதம் சார்ந்த த்த்துவங்களிலும் வல்லவராக விளங்கினார். அவரது முப்பத்தி நாலாவது வயதில் அவருக்கு போப்பாண்டவர் மத்த்திற்கு எதிராக (heresy)பிரச்சாரம் செய்யும் நபர்களை தண்டிக்கும் உரிமையை வழங்கினார்.

1884 ல் சூனியக்காரிகளையும் மதத்திற்கு எதிரானவர்களாக கத்தோலிக்க மதபீடம் அறிவித்தது. பலவீனமானவர்கள் மற்றும் தீய எண்ணங்கள் கொண்டவர்கள் சாத்தானோடு சேர்ந்து வேலை பார்க்க கூடிய எல்லோரையும் சட்டத்தின் மூலம் தண்டிக்கலாம் என்றாயிற்று.

பலவீனமானவர்கள் மற்றும் தீய எண்ணம் கொண்டவர்கள் பெண்கள் இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்?

Kramer 1486 ஜேர்மனியில் தனது சொந்த நகரான Cologne என்ற இடத்தில் Malleus Maleficarum ( The Hammer of Witches) என்ற புத்தகத்தில் சூனியத்தை கையாளும் பெண்களும் மத்த்தை மறுப்பவர்களுக்கும் ஓரே தண்டனைதான்: மரண தண்டனை என்றார்.

பெண்களின் பிரசவம் பார்க்கும் மருத்துவிச்சிகள் பெண்களின் மகப்பேறுகால வலிகளை குறைக்கவும் தாய் சேய் நல போஷாக்கிற்கு உதவும் வகையிலும் பல்வேறுமூலிகைகளை பாவித்து மருத்துவம் செய்து வந்தனர். பெண்கள் மருத்துவர்களாக பணிபுரிய தடை விதிக்கப்பட்ட கால கட்டத்தில் இவற்றை இரகசியமாகவே செய்து வந்தனர். பண்டைய காலத்தில் குழந்தை இறப்பு விகிதம் அதிகம். Kramer தனது புத்தகத்தில் பிரசவத்தின்போது குழந்தைகள் இறப்பதற்கு மூல காரணமாக இருப்பது மகப்பேற்று மருத்துவிச்சிகளின் சூழ்ச்சியே என்று எழுதினார்.
அதிஷ்ரவசமான Kramer ன் இக்கற்பனை கருத்தை சக கத்தோலிக்க மத குருமார்கள் எதிர்த்தனர், மேலும் கத்தோலிக்க மத இறையியல் கருத்துக்களை தன் வசதிக்கேற்றாற்போல் இவர் திரிபுபடுத்தி எழுதுவது சரியில்ல என்று கண்டித்தனர். துரதிஷ்ரவசமாக அன்று புதிதாக கண்டுபிடித்த Gutenberg printing press மூலம் அவர் புத்தகம் 1500 பிரதிகள் அச்சிடப்பட்டு பரவலாக ஐரோப்பாவில் வாசிக்கப்பட்டு பேசப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஐரோப்பிய கிராமங்களில் யாரொருவருக்காவது பெண்கள் மேல் கோவம் இருந்தால் அவர்களை சூனியக்காரி என்று அடையாளப்படுத்தினால் அவர்கள் வீடுகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் சிறையில் சித்திரவதைக்குட்படுத்தப்படுவார்கள் என்ற நிலை உருவானது.

பதினாறாம் நூற்றாண்டில் இருந்து பதினேழாம் நூற்றாண்டு வரையிலும் கிட்டத்தட்ட நாற்பத்து ஐயாயிரம் பேர் சூனியக்கார்ராக இனம் காணப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்கள்.இதில் எண்பது வீதமானவர்கள் பெண்கள். பெண்களை சூனியக்காரிகளாக சித்தரித்த ஐரோப்பிய மதவெறி பிடித்த ஆணாதிக்க சமூகம் பெண்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச மருத்துவ அறிவுக்கும் முடிவு கட்டியது. 1542 ல் இங்கிலாந்தில் King Henry VIII என்ற அரசன் witchcraft என்ற Act ஐ அமுலாக்கி மருத்துவத்தில் ஈடுபடும் பல்லாயிரம் பெண்களுக்கு மரண தண்டனை வழங்கும்படி செய்தார்.

மத்திய தர வயதை தாண்டிய பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் மனவுளைச்சல் மற்றும் ஹோர்மன்கள் மாற்றமடைவதனால் ஏற்படும் மனக்குழப்பம் அதனால் ஏற்படும் கோபம் , எரிச்சல் என்பனவற்றையும் சரியாக புரிந்து கொள்ளாத பண்டைய ஐரோப்பிய சமூகம் அவர்கள் மேல் சூனியக்காரிகள் பட்டத்தை இலகுவாக சூட்டி அவர்களை குற்றவாளிக்கூண்டுல் ஏற்றியது.

அரைகுறை மதபோதனைகளாலும் மூட நம்
பிக்கைகளாலும் பகுத்தறிவு போதாமையினால் பாதிக்கப்பட்ட சமூகத்தை மேலும் அறிவற்ற சமூகமாக மழுங்கடிக்கும் வகையில் பண்டைய கிரேக்க அறிஞ்ஞர்களான Hippocrate , Plato மற்றும் Aretaeus. இவர்கள் தங்கள் நாடகங்களில் ஹிஸ்டீரியா ( ஹிஸ்டீரியா எனபது கிரேக்க மொழியில் கர்ப்பபை என்பதை குறிக்கும் சொல்) என்பது எவ்வாறு பெண்களின் உடலையும் மனத்தையும் பாதித்து அவர்களை பைத்தியக்காரிகள் ஆக்குகிறது என்பதை பல நாடகங்களில் அரங்கேற்றி இருந்தார்கள். இதுவும் மேலும் பகுத்தறிவு அற்றிருந்த சமூகத்தை மூளைச்சலவை செய்தது.

கிட்டதட்ட பதினேழாம் நூற்றாண்டு வரையிலும் பெண்கள், தறிகெட்டலையும் அவர்களது கர்ப்பையின் ஆளுகைக்கு உட்பட்டு ஹிஸ்டீரியா என்ற மனநோயினால் பாதிக்கப்பட்ட அரைகுறை மனிதர்களாகவே கணிக்கப்பட்டார்கள்.

இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தில் பெண்கள் அவர்களுக்கான மருத்துவ உரிமையை பெற்றுக்கொள்ளவும் , அவர்களின் உடல் தன்மைகள் பற்றிய உண்மை நிலையை விளங்கி அதைப்பற்றிய ஆய்வுகள் நடத்தி பெண்களின் மருத்துவ நலனில் அக்கறையற்ற ஆண்கள் ஆதிக்கத்தில் இருந்து மருத்துவத்தை மீட்டெடுக்கவும் இன்னும் பல்லாயிரம் பெண்கள் உலகெங்கும் போராடியிருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உசாத்துணை : “Unwell Women “
A Journey Through Medicine and Myth in a Man-Made World”

Authour : Dr Elinor Cleghorn : Feminist Culture Histrorian : University of Oxford See less

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *